Thursday 28 September 2017

ஒரு சாமான்யனின் கீதை--12

ஒரு சாமான்யனின் கீதை—12
இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்?
பருப்பொருள்களும் ,மனிதனின் புலன்களும்,  மனமும், புத்தியும், நான் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய entity யும் களம் எனலாம். கீதா வாசகப்படி க்ஷேத்ரம்.
உடலுள் உறைந்து அசைவற்ற களத்தை அறிந்து, இயக்கி ஆட்சி செலுத்தும்  ஜீவ சக்தியே கள நாயகன்; க்ஷேத்ரக்ஞன்.
வேறுவிதமாகச் சொல்வதானால், அறியப்படும் அனைத்தும் க்ஷேத்ரம். அறிகின்ற தத்துவம் க்ஷேத்ரக்ஞன்.
க்ஷேத்ரக்ஞன் இல்லாத க்ஷேத்ரம் வெறும் ஜடமே. அதே போல, க்ஷேத்ரம் என்ற கருவிகள் இல்லாமல் க்ஷேத்ரக்ஞனுக்கு இயக்கம் இல்லை.
ஜீவாத்மா என்னும் க்ஷேத்ரத்தின் மூலம் இன்பம் ,துன்பம், கோபம், மோகம், பொறாமை, அமைதி, படபடப்பு அச்சம் , இன்னும் ஆயிரமாயிரம் புயல்களை அகவெளியிலும் புற வெளியிலும்  மனிதன் அனுபவிக்கிறான்.
தனித்தனி ஜீவாத்மாக்களாகி அவற்றின் மூலம் செயல்படுவது வாலறிவன் என்னும் சுத்த சைதன்யமே. இந்தக் குறி குணமற்ற பரம்பொருள் ஜீவனை நமக்குள்ளே உறைந்து பற்பல அனுபவங்களையும் அனுபவிக்கச் செய்யும் பரமதத்துவம்..
ஜீவாத்மா உலகாயதத்தில் தன்னை ஒன்றுபடுத்திக்கொண்டு, தனது பரமாத்ம நிலையை மறந்து விடுகிறது.
ஜீவன் தன் தெய்வத்தன்மையை உணர்ந்து கொள்வதுதான் அறுதிக் குறிக்கோள்.
தன்னில் தான் லயித்து ஒருமைப்படும்போது இந்த ஞான வெளிச்சம் சித்திக்கும்.
இந்த நிலையை அடைய சாதகம் புரிய வேண்டும். இந்த சாதகம்-பயிற்சிக்கான அடிப்படைத் தகுதிகள் என்ன?
கண்ணபிரான் பல  பல பண்புகளை அடுக்கிக் கொண்டே போகிறான்.. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால்- மனத்துக்கண் மாசிலன் ஆதல். நல்லவனாய் இருத்தல்; நல்லதே செய்தல். பகவான் பிரியத்துக்கு ஏற்றவர்களாக நடந்து கொள்ளுதல்!
இந்த அடிப்படைத் தகுதியை வளர்த்துக்கொண்டு ஆன்ம ஞானம் பெற- இறை நிலையை நோக்கி முன்னேறுவதற்கான- வழிமுறைகள் என்ன?
·         புறப்பொருள்களிலிருந்து , அனுபவங்களிலிருந்து விலகி நின்று தனித்திருந்து பார்க்கும் தன்மை. இதற்கான மன ஒருமைப்பாட்டுக்கு வழி-தியானம்.
·          ஆத்ம விசாரம். சான்றோர் தொடர்பு, ஆன்மிக நூல்கள் படித்தல், சிந்தித்தல்.
·         ஊருக்கு உபகாரமான காரியங்களை, பலனில் பற்று வைக்காமல் ஆற்றும் கடமை வேள்வி.
·         நம்பிக்கையோடு கூடிய பிரார்த்தனை.
இந்த வழிமுறைகள் ஒன்றோ, பலவோ அனைத்துமோ ஏற்ற வழிமுறைகள். இன்னும் சொல்லப்போனால், இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. பல வழிகளி.ல் ஒன்றின் மீது ஒன்று மீதூர்பவை.
இவ்வழிகளில் கிடைக்கக்கூடிய ஆனந்தம் விண்டுரைக்க முடியாதது. .”ஒன்று பரம்பொருள்; நாமதன் மக்கள்; உலகின்பக்கேணி” என்ற அனுபூதியினால் வரும் பரமானந்தம்.

இந்த நிலை வரும்போது-பந்தமில்லை,பந்தமில்லை,பந்தமில்லை, பயமே இல்லை. இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்?

No comments:

Post a Comment