Monday 21 November 2016

நாயகன்

நாயகன்
கூட இருந்தவர்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்,
சுற்றி இருந்தவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
என்ன விஷயமென்று இவனுக்குப் புரியவில்லை.
முன்னுள்ள பணியொன்றே முக்கியமாய்த்தான் கருதி
முழுமூச்சாய் முனைந்தான்; முடித்து விட்டான் வெற்றியுடன்!
செயல் முடித்த காரணத்தால் ஜெயக்கொடியை ஏந்தி வந்தான்.
பார்த்திருந்தோர் இப்போது பரபரப்பாய்ச் சூழ்ந்தார்கள்!
முடியாத செயலாச்சே? முன்னெவரும் செய்ததில்லை!
எப்படி நீ சாதித்தாய்? என்ன மர்மம் என்றார்கள்.
மந்திரம்தான் அறிவாயா? மாயம் எதும் செய்தாயா?
அரை நிமிஷம் சிந்தித்தான்; அலட்டலின்றித் தான்சொன்னான்.
மந்திரமும் தெரியாது; மாயம் எதும் செய்யவில்லை!
தொடங்கினேன்; தொடர்ந்தேன்; முடித்து விட்டேன் அவ்வளவே!
முடியாது எனும் சேதி முன்பெனக்குத் தெரிந்திருந்தால்
ஒருவேளை தொடங்காமல் ஓய்வாகக் கிடந்திருப்பேன்!
சிரித்துக் கொண்டிருந்தவர்கள் சிலிர்த்தெழுந்து நின்றார்கள்!
நகையாட வந்தவர்கள் நாயகனே என்றார்கள்!


Monday 14 November 2016

ஓதப் புறப்பட்டார் வேதத்தை!

ஓதப் புறப்பட்டார் வேதத்தை!
ஆயிரம் ஐந்நூற்றுக் கற்றைகள்-பே(ர்)
      ஆசையோ டடுக்கிப் பதுக்கினர்!
நாயகன் ஆணையைக் கேட்டதும்
      நடுங்கிக்    கலங்கித் துடித்தனர்!
தீயினில் ஆகுதி செய்தனர்;-சிலர்
      திருப்பதி உண்டியல் சேர்த்தனர்!
தூயநீர்க் கங்கை நீராட்டினர்;-சிலர்
      தூக்கி எறிந்தனர் குப்பையில்!
கள்ளப் பணத்துக்கு நாணியே
      கண்ணைப் புதைத்தவர் தேம்பினார்!
வள்ளலெனச் சிலர் மாறினர்!
      வாரி வழங்கினர் ஏழைக்கு!-மழை
வெள்ளத்திலே நனை ஆடுகள்-கண்டு
      வேதனை வார்த்தைகள் கொட்டினர்!
உள்ளத்தை விற்றிட்ட சாத்தான்கள்
      ஓதப் புறப்பட்டார் வேதத்தை!




      

Friday 4 November 2016

பேணி வளர்ப்போம் பூச்சிகளை! நாணி ஒளிக மதிகெட்டோர்!

புதியதாக ஒரு கருத்தை முன்வைக்கிறோம். முதலில் மக்கள் அதை அலட்சியப்படுத்துவார்கள்; அடுத்து அதை எள்ளி நகையாடுவார்கள்; அடுத்த கட்டத்தில் அதைத் தீவிரமாக எதிர்ப்பார்கள். நிறைவுக் கட்டத்தில் நம்மை வியந்து பாராட்டி  நம்மோடு சேர்ந்து கொள்வதில் பெருமைப் படுவார்கள். அத்தகைய கருத்தைத்தான் முன்வைக்கத் துணிகிறேன்.
மனித உரிமைக்காரர்கள் மிகத் தீவிரமாக, மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார்கள். என்னதான் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்திருக்கட்டுமே, ரயில்களைக் கவிழ்த்திருக்கட்டுமே, வெடி வைத்திருக்கட்டுமே, குற்றம் இழைத்தவர்களுடைய  மனித உரிமைதான் முக்கியம் என்று செயல்படுகிறார்கள். பாராட்டத் தக்கதுதான். அதே போல், விலங்குகள் நல அமைப்புகள் இருக்கின்றன.   தெருநாய்கள் நூற்றுக் கணக்கானவர்களைக் குதறி சதையைப் பிடுங்கி, ஏன், கொல்லவேதான் செய்யட்டுமே, அவற்றினுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது “நாய”மானதே.
எனது பிரச்சினை எல்லாம் ஏன் இந்தக் கரிசனம் பூச்சிகளுக்குக் காட்டப்படுவதில்லை என்பதே. பொழுது விடிந்தால் பொழுது போனால் அரசாங்கம் கொசுக்களின் பிறப்பையே தடுப்பதற்காகப் பிரசாரம் செய்கிறது. நமக்கு டெங்கு வருமாம். காய்ச்சல் வருமாம். நமது நலத்துக்காக பூச்சிகளின் நலத்தைக் காற்றில் பறக்கவிடுவது என்ன நியாயம்? டி.வி.விளம்பரங்களைப் பாருங்களேன்.”ஏன் ச்சுன்ன ச்சுன்ன கொசுவெல்லாம் உன்னைக்கண்டு பயப்படமாட்டேங்குது?” என்று ஒரு சிறுவன் தந்தையைக் கேட்கிறான். இன்னொரு சிறுவனுக்கு கணக்குப் போட கஷ்டமாக இருக்கிறதாம். அதற்காக கொசு கொல்லி அட்டையை வைக்கிறாள்.தாய். இளம் வயதிலிருந்தே,”பூச்சி விரோத” மனோபாவத்தை சிறுவர்களிடையே வளர்த்து விடுகிறார்கள்? என்ன சுயநலம்? என்ன கொடுமை? அவை வாயில்லாப்பூச்சிகள் என்பதால்தானே இப்படி எல்லாம் நடக்கிறது? கொசு, மூட்டைப்பூச்சி, கரப்பான் பூச்சி எல்லாம் உடன் உறை உயிரிகள்தாமே? இதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்?
என்னுடைய கோரிக்கை உடனடியாக பூச்சிகள் நல வாரியம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். பூச்சிகள் நலத்துக்கான சட்டம் இயற்றப்பட வேண்டும். பூச்சி வதை, அல்லது வன்கொடுமை மிகக் கடுமையாகக் கருதப்பட்டு புகாருக்குள்ளானவர்கள் உடனடியாகச் சிறையில் அடைக்கப்பட வேண்டும்-விசாரணை ஏதும் இல்லாமல். அந்தச் சிறைகளில் பூச்சிகள் ஏராளமாக வளர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் யாரும் ’”பாளையங்கோட்டை சிறையிலே பாம்புகளுக்கும் பல்லிகளுக்கும் துணையாக என்று பெருமையாகப் பேசிக்கொள்ள முடியாது. பூச்சிகள் நலத்துக்காக 15000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் இதில் பெருச்சாளி நலன்களும் அடங்கும். இங்கே எங்கே பெருச்சாளி வந்தது என்று கேட்காதீர்கள். வேண்டுமானால் இலாக்காவின் பெயரை பூச்சி மற்றும் எலி, பெருச்சாளி நல இலாக்கா என்று வைத்துக்கொள்ளலாம். பெருச்சாளி மந்திரி என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளப்போவதில்லை. இந்த 15000 கோடி ரூபாயில் பெருச்சாளி வளர்ப்பு மற்றும் நலனுக்காக கணிசமான தொகை ஒதுக்கப்பட வேண்டும்.. (இதில் ஊழல் பெருச்சாளிகள் தங்களுக்குப் பங்கு கேட்காமல் கவனமாக இருக்க வேண்டும்.) எலிகளின் பாதுகாப்பைப் பொருத்தவரை, அவை முன்னெச்சரிக்கையாக இருப்பதற்காக, நாட்டில் உள்ள அத்தனை பூனைகளுக்கும் மணி கட்ட வேண்டும். (Jobless barber shaving the cat  என்ற பழமொழி உங்களுக்கு நினைவுக்கு வந்தால் நான் என்ன செய்யமுடியும்?) இதற்கான பணியாளர்கள் தனியாக நியமிக்கப்பட வேண்டும் 100 நாள் திட்ட பணியாளர்களை இதற்குப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. (அது வேறு; இது வேறு!)
இதற்கான ஒரு பெட்டிஷனை இணையத்தின் மூலம் பிரதமருக்கு அனுப்பலாம் என்று இருக்கிறேன். 1கோடி கையெழுத்துகள் தேவை. ஆதரவு தருவீர்கள்தானே? பூச்சி பூச்சி என்றால் யாரும் பயப்பட மாட்டார்கள். நமது ஒன்றுபட்ட வலிமையைக்காட்டியே ஆக வேண்டும்.
பேணி வளர்ப்போம் பூச்சிகளை!

நாணி ஒளிக மதிகெட்டோர்! 

Thursday 3 November 2016

யானடி வீழ்ந்தேன்!

யானடி வீழ்ந்தேன்!
(ஹி..ஹி..1962லே எழுதினது.)
பாலாவி என்னமெலி நூலாடை தரிக்கின்ற
      பாவை உனதடியேன்; எழிற்பார்வைக்கும் அடியேன்!
காலேஜு சென்றிடநீ காலெடுத்து வைக்கின்ற
      கவர்ன்மெண்ட்டு பஸ்ஸுக்கும் கண்டக்டர்க்கடியேன்!
சீரான பாதமலர் படுமுன்றன் எழிலான
      ஸ்லிப்பருக்கும் அடியேன்; ஷிஃபானுக்கடியேன்!
வாராமல் வாரிவிட்ட கூந்தலுக்கும் பூவிற்ற
      மலர்க்காரப் பாட்டிக்கும் பேரனுக்கும் அடியேன்!
தித்திக்கும் மாலா உன் பேர்சொல்லும் பிச்சம்மாத்
      தோழிக்கும் அடியேன்; அவள் தம்பிக்கும் அடியேன்!
கத்தியைப்போல் பிரம்புசுற்றிக் கனல்கக்கி வருகின்ற
      காலனுன்றன் அப்பாவின் கைத்தடிக்கும் அடியேன்!
இனியகரம் சுமக்கின்ற புத்தகத்துக் கட்டுக்கும்
      எழுதியபே ராசிரியர் எல்லார்க்கும் அடியேன்!
மனமுவந்து சொன்னாயே ‘இடியட்டு’ என்கின்ற
      வார்த்தைக்கும் அடியேன்; வாய்மலர்க்கும் அடியேன்!