Wednesday 17 August 2016

தவம்

தவம்
பள்ளிப் பருவத்தில் கொள்ளை மகிழ்வுடன்
பாடிவைத்த கவி ஆயிரம்!
பிள்ளைப்பிதற்றல் என்றே பின்னர் நாட்களில்
பிய்த்தெறிந்தே போய்த் தொலைந்தன!
வாலிபப்பிராயத்தில் மங்கை அழகினை
வட்டமுகத்தினை வாணுதல்
கோலவிழியினைப் பாடிய பாடல்கள்
கொஞ்சம் முதிர்ந்ததும் ஒதுக்கினேன்!
போற்றும் இசைத்திற னோடு நான் பாடிய‌
பொற்கவி பற்பல யாவையும்
நாற்கவியில் இவை எவ்வகையும் இலை
நற்றமிழ்ப் பண்டிதர் தூற்றினார்!
மனத்துக்கினிதென மகிழ்வுடனே இங்கு
வரைந்த கவி சில உண்டுகாண்!
வனத்துக் குரங்கென விமர்சகப் பாதகர்
மாலையைப் பிய்த்து வீசினர்!
செம்பரம்பாக்கத்துப் புனலினில் போயின‌
சிற்சில நல்ல கவிதைகள்!
சம்பந்தனா என்ன? சமணரை வென்றிட‌
சலத்தினிலே எதிர் நின்றிட?
(வேறு)
பூமி பிளந்து போந்து வெளிப்பட்டு
பூத்திட ஓர்கவி காத்திருக்கும்;
ஓமெனும் பிரணவம் போலொரு மந்திர
ஒலிக்கே இங்கே தவமிருக்கும்!

No comments:

Post a Comment