Sunday 21 May 2017

எங்கள் ஊர்!

எங்கள் ஊர்!
(சிவாஜி-1954)
காவிரி பாயுமூர்; கன்னலாம் செந்தமிழின்
காவலர்கள் பல்லோர் செறிந்தஊர்;-தாவினொடு
தீதிலார் சேர்ந்தவூர்; திண்மை மிகுந்தவூர்
ஓதுமூர் எம்திருச்சி யூர்.

குன்றம் விளங்குமூர்; குன்றா எழிலுடைய
இன்றமிழர் நற்கலைகள் காணுமூர்;-பொன்னியாள்
சீரங்கன் பொன்னடியைப் போற்றுமூர்; ஈசனுறை
சீரியவூர் நற்றிருச்சி யூர்.

பாரசம் தோய்ந்தவூர்; பண்பார்ந்த செந்தமிழின்
சீரதிகம் பெற்றுச் சிறந்தவூர்;-கண்டறிந்தார்
காவியத்தில் போற்றும் கவினுறுமூர்; சீரென்றும்
மேவியவூர் எம்திருச்சி யூர்.

“சோழ வளநாடு சோறுடைத்து” அந்நாட்டில்
வேழக் கரும்பினொடு செந்நெல்லும்;-மற்றெல்லா
நல்லனவும் ஓங்கச் செழித்த பெருந் திருவூர்
தொல்பெருமை நற்றிருச்சி யூர்.

கல்வி கமழும் ஊர்; காண்கின்ற திக்கெல்லாம்
சொல்லும் எழுத்தும் செழிக்குமூர்-நாவிலுறை
சொல்மகளே சோதிதரப் பாங்குடனே சீரியநற்
கல்வி ஒளி பெறுமூர் காண்.



No comments:

Post a Comment