Monday 2 October 2017

ஒரு சாமான்யனின் கீதை--14


ஒரு சாமான்யனின் கீதை—14
அறிந்தவனே அறிந்தவன்!
விசித்திரமானதோர் அரசமரத்தைக் கற்பனை செய்து கொள்வோம். தலைகீழான அரசமரம். வேர் எங்கோ மேலிருந்து வருகிறது. ஆரம்பம் அறியக்கூடவில்லை. கிளைகளும் இலைகளும் கீழ்நோக்கிப் படர்ந்துள்ளன. இந்த மரம் ஆழமாக வேரூன்றி உள்ளது. அழிவே இல்லாதது போலத் தோன்றுகிறது.
இந்த மரம் போன்றதுதான் நம் உலகியல் வாழ்க்கை. கிளைகளும் இலைகளும்,நமது குணங்கள், அவற்றின் மூலம் ஏற்படும் நமது வினைகள், புறப்பொருள்கள், புலன்கள் மனம், புத்தி, நான் என்று நினைத்துக்கொள்ளும் அந்தப் பொருள் அனைத்தும். இவை அனைத்துக்கும் ஆதாரமாக, புலன்களுக்கும் அறிவுக்கும் புலப்படாமல் இருப்பவனே பரமாத்மன். உடலின் உள்ளுறைந்து அதனை இயக்கும் ஜீவனுக்கும், ஜீவ சாக்ஷியாய் இருதயத்துக்குள் இருக்கும் ஈஸ்வரனுக்கும் மேற்பட்டவன் அவனே
பரம்பொருளின் மாய சக்தியால் ஜீவன் இயங்குகிறது. வினைகளும் அனுபவங்களுமாகிய வாஸனைகளைச் சேர்த்துக்கொள்கிறது. காற்றில் கலந்த வாசம், காற்றோடு கூடவே செல்வது போல, நமது சம்ஸ்காரமாகிய வாஸனைகள், ஜீவனோடு சேர்ந்து அடுத்தடுத்த பிறவிகளில் சேர்ந்து கொள்கின்றன. வாஸனைகளைத் தீர்க்க மற்றுமொரு பிறவி. அதனில் சேரும் வாஸனைகள். புனரபி ஜனனம் புனரபி மரணம். இதிலிருந்து எப்போது எப்படித்தான் விடுபடுவது?. ஸம்ஸாரமாகிய விருட்சத்தை வலுவான கோடரி கொண்டு வேரோடு வெட்டி வீழ்த்த வேண்டும். அப்போதுதான் இறைவனுக்கும் இறைவனான அந்த ஆதிமூலத்தை, பேரிறைவனை, புருஷோத்தமனை உணர்ந்து கொள்ள முடியும்.
வெட்டி வீழ்த்தக்கூடிய அந்த வலுவான கோடரி என்பது என்ன? ஞானமென்னும் கோடரி அது.செருக்கும் மோகமும் இல்லாமை..பற்றுகள் நீங்கப் பெறுதல். ஆத்ம விசாரம். இன்பதுன்பம் வேண்டுதல் வேண்டாமை என்ற இருமைகளிலிருந்து விடுபட்ட நிலை.

ஞானக்கோடரியால் ஸம்ஸார பந்தங்களை நீக்கியவனே புருஷோத்தமனை அறிகிறான். அவனை அறிந்தவனே “அறிந்தவன்” 

No comments:

Post a Comment