Monday 11 September 2017

ஒரு சாமான்யனின் கீதை--7

ஒரு சாமான்யனின் கீதை—7

அறிவும் அனுபூதியும்

ஆயிரத்தில் ஒருவரே இறை அறிவு பெறும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்களில் சிலரே அறிந்துகொள்வதில் வெற்றியும் பெறுகிறார்கள். ஆனால் உள்வாங்கி அனுபவிப்பவர் எங்கோ யாரோ ஒருவர். இந்த அனுபவத்தை அனுபூதி என்று சொல்லலாம். இதனைப் பெற நூலறிவு போதாது. உள்முகப்பயணம் தேவை.
நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகாசம் என்ற பஞ்ச பூதங்களும்
மனம், புத்தி,நான் எனும் உணர்வு ஆகிய மூன்று உட்புலன்களும் ஆகிய எட்டும்  இறைவனின் அடிநிலை இயற்கை. இவற்றில் ஜீவாத்மா உறைந்து நடத்தி செல்கிறது. .அனைத்து ஜீவாத்மாக்களும் பரமாத்மாவில் ஒன்றியுள்ளன. கடலில் அலைகள் போல.
உடல் தலம் என்றால் ஜீவன் தலத்தில் உறைந்து செயல்படுத்தும் தலைவன். அனைத்து ஜீவன்களும் தலம் என்றால் பரமாத்மா, அவற்றுள் உறைந்து செயல்படுத்தும் தலைவன்.
இறைவன் எங்கும் நிறைந்தவன்.. அகத்தகத்துள்ளே உள்நின்றான். உலகம் யாவையும்  தாம் உளவாக்கலும்,நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையான் என்றெல்லாம் சொல்லும்போது புரிந்து கொள்வது கஷ்டமாகத்தான் இருக்கிறது. தெரிந்ததிலிருந்து தெரியாததற்கு இட்டுச் செல்வது போல, கண்ணன் இதுவெல்லாம் இறைவன் என்று பலவற்றைச் சொல்கிறான். அவன் சொல்லும் பட்டியல் விளக்கத்துக்கேயன்றி  அனைத்தையும் உள்ளடக்கியது அல்ல.Illustrative,not exhaustive. எனினும் அவன் வரிகள் கவித்துவமாக அமைந்துள்ளன.
”நீரில் சுவை; சந்திர சூரியர்களின் பிரகாசம்; அனைத்து வேதங்களிலும் ஓம் எனும் பிரணவம்;ஆகாசத்தில் ஓசை; மனிதனில் ஆண்மை; மண்ணில் வாசனை; தீயில் ஜாஜ்வல்யம்; வாழ்வனவற்றில் உயிர்; துறவிகளில் துறவு மாண்புற்றவற்றில் எல்லாம் மாண்பு ஆசாபாசம் நீங்கிய பலவான்களின் வலிமை; அறத்துக்குப் புறம்பில்லாத ஆசை.”
தூய்மை, செயல்துடிப்பு, செயலின்மை இம்மூன்று பண்புகளும் அவனிடமிருந்தே உதிக்கின்றன. மாயை எனப்படும் இம்மூன்று குணங்களினால்  அறிவு மறைக்கப்படுவதனாலேயே மனிதர்கள் இறைவனை உணர்ந்துகொள்வதில்லை. இந்த மாயை அகல ஒரே வழி இறைவனிடம் பரிபூரணமாகச் சரணாகதி ஆவதுதான்.
இறைவனை வழிபடுவோர் நான்கு வகைப்படுவோர். துன்பம் நீங்க வழிபடுவோர், செல்வம் சேர்க்க வழிபடுவோர், இறை நாட்டத்துடன் வழிபடுவோர், ஏற்கெனவே ஞானம் எய்தியவர்கள்.
ஞானிகள் திட மனத்துடன், இறை நினைப்பில் திளைப்பவர்கள். இவர்களே பக்தர்களுள் சிறந்தவர்கள் என்று இறைவன் நேசிக்கிறான்.
கீழ் நிலையில் உள்ளவர்கள் தங்கள் தங்கள் நோக்கத்துக்காக, அததற்குரிய தெய்வங்களை வழிபடுகிறார்கள். சடங்குகள் செய்கிறார்கள். பலன்களும் பெறுகிறார்கள், உண்மையில் அவர்கள் செய்யும் வழிபாடு பரமாத்மனான அந்தப் பேரிறைவனையே சென்றடைகிறது. பலன் தருபவனும் அவனே, இறைவன் அவர்களது நம்பிக்கை குலைய விடுவதில்லை. அவர்களும் முன்னேற்றப் பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
உலக வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டு, தத்தம் கடமைகளை ஆற்றியபடியே இறைவனை அடைய உண்மையாக முயற்சி செய்பவர்களுக்கு என்ன ஆகும்?  சரியான முயற்சியில் ஈடுபட்டு  இறைவனைப் பற்றி,,தன்னைப் பற்றி, கடமைகள் பற்றி, எல்லாம் நன்கு உணர்ந்து செயல்படுவார்கள். வையத்தில் வாழ்வாங்கு வாழ்வார்கள், அவர்கள் மரணம் குறித்து அஞ்சுவதில்லை. விடைபெறும் காலத்தில் அவர்களுக்கு இறை அருள் சித்திக்கும்.


No comments:

Post a Comment