Friday 29 September 2017

ஒரு சாமான்யனின் கீதை--13

ஒரு சாமான்யனின் கீதை—13
குணங்களை என் சொல்வது?
அனைத்துமே அறுதியில் பரமாத்மன்தான் என்கிறோம். அப்படியிருக்க எத்தனை விதமான மனிதர்களைப் பார்க்கிறோம்?  ஏன் இத்தனை வேறுபாடுகள் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
இதற்குக் கீதையில் விடை இருக்கிறது. அதற்கும் மேலாக, நாம் இப்போது பார்க்கப்போகும் பகுதி, முழுமையான ஒரு சுய முன்னேற்ற இயல் என்று சொல்ல வேண்டும்.
வேறுபாடுகள் குணங்களின் அடிப்படையில் எழுகின்றன. ஸத்வம், ரஜஸ்,தமஸ் என்று மூன்று வகையான குணங்கள். செயல் அடங்கிய நிலை; செயல்துடிப்பு நிறைந்த நிலை; செயலற்ற நிலை. இந்த குணங்கள் நம் ஒவ்வொருவரிடமுமே வேறுவேறு பட்ட அளவில் உள்ளன. ஒருவரிடமே ஒவ்வொரு சமயத்தில் வித்தியாசமான கலவை அமைகிறது.
ஸத்வம் ரஜஸ்,- தமஸையும், ரஜஸ்,தமஸ்-ஸத்வத்தையும், தமஸ்,ஸத்வம் ,ரஜஸையும் மிஞ்சி மேலெழும்ப முயலும் தன்மை படைத்தன. எந்தக் குணம் மேலோங்கியிருக்கிறதோ, அதுவே அந்த மனிதனுக்கு, அல்லது அந்த சந்தர்ப்பத்தில் அவனுடைய குணமாகக் கொள்ளலாம்.
இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொன்னால், ஸத்வ குணம், அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம் என்னும் நிலையாகும். ரஜஸ் பரபரப்பு, குழப்ப சிந்தனைகள்,தெளிவான நோக்கம் இல்லாமல் எதையோ இழுத்துப்போட்டுக்கொண்டு அலமந்து கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கும். தமஸ்-அறியாமை, அலட்சியப்போக்கு, இவை என்று சொல்லலாம்.
ஏன் இப்படி குணங்கள் வேறுபடுகின்றன?
 மரணத் தறுவாயில் எந்த குணம் மேலோங்கியிருந்ததோ அதற்கேற்ப பிறவி வாய்க்கும் என்பார்கள்.  தவிரவும் முன் ஜன்ம எண்ணங்கள், அனுபவங்கள், வினைகளின் பதிவுகளும், அடுத்தடுத்த பிறவிகளில் இழுத்துக்கொண்டு வரப்படுகின்றன என்பதும் கூட. நாம் செய்ய வேண்டியது, நமது குணங்களைக் கவனித்து ஆராய்ந்து, தமஸை ரஜஸாகவும், ரஜஸை ஸத்வமாகவும் உயர்த்திக் கொள்ள வேண்டியது.

இப்போது நம் முன் உள்ள கேள்வி, நமக்கு இந்த குணங்கள் இயல்பாக அமைந்தவை என்றால், நாம் எப்படி மாற்றிக்கொள்ள முடியும்?
திருவள்ளுவரே இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கிறார்.” ஊழிற் பெருவலி யாவுள?” என்றார். மறுமொழியையும் அவரே சொல்லி விட்டார்
“ஊழையும் உப்பக்கம் காண்பர்-உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.
கடந்தகாலப் பதிவுகள் நம் குணங்களை நிர்ணயிக்கின்றன. குணங்களே நமது சூழ்நிலையை வகுக்கின்றன. இந்தக் கருத்து நமக்கு ஒரு வெள்ளிக்கீற்றைத் தருகிறது. நமது கடந்தகாலச் செயல்பாடுகள் நமது இன்றைய விதியை அமைக்கின்றன என்றால், நமது இன்றைய செயல்பாடுகளைச் சீரமைத்துக்கொள்வதன் மூலம் நமது எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம். நமது விதியைச் செதுக்கும் சிற்பி நாமே.
குணங்களை நேரடியாக மாற்ற முடியாது. எனினும் மன உறுதியுடன் நமது செயல்களை அமைத்துக்கொள்ளலாம். பிறருக்கு உதவுவது, நல்ல காரியங்களைச் செய்வது போன்ற நற்செயல்களைச் செய்து வரும்போது குணங்களில் முன்னேற்றம் ஏற்படும். இது ஒரு சக்கரச் சுழற்சி.
செயல்கள்-> பழக்கம்-> குணம்;> எண்ணம்-> செயல்கள்->பழக்கம்->குணம்->……..
சுவாமி சின்மயானந்தர் இதை ஒட்டி இன்னுமொரு நல்ல கருத்தைச் சொல்லியுள்ளார்கள்.
நமது குழந்தைகளுக்கு, ஆரம்ப முதலே,பெரியவர்களுக்கு மரியாதை-தலைமையிடம் பணிவு-பொய் கூறாமை-.நல்ல புத்தகங்களைப் படித்தல்-போன்ற செயல்பாடுகளைப் போதித்து  நல்ல குணங்களை உருவாக்கினால் எதிர்காலத் தலைமுறை சிறக்குமே?
தமஸை ரஜஸாகவும், ரஜஸை ஸத்வமாகவும் உயர்த்திக் கொள்ளலாம். எனினும் ஸத்வகுணமும் ஒரு தளையே. அதினின்றும் கூட விடுபட்டால்தான், ஆன்மிக நிறைவை எய்த முடியும்.
அஸதோமா ஸத்கமய,
தமஸோமா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோமா அம்ருதம்கமய
என்று அந்த ஆதிப் பரம்பொருளையே பிரார்த்திப்போமாக!

,

No comments:

Post a Comment