Saturday 7 October 2017

ஒரு சாமான்யனின் கீதை--17

ஒரு சாமான்யனின் கீதை-17
சக்கனி ராஜமார்கமு!.
ஒவ்வொருவருக்கும் அவரவர் சேர்த்து வைத்த பழவினைகளுக்கேற்பவே குணங்கள் அமைகின்றன. சத்வம், ரஜஸ், தமஸ். இந்த குணங்களை ஒட்டியே அவரவர் சிரத்தை அமைகிறது. அதற்கிசையவே அவர்தம் செயல்பாடுகளும் அமைகின்றன.  நாம் விரும்பி உண்ணும் உணவு, , நமது உள்ளத்து உணர்ச்சிகள், வாழ்க்கையைப் பற்றிய நமது கண்ணோட்டம் இவற்றைக் கொண்டு நம்மை நாமே பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளலாம் .இந்தப் பரிசோதனை நமது குணமேம்பாட்டுக்கு உதவும் உளவியல்காரர்கள், “Egogram” என்றொரு கோட்பாட்டைச் சொல்வார்கள். நாமும் நமது குணங்கள் பற்றிய ஒரு வரைபடத்தை வரைந்து பார்த்துக் கொள்ளலாம்.(Character-o-gram). இதுவே ஆன்மிக முன்னேற்றத்துக்கான “சக்கனி ராஜ:மார்கமு”
வழிபாடு:
இறை வழிபாட்டில், சத்வ குணம் படைத்தவர்கள் இறைவனை நற்குண நாயகனாகவும் வாலறிவனாகவும் வழிபடுகிறார்கள். ரஜோகுணத்தவர்கள் தங்கள் ஆசைகள் நிறைவேறுவதற்காக,ம்அததற்கு உண்டான தேவதைகளை வழிபடுகிறார்கள். (குபேர யக்ஞம் போல!) தமோகுணம் படைத்தவர்கள், தங்கள் முறையற்ற ஆசைகள் நிறைவேறுவதற்காகவும், பிறரை அழிப்பதற்காகவும் பூத பிரேத பைசாசங்களை வழிபடுகிறார்கள் சாத்திர விதிகளிலிருந்து மாறுபட்டு வழிபடுபவர்கள் தங்கள் உடலை வருத்திக்கொள்கிறார்கள். காமமும் அகங்காரமும் நிறைந்த வழிமுறைகளில் ஈடுபடுகிறார்கள்.
உணவு:
ஆயுள், தூய்மை, வலிமை, ஆரோக்யம், உற்சாகம் இவற்றை வளர்க்கக்கூடிய ரஸமுடைய, பிசினுள்ள, கெட்டியான  உணவுகள் சத்வ குணத்தவர்க்குப் ப்ரீதியானவை.
வேதனை, துன்பம், நோய் இவற்றை விளைவிக்கக்கூடிய கசப்பு, புளிப்பு, உப்பு, அதிக உறைப்பு, அதிகச் சூடு கொண்டவை, உலர்ந்துபோனவை, எரிச்சல் உண்டாக்குபவை ஆகிய உணவுகளை ரஜோ குணத்தினர் விரும்புவர்.
பழையது, ரஸம் போனது, அழுகியது, கெட்டுப்போனது, பிறர் உண்டு மிஞ்சிய எச்சில்,அசுத்தமானது ஆகிய உணவுகளை ரஜோ குணத்தவர் நாடுவர்.
தவம்
:தவம் என்பது வாக்காலும், மனத்தாலும் உடலாலும் செய்யக்கூடியது. நேர்மை, தூய்மை, பெரியோரிடம் வணக்கம், புலனடக்கம், உயிர்களிடத்தில் அன்பு –இவை உடல் தவம்.
சத்தியமானதும் அன்பானதும் இதமானதுமான பேச்சு, நல்ல அறநூல்கள் படித்தல் ஆகியன வாக்கினால் செய்யும் தவம்..
மனதை அமைதியாக வைத்திருப்பதும், ,தூய எண்ணங்கள் கொண்டிருப்பதும், போக எண்ணங்களை விலக்குவதும் மனத்தினால் செய்யும் தவமாகும்.
இவை சத்வ குணத்தினருக்கு உரியன.
பிறருடைய நன்மதிப்புக்காகவும், லாபம் கருதியும்   இவற்றைச் செய்வது ரஜோ குணத்தினரின் இயல்பு.
பிறருக்குத் துன்பம் விளைவிப்பதற்காகவோ, பிடிவாத புத்தியாலோ நோற்பது-தமோகுணத்தினரின் செயல்.
தானம்:
கொடுப்பது கடமை என்றறிந்து கைம்மாறு கருதாமல்,தகுந்த காலமும்,இடமும் பாத்திரமும் அறிந்து செய்யப்படும் தானம் சாத்விக தானமாகும்.
கைம்மாறு கருதியோ பயனை எதிர்பார்த்தோ மனத்தில் வருத்தத்துடனோ கொடுக்கப்படும் தானம் ராஜசமாகும்.
தகாத இடத்தில், தகாத காலத்தில்,தகாதவருக்குச் செய்யப்படுவதும் இகழ்ச்சியுடனும் செய்யப்படும் தனம் தாமச தானமாகும்.
சாத்விக குணத்தை வளர்த்துக் கொள்வதும் செய்கிற செயல்கள் அத்தனையையும் இறைவனை மனத்தில் நினைந்தவாறு செய்வதுமே உயர் நெறி என்று உணர்ந்து செயல்படுவோமாக!


No comments:

Post a Comment