Thursday 14 September 2017

ஒரு சாமான்யனின் கீதை--8

ஒரு சாமான்யனின் கீதை—8
சாகும்பொழுதெனக்குச் சங்கரனே துணையாவான்!
இறைவனை அடைய ஒரே நிச்சய வழி, மரணத் தறுவாயில் அவனை நினைத்துக் கொண்டே இருப்பதுதான். வாழ்நாள் முழுதும்,ஒன்றிய மனத்துடன் இடைவிடாமல் தியானம் செய்து பழகினால்தான் இறுதிக் கணத்தில் இறை நினைப்பு வரும். இல்லாவிட்டால் நமது உலகாயத பந்தங்கள் பாசங்கள், காரியங்கள் எல்லாம்தான் மனத்தில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். அதற்கேற்ற பிறவிதான் வரும். இந்த சந்தர்ப்பத்தில் ஜடபரதர் கதைதான் நினைவுக்கு வருகிறது. முற்றும் துறந்தவர். பற்று நீங்கியவர். இறுதி நாட்களில் ஒரு மானின் மீது பாசம் வைத்தார். மானாய் மறுபிறவி வாய்த்தது.
உலகக் கடமைகளைச் செவ்வனே செய்யும்போதே இறை நினைப்பையும் விடாமல் இருப்போம்.”கரத்திலே கடமை: கருத்திலே கடவுள்” என்பார் என் அன்புக்குரிய பேராசிரியர் அமரர் ரம்போலா மாஸ்கரேனஸ்..
இறைவன் எண்குணத்தான் என்கிறார்கள். சர்வவ்யாபி; புராதனன்; அனைத்தையும் ஆள்பவன் ;அணுவினும் நுண்ணியன்; அனைத்தையும் தாங்குபவன்; எண்ணுதற்கரிய வடிவினன் ஸ்வயம்பிரகாசி; அறியாமை இருள் நீங்கியவன். இந்த குணங்களைத் தியானிப்போம்.
புலன்களை அடக்குவோம். மனத்தை இறைவனில் நிலை பெறச் செய்வோம்.
ஓம் என்னும் பிரணவத்தை உச்சரித்துக் கொண்டிருப்போம்.
இந்த முயற்சிகளல் நாம் வெளிச்சப்பாதையில் இறைவனை அடைவோம்.  வேறு உலக நினைப்புகளிலேயே உழன்று கொண்டிருந்தால், மீண்டும் மீண்டும் பிறவிச் சுழலில் சிக்க வேண்டியதுதான்.
தனிப்பட்ட முறையில் நான் ஒரு பரிசோதனை செய்து பார்த்தேன். பகிர்ந்து கொள்ளத் துணிகிறேன்.
உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்றார் வள்ளுவர். கீதை, இறக்கும் தறுவாயில் எதை நினைக்கிறோமோ அதையே அடைகிறோம்  என்கிறது.
சிலநாட்களாக, உறங்கப்போகும்போது ராம நாமத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அப்படியே உறங்கி விடுகிறேன். மறுநாள் காலை விழிக்கும்போது என்னை அறியாமல் ராம நாமத்தை உச்சரித்துக்கொண்டிருப்பதை உணர்கிறேன்.  (கீதை சொலவது சரிதான் போல இருக்கிறது!!!)  


No comments:

Post a Comment