Friday 8 September 2017

ஒரு சாமான்யனின் கீதை--5

ஒரு சாமான்யனின் கீதை—5
கர்மமும் துறவே!

முக்தி, மோட்சம், வீடுபேறு என்பதெல்லாம் விட்டு விடுதலையாகிப் பரமானந்தம் எய்தும் அந்த நிறைநிலையைக் குறிக்கும்.. இந்த நிலையை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று துறவு நிலை. மற்றது செயலாற்றல். இரண்டும் ஒன்றையேதான் குறிக்கும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். எப்படி?
துறவு என்பது பிரச்சினைகளுக்குப் பயந்துபோய் ஓடிப்போகிற செயலைக் குறிப்பதில்லை. அது அனைத்தையும் தியாகம் செய்து இறைவனையே குறிக்கோளாய்க் கொண்டுள்ள நிலை. அதே போல  வீடுபேற்றுக்கு இட்டுச் செய்யும் செயல்புரிதல் என்பது விருப்பு வெறுப்பின்றி, பலனில் பற்று வைத்து அலமராமல், தன்னலம் கருதாமல் பணி புரிவதாகும். சுருங்கச் சொன்னால் இதுதான் கர்ம யோகம் என்பது. இதுவும் சன்யாசமே. கர்ம சன்யாசம்.
இவ்விரண்டில் உயர்ந்தது கர்ம யோகம். இரண்டும் ஒன்றே என்னும்போது, இரண்டும் ஒரே இலக்குக்கு இட்டுச் செல்லும் என்னும்போது, கர்ம யோகம் அப்படி என்ன உசத்தி?
கர்மயோகம் இல்லாமல் சன்யாச நிலையை அடைவது அவ்வளவு சுலபமில்லை. கர்ம யோகத்தின் மூலம் மனத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டு தியானம் புரிபவன் இறைநிலையை எய்துகிறான் .தன் முனைப்பு இல்லாமல், பிறர்நலம் பேணிப் பணி புரிபவன் மனத்தூய்மை அடைகிறான். தியானம் அவனுக்கு எளிதில் கை வருகிறது.
கர்ம யோகத்தினால் மனதைத் தூய்மைப்படுத்திக்கொண்டு,,புலன்களை வசமாக்கித் தன்னை ஆளும் சமர்த்து எய்தியவனை, அறிவிலே தெளிவு பெற்று அனைத்து உயிர்களையும் தானாகவே காண்பவனைச் செயல்கள் கட்டுப்படுத்துவதில்லை.,
இந்த நிலையை பாரதியார் பாடுகிறார்:
அறிவிலே தெளிவு; நெஞ்சிலே உறுதி,
     அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின்மீது தனியர சாணை,
     பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
     நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!
இத்தகைய நிலையில் பாவங்கள் சுட்டெரிக்கப்படுகின்றன .செயலின் பதிவுகள் ஏற்பட்டு பந்தங்கள் சேர்வதில்லை.
கர்மத்தைக் கர்ம யோகமாகமாகச் செய்வது நம்மைப்போன்ற சாமான்யர்களுக்குக் கூடுவதில்லை. “”நம்மால் ஆகாது” என்று விட்டுவிட வேண்டியதுதானா?
சுவாமி விவேகானந்தர் வழி சொல்லித் தருகிறார்.

“”ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அவ்வப்போது வருகிற வேலையைச் செய்வோம். ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னலம் அற்றவராக ஆகப் பயில்வோம். வேலையைச் செய்வோம்; நம்மை வேலை செய்யத்தூண்டும் சக்தி எது என்று கண்டறிவோம். ஆரம்ப வருஷங்களில் விதிவிலக்கில்லாமல்,நமது நோக்கங்கள் எல்லாமே தன்னலமாக இருப்பதைக் காண்போம். ஆனால் சிறிது சிறிதாக, விடாமுயற்சியினால்,இந்தத் தன்னலம் கரைந்து போகும். நிறைவாக, உண்மையிலேயே தன்னலக் கலப்பில்லாமல் நாம் தன்னலக் கலப்பே இல்லாமல் பணிபுரியக்கூடிய அந்த தினம் வரும். ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள், வாழ்க்கைப் பாதையில் முட்டி மோதிக்கொண்டு செல்கையில் நாம் துளிக்கூட சுயநலக்கலப்பே இல்லதவராக மாறும் அந்த நாள் வரும் என்று நம்புவோம். அந்த நிலை வரும் தருணம், நமது அத்தனை ஆற்றல்களும்  ஒருமுகப்படும். நமக்கே சொந்தமான ஞானம் புலனாகும்.” .

No comments:

Post a Comment