Monday 25 September 2017

ஒரு சாமான்யனின் கீதை--11

ஒரு சாமான்யனின் கீதை—11

பகவானுக்குப் பிரியமானவர்கள்.

இறைவனைக் குணங்கள் அற்றவனாகவும் வழிபடலாம்.  குணங்கள் உடையவனாகக் கருதியும் வழிபடலாம்.
குணங்கள் இல்லாதவனாக வழிபடுபவன், அவனை, வாயினால் விண்டுரைக்க ஒண்ணாதவன்;  தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாதவன்: எங்கும் நிறைந்தவன்; சிந்தனைக்கு அப்பாற்பட்டவன்; மாறுதலுக்கு உட்படாதவன்; சலனம் அற்றவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன் என்ற சத்தியத்தை மனத்தில் நிறுத்தி வழிபடுகிறான்.
இங்ஙனம் வழிபடுபவன் பக்குவம் அடைந்தவன். மனத்தைக் கட்டியாள்கிறான். அனைத்து உயிர்களிலும் வியாபித்திருப்பது இறைவனே என்று உணர்ந்து பிறர் நலம் பேணும் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான்.
பக்தியின் உயர்நிலையில் உள்ளவன் அஹம் ப்ரஹ்மாஸ்மி  என்று உணர்ந்து அந்த நிலையில் இறைவனை வழிபடுவது சிறந்ததே. எனினும்,பாதைகள் பலவாயினும் சேரும் இடம் ஒன்றே என்பதால் உருவ வழிபாடு செய்பவர்களைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர்களது நம்பிக்கையைக் குலைக்கவும் கூடாது.
அதே போல உடல் பிரக்ஞை விலகாதவன், தனக்கும் நான் பிரம்மன் என்ற ஞானம் வந்து விட்டதாக நினைத்துக்கொண்டு இயங்குவது ஆபத்தானது. தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதுடன் இந்த உலகத்தையும் ஏமாற்றுவதாகும்.
சாதகன் எப்படி பக்தி செய்ய வேண்டும்?
மனதை இறைவனில் நிலை நிறுத்தி  அவனைப் பற்றிய நினைவிலேயே ஆழ்ந்திருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட மன ஒருமை இல்லையென்றால் என்ன செய்வது?
கடவுளுக்கும் உலக நினைப்புகளுக்கும் இடையே மனது ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும்போது,  மனதைக் கவனித்து,  கடவுள் நினைப்புக்குத் திருப்ப வேண்டும். ‘நான்’ என்பது வேறு, நினைப்பு என்பது வேறு என்ற விழிப்புணர்வு இருந்தால் இது சாத்தியமாகும். இந்தப் பயிற்சிதான் அப்யாஸ யோகம் என்பது.
இல்லை; அதுவெல்லாம் கஷ்டமான சமாசாரம். இன்னும் கொஞ்சம் சுலபமான வழி இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டால்—

ஒவ்வொரு காரியத்தைத் துவங்கும்போதும்,
“கண்ணா! (அல்லது கந்தா/அம்மா/ குருநாதா!/) இது உனது காரியம். என் மூலம் செய்து கொள்கிறாய். நான்தான் காரியம் செய்கிறேன் என்று நினைத்துக் கொள்வது என் அறியாமை. உன் காரியத்துக்கு நான் ஒரு கருவி மாத்திரமே.”  என்று கூறிக்கொள்ளலாம்.
நான் செய்வது எனக்கு ஏற்பட்ட வேலை. இதில் போய் இப்படி எல்லாம் வசனம் பேசுவது எனக்கு தோதாக இல்லை என்பவர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணர் வார்த்தையைக் கேட்கலாம்.
“வேலை செய்யாமல் உன்னால் இருக்கவே முடியாது.  ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பதுதான் உன் சுபாவம். செய்கிற வேலையை நன்றாகச் செய். ஆனால் பற்று இல்லாமல் செய். அப்படிச் செய்கிற காரியங்கள் உன்னைக் கடவுளை நோக்கி இட்டுச் செல்கின்றன. செய்கிற வேலையால் வருகிற இன்பத்திலும் துன்பத்திலும் பாதிக்கப்படாமல் இரு. அனைத்தையும் ஈஸ்வரனுடன் சம்பந்தப்படுத்திக் கொள்”
, பயிற்சியை விட ஞானம் உயர்ந்தது ஞானத்தை விட தியானம் சிறந்தது. தியானத்தை விட வினையின் பயனை அர்ப்பணிப்பது சிறந்தது.  செயலின் பயன்களைத் துறப்பதன் மூலம் இங்கே, இப்போதே அமைதி கிடைக்கிறது.
இறை நம்பிக்கையில் நிறைநிலை அடைந்தவர்கள்—
எவரையும் வெறுக்க மாட்டார்கள். அனவரிடமும் சினேகமாயும் கருண்ய மனோபாவத்துடனும் இருப்பார்கள். “நான், எனது” என்ற உணர்வுகளை விலக்கியிருப்பார்கள்..இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் மனதின் சமநிலை மாறாதிருப்பார்கள். எப்போதும் மனத் திருப்தியுடன் இருப்பார்கள். தியானத்தில் நிலைபெற்றிருப்பார்கள். தன்னைத்தான் அடக்கியாளும் திறம் பெற்ரிருப்பார்கள். தீர்மானமான மனம் படைத்திருப்பார்கள். அவர்களது மனமும் புத்தியும் சதா சர்வதா கடவுளிடமே நிலைத்திருக்கும்.
அத்தகையவர்களே பகவானுக்குப் பிரியமானவர்கள்.

நாமும் அப்படிப் பகவானுக்குப் பிரியமானவர்களாக விளங்கப் பிரார்த்தித்துக் கொள்வோம்! 

No comments:

Post a Comment