Monday 9 October 2017

ஒரு சாமான்யனின் கீதை--19

ஒரு சாமான்யனின் கீதை—19
நிறைவுரை
பகவத்கீதையின் நிறைவு  18 வது அத்தியாயம், பெரும்பாலும் ஏற்கெனவே சொன்னவற்றையே வேறுவேறு விதத்தில் சொல்வதாக இருக்கிறது. எனவே இந்த அத்தியாயத்தின் குறிப்பு எடுத்துக்கொள்ள நான் மெனக்கெடவில்லை.
இந்தத் தொடரை நான் எழுத ஆரம்பித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
முதலாவதாக, கீதையின் பல உரைகளைப் படித்திருக்கிறேன். சில தொடர் சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். அவ்வப்பொழுது மனதைக் கவர்ந்தன. நன்கு புரிந்துகொண்டாற்போல்தான் இருந்தது. எனினும் மனதுக்குள் தொகுத்துச் சொல்லிக்கொள்ளப் பார்க்கையில், கோவையாக நினைவுபடுத்திப் பார்க்க வரவில்லை. எனவே படித்த காலத்தில் செய்ததைப்போல ஒவ்வொரு அத்தியாயத்திலும் முக்கியமான, என்னைக் கவர்ந்த கருத்துகளைக் குறிப்பெடுத்து சின்ன சின்ன கட்டுரைகளாக எழுதிக்கொண்டேன். எனக்கு அவசியமில்லை என்று தோன்றியவற்றையும், சிரமப்பட்டுப் படித்தால்தான் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றிய பகுதிகளையும் சௌகரியமாக விட்டு விட்டேன். இருந்தாலும் சாராம்சத்தைப் பிடித்து வைத்து விட்டேன் என்ற திருப்தி இருக்கிறது.
படிப்பதைப்போலவே இன்பம் தருவது படித்ததைப் பகிர்ந்து கொள்வது. பகிர்ந்துகொள்ள எந்த ஊடகம் கிடைக்கும்? இருக்கவே இருக்கிறது முகநூல். பொறுமையுடன் என்னுடன் பயணித்த முகநூல் நண்பர்களுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள். தவிரவும் எனது வலைப்பூவான “மறுவாசிப்பில் வேணி” யிலும் இதைப் பதிந்து வைத்திருக்கிறேன். உள்நுழையவேண்டிய முகவரி:veniyinpookkoodai.blogspot.in. இதை விளம்பரப்படுத்த இதுவரை முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. அன்பர்கள் வருகை தந்தால் மகிழ்வேன்.

இரண்டாவது காரணம் :”அஹம் ப்ரம்மாஸ்மி” போன்றவற்றை எல்லாம் என்னால் அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்ள முடிகிறதே தவிர உணர்வுபூர்வமாக ஒன்றும் அனுபூதி எதுவும் சித்திக்கவில்லை. எனக்கு, இன்றைய பக்குவ நிலையில் அதில் எல்லாம் அவ்வளவாக நாட்டம் இல்லை. அதே போல பிறவிகள், வாஸனைகள், சம்ஸ்காரங்கள் இவை அனைத்தையும் நான் நம்புகிறேன். அவை சாஸ்திரங்கள் சொன்னவை என்பதாலும் நான் தெய்வமாக மதிக்கிற காஞ்சிப் பெரியவர்கள், சுவாமி விவேகானந்தர் ஆகியோர் சொல்வதாலும். அவர்கள் சொல்வது எனக்கு வேதவாக்கே. என்ராலும் செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்பதிலோ,மோட்சம் அடைய வேண்டும் என்பதிலோ எல்லாம் எனக்கு இயல்பாக நாட்டம் வரவில்லை. சாமான்யனான எனது அக்கறை எல்லாம் வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும். வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுகிறேனா இல்லையா என்பதெல்லாம் எனக்கு முக்கியமில்லை.
நல்லபடி வாழ கீதை என்ன சொல்கிறது? அது என்னால் கடைப்பிடிக்கக் கூடியதா என்பதே எனது இந்த முயற்சியின் காரணம். இதற்காக நான் குறிப்பாகப் படித்த நூல்கள்:
1.    The Bhagavad Gita- Commentary by Swami Chidbhavananda.
2.    The Holy Geetha-Commentary by Swami Chinmayananda
3.    Sadhanas in Bhagavad Gita bySri Swami Shantananda Puri.
4.    ஸ்ரீமத் பகவத்கீதை-உரையாசிரியர்”அண்ணா”
5.    கண்ணன் காட்டிய வழி-ராஜாஜி
இப்போது நான் படித்தவற்றில் எனக்கான “Take-aways”  என்னென்ன என்று தொகுத்துப் பார்க்க முனைந்தபோது எனக்காக ராஜாஜி ஏற்கெனவே இதைச் செய்து வைத்திருப்பது தெரிந்தது.
அதைத்தான் முந்திய இயலில் தந்துள்ளேன்

.இறையருள் இருந்தால் வேறு சில நல்ல சிந்தனைகளுடன் சந்திப்போம்.

No comments:

Post a Comment