Tuesday 18 December 2018

வீர சுதந்திரம்


வீர சுதந்திரம்
நூற்றாண் டிருபதில் ஆண்டு முப்பதில்
      நேசப் புரட்சி துவங்கியது!
காற்றின் திசையிங்கு மாறியது
      ககனமும் புவனமும் குலுங்கியது1
நோற்றுப் பாரத அன்னை பயந்த
      நிர்மலப் புதல்வன் தலைமையிலே
சாற்றிடும் சத்தியச் சூளூரை பூண்ட
      தொண்டர்கள் படையின் பீடு நடை!
சபர்மதியிருந்து தண்டியங் கரைவரை
      சத்திய சேனையின் அணிவகுப்பு!
உவரியிலிருந்து ஒரு பிடி உப்பில்
      உவகையின் கடலில் அலைபொங்கும்!
கவிக்குயில் ஆங்கே ரட்சகரே எனக்
      களிப்பில் மிஞ்சிக் கூவலுறும்!
தவச்சிறை எனும்எர வாடாவுக்குத்
      தலைவனைத் தள்ளிச் செல்கின்றார்!
முட்டி உடைந்தது;மண்டை பிளந்தது;
      மூர்க்கத்தனத்தின் உச்சநிலை!
விட்டுவிடாமல் கைப்பிடி உப்பை
      வீரப்படையினர் இறுக்குகிறார்!
கட்டிய தலைஉடை கையிலெடுத்துக்
      கவிழ்ந்தவர் நெஞ்சு நிமிர்ந்தார்கள்!
எட்டையபுரத்தான் வீரசுதந்திரம்
      எழுதிய கவிதை விதைத்தாச்சு!    

     



 ;
.

No comments:

Post a Comment