Sunday 8 March 2020

மனமும் மகாகவியும்-1 உபசாந்தி லோகம்


மனம் என்னும் மோஹினியிடத்து பாரதிக்குத் தீராக் காதல். ,தான் வேறு தன் மனம் வேறு என்ற துவைத சிந்தனை மேலோங்கியவன் அவன்.. ஓயாத கவலையினால் அவள் படும் வேதனையைக் கண்டு பொறுக்காமல்,கவலையே இல்லாத உபசாந்தி லோகத்துக்குப் போக முனைகிறான் அவன். ஆனல் மனமோ,கவலையற்ற பூமி  என்றதுமே நடுங்குகிறது. அங்கு போக ஒட்டாமல் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லித் தட்டிக் கழிக்கப் பார்க்கிறது. பாரதி மனத்தின் எண்ணத்தை நிராகரிக்கிறான். “சீச்சீ ! பேதை மனமே!. உனக்கு ஓயாமல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேதனைகளையும் உளைச்சல்களையும் கண்டு இரங்கி,நான் உன்னைச் சிறிது நேரம் அமைதி உலகத்துக்குக் கொண்டு போய் வைத்துத் திரும்பலாம் என்று உத்தேசிக்கிறேன்.அதற்கு நீயே ஆக்ஷேபம்.சொல்ல வருகிறாயா?” என்று கண்டிக்கிறான்.
உபசாந்திக் கோட்டை வாயிலிலேதான் உண்மை தெரிய வருகிறது மனம் என்னும் வஸ்து அங்கு உள்ளே செல்லுமானால் அக்கினி லோகத்திலே பிரவேசித்த பஞ்சுப் பொம்மை மாதிரிப் பொசுங்கி நாசமடைந்து விடுமாம்.
உபசாந்தி லோகம் என்ரதும் மனம் நடுங்கியதற்கும், போக வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்ததற்கும் காரணம் பாரதிக்குப் புரிந்தது. மனத்தைக் கொன்று விட்டுத் தான் இன்பம் அடைவதில் பாரதிக்குப் பிரியமில்லை.
மனத்தின் கவலைகளையும் உளைச்சல்களையும் பற்றி யோசித்தேனே தவிர,அதன் மூலமாக்க் கிடைத்திருக்கும் பெரிய பெரிய நன்மைகளைச் சிந்தித்தேனில்லை. இந்த உலக வாழ்க்கை மனத்தினால்தானே எய்திற்று? எத்தனை கோடிக் கவலைகள் இருப்பினும் பெரிதில்லை. மனம் செத்து நான் தனியே வாழ்வதாகிய உபசாந்திலோகம் எத்தனை அரியதாக இருப்பினும் இது வேண்டாம் என்று தீர்மானம் செய்துகொண்டேன்.” என்கிறான் பாரதி.