Wednesday 20 March 2019

எப்படி நான் மறந்தேன்?


எப்படி நான் மறந்தேன்?

பாதை ஒன்றில் பரபரப்பாகப் பயணம் புறப்பட்டேன்!
பாதி வழியில் திடுமெனநின்றேன்; எங்கே போகின்றேன்?
ஏதோ ஒன்றை நோக்கித்தானே  இவ்வழி நடக்கின்றேன்?
ஏதது என்பது ஞாபகம்இல்லை; எப்படி நான்மறந்தேன்?

வழியில் பலபல கோலகலங்கள்! வாண வெடிச்சப்தம்!
குழப்பக் குரல்கள் கூச்சல்நெரிசல் ஆங்காங் கிருக்கின்ற!!
விழவில் தவறிய குழந்தையைப்போலே அழுது தவிக்கின்றேன்!
“அழுகையை நிறுத்து; கையைப்பிடி”என ஆரிங் கழைப்பார்கள்?

வந்த வழியைத் திரும்பிப்பார்த்தால் கலக்கம் மலிகிறது!
எந்த இடத்தில் துவங்கியபயணம் என்பதும் மறந்தாச்சு!
சொந்த இடமென் றொன்றுஇருக்கணும்; அதுதான் தெரியவிலை!
நொந்து தவிக்கும் மனதுக்கமைதி எப்படிக் கிடைத்திடுமோ?