Sunday 26 March 2017

சென்னி நிமிர்ந்திடும் சீர்மிகும் பாரதம்

சென்னி நிமிர்ந்திடும் சீர்மிகும் பாரதம்!
Quit India தீர்மானத்தை ஒட்டிய காந்திஜியின் 1942 பேச்சிலிருந்து சில பகுதிகள்.
இங்கிலாந்திலிருந்து இருங்கடல் தாண்டி
இந்தியா வந்து இன்றெமை ஆளும்
ஆங்கிலேயனை விட்டு விலகென
அடித்துச் சொல்லும் அண்ணலே நீங்கள்
இருபதில் இருந்த அந்த காந்தியா?
இன்னமும் அஹிம்சை உண்டே அன்றோ?
….     ---------  0000000-------
அந்த காந்திதான்; அதே காந்திதான்!
அடிப்படைக் கொள்கையில் மாற்றம் இல்லை!
அஹிம்சையில் நாட்டம் அன்றும் இன்றும்!
அழுத்தமும் கூட! அதிமிகத் தீவிரம்!
ஆண்டவன் தந்த அருட்கொடை அஹிம்சை!
அதற்கும் எனக்கும் வந்தது சோதனை!
இம்சையில் பூமி பற்றி எரியுது!
எங்கணும் அவலக் கூக்குரல் கேட்குது!
இறைவன் அளித்தான் திறமை எனக்கு.
முறையாய்ச் செலுத்தி முனையா விட்டால்.
வரத்தைப் பெற்றும் வாளா இருந்தால்
தரணியும் தூற்றும்; தலைவனும் நோவான்!
வரலாறு பலவும் விடுதலைப் போர்களை
வரைந்தது உண்டு; அவற்றில் தூயதாம்
மக்கள் இணைந்த மாசெதும் அற்ற
வீரப் போரெனில் இதுதான் அஃது!
விடுதலைப் போரில் வெற்றியைப் பெற்றிட
உபாயம் ஒன்றினை உரைக்கின்றேன் நான்!
“இப்போ திங்கே இந்தக் கணம் முதல்
விடுதலை பெற்றோம்; சுதந்திர புருஷர்!
ஏகாதி பத்தியம் எம்மை நசுக்கி
ஏறி மிதித்த நிலை இனியில்லை”
இந்த உறுதி பூணுவீ ரானால்
இந்த நிமிஷமே சுதந்திரக் காற்று!
“சுதந்திர வேட்கையைத் தந்தனன் இறைவன்!
சும்மா இருக்கும் சுகம் இனி இல்லை!
உணவு உடைக்கு இருப்பதற் கினிநான்
உம்மைச் சார்ந்திரேன்; உறுதியாய்ச் சொல்வேன்!
விரும்பினால் எமைநீர் கொல்லவும் கூடும்!
மரணம் தப்பினால் மாண்புடன் வாழ்வேன்!”
அடிமை இப்படித் துணிந்து சொல்வானேல்
படீரெனத் தெறிக்கும் பாவ விலங்கு!
----------------------00000000000-----------------
சின்ன மந்திரம் செப்பி வைக்கின்றேன்!
‘செய்க அல்லது செத்து வீழ்ந்திடுக!’
இதயப் பேழையில் இவ்வரு மந்திரம்
செதுக்கி வைத்திடுக! சீரிய போரில்
அடிமை விலங்கை அறுத்தே எறிவோம்!
அல்லது இந்தப் புனித முயற்சியில்
அழிந்தே போவோம்! அடிமையாய் வாழும்
அவலம் என்பது இனிமேல் இல்லை!
உயிரை இழந்தவன் உயிர்பெறு கின்றான்!
மயர் வுறுபவனோ மரணமே அடைகிறான்!
பயந்து நடுங்கிப் பலமுறை சாபவன்
உயர்வுறு சுதந்திரம் உறுவது எங்ஙனம்?

ஊடகத் தாரே! உமக்கொரு வார்த்தை!
இன்னதான் எழுது; இதைஎழு தாதே!
என்றெலாம் துரைத்தனம் இதழ்களை ம்ரட்டும்!`
எத்தனை துன்பம் ஏற்க மறுத்தால்!
அச்சகம், உடைமைகள், அனைத்தும் பறிமுதல்!
இந்தத் துன்பம்நீர் ஏற்றிடல் வேண்டா1
எளிதாய் ஒருவழி சொல்வேன்; கேண்மின்!
அரசு வெளியிடும் அறிக்கைப் பொய்களை
பிரசுரம் செய்திட மறுத்து நில்லுங்கள்!
தேனெனும் சுதந்திரம் பெற்றதன் பின்னரே
பேனா பிடிக்கப் பிரதிக்ஞை பூணுங்கள்!

மன்னர் வர்க்கமே! உங்களுக்கும் தான்!
மண்டியிட் டந்நியன் முன்னிற் காதீர்!
அரசர்கள் மக்கள்தாம்! அதை உணருங்கள்!
அரசுக்கு இதுபோல் அறிக்கை விடுங்கள்!
“பனியின் பாறை சரிந்துவீழ்ந் தாற்போல்
பாரத மக்கள் வெகுண்டெழுந் தார்கள்!
மக்கள் சக்திமுன் மாபெரும் ஆட்சிகள்
மடிந்து போனதை மனக்கொளல் வேண்டும்!
வாழ்ந்தோ மெனினும் வீழ்ந்தே போயினும்
மக்கள் எவ்வழி மன்னர்யாம் அவ்வழி!

அரசுப் பணியில் அமர்ந்திருப்போரே!
விடுத்திடல் வேண்டாம் விலகல் கடிதம்!
நீதி அரசர் ரானடே காட்டிய
நேரிய பாதையைக் கைக்கொள் வீர்கள்!
ஏற்றுள பாதை காங்கிரஸ் பாதை!
இரகசிய ஆணைகள் எதனையும் ஏற்கோம்
என்பதை மட்டும் எடுத்துரை யுங்கள்!
என்னதான் செய்யும் இங்கிலாந் தரசு?

போர்ப் படையாரே! பொங்கி எழுந்து
புரட்சிகள் எதுவும் செய்திடல் வேண்டாம்!
ஆணை இடட்டும்; நியாயமாய் இருந்தால்
அடிபணி யுங்கள்; அட்டிஒன் றில்லை!
ஒப்புதற் கில்லா ஒரேஓர் ஆணை
துப்பாக்கி ஏந்துதல் சோதரற் கெதிராய்!

மாணவ மணிகாள்! நீவிரென் செய்கிறீர்<
பேராசிரியப் பெருந்தகை யாரிடம்
சென்றிவ் வார்த்தை செப்பி நில்லுங்கள்!
“நாங்கள் காங்கிரஸ்; நீங்கள் எவ்வழி?
காங்கிரஸ் எனினும் பணிவிடல் வேண்டா;
கற்பித் திடுங்கள்; கற்கிறோம் நன்றாய்!
முன்னே  நின்று சுதந்திரப் போரை
முன்னெடுக் கின்றோம்; வாழ்த்துக என்றே!

இத்தனை பேர்களும் இந்த வழிகளை
இன்னல்கட் கிடையிலும் ஏற்று நடந்தால்
அன்னியர் ஆட்சி சீக்கிரம் விலகும்!
சென்னி நிமிர்ந்திடும் சீர்மிகும் பாரதம்!