Tuesday 5 December 2017

அற்புதங்கள் நிகழவே செய்யும்!

அற்புதங்கள் நிகழவே செய்யும்!
கடவுளின்மீதும் பிரார்த்தனையின் வலிமை மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார் காந்திஜி. தொழுத கையில் ஒடுங்கியிருந்த தோட்டாவால் துளைக்கப்பட்ட அந்த நேரத்தில் கூட அவரது உதடுகள் உச்சரித்துக் கொண்டிருந்தது ராமநாமமே. நல்லதொரு நோக்கத்துக்காக நேர்மையான வழிமுறையில் செயல்படும்போது,அத்தனை நண்பர்களும் கைவிட்டு ஓடிவிட்டபோதிலும், நம்பிக்கையின் அடிவிளிம்புக்கே வந்து விட்ட போதிலும்-அடிவானம் இருளடைந்து காணும்போது-ஆண்டவன் வந்து துணை புரிவான் என்பது அவரது அருமறை.
அவரது வாழ்வில் ஒரு நிகழ்வு.
சத்தியாக்கிரக ஆசிரமத்தில் ஒரு ஹரிஜனக் குடும்பத்தை ஆசிரமவாசிகள் சேர்த்துக்கொண்டு விட்டார்கள். கணவன் மனைவி ஒரு குழந்தை அடங்கிய குடும்பம் அது. அது ஊரில் மாபெரும் புயலைக் கிளப்பிவிட்டது. “இந்த காந்திக் கடங்காரனாலெ வந்த வினை. எப்படி ஊருக்குள்ளே  இப்படி ஒரு .குடும்பத்தைச் சேத்துக்கப்போச்சு? நம்ம ஜாதிக்கடுக்குமோ?” இப்படி எல்லாம் பேசிக்கொண்டார்கள். இதற்கெல்லாம் காந்திஜி கவலைப்படவில்லை. ஆனால் ஆசிரமத்தின் அடி வயிற்றில் அடித்துவிட்டார்களே! நன்கொடை எல்லாம் நின்னு போச்சு. அடுத்தவேளைக்கு என்ன செய்யப்போகிறோம்  என்று தெரியாத நிலை. சமூக பகிஷ்காரம் வேறு செய்யப்போகிறார்களாம். காலனிக்கே நாம் எல்லாரும் போய் குடிசை போட்டுக்கலாம்! கூலிவேலை செய்து ஆசிரமத்தை நடத்தலாம்  என்று காந்தி ஆலோசித்துக் கொண்டிருந்தார்.
திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பார் காந்திஜி. ஆசிரமச் சிறுவன் ஒருவன் அவரிடம் ஓடி வந்தான்.”.பாபு! ஒரு சேட்டு உங்களை பார்க்கணுமாம்! வெளியிலே நிக்கறார்!”  காந்திஜி வெளியில் சென்று பார்த்தபோது காரின்மீது சாய்ந்தபடி ஒரு கம்பீரமான மனிதர் நின்றிருந்தார். முன்னெப் பின்னெ பார்த்திராதவர். எடுத்த எடுப்பில் அவர் கேட்டார்: ”நான் ஆசிரமத்துக்கு நிதி உதவி செய்யலாம் என்று இருக்கிறேன்.வாங்கிக் கொள்வீர்களா?” காந்திஜிக்கு தன்னையே நம்ப முடியவில்லை. “அவசியம்! அவசியம்! இப்பொ ரொம்ப கஷ்டமான நிலையில் இருக்கிறோம்” என்றார் காந்திஜி.
புறப்பட்டுப்போன மனிதர் மனிதர் மறுநாளே வந்து 13000 ருபாய் ரொக்கமாகக் கொடுத்து விட்டுப்போனார். அவர் அம்பாலால் சாராபாய் என்ற தொழிலதிபர் என்பது பின்னால்தான் தெரிய வந்தது. அவர் பின்னொரு சந்தர்ப்பத்தில்  காந்திஜியின் வாழ்க்கையில் குறுக்கிடப் போகிறார். அதைப் பின்னால் பார்ப்போம்.
அடுத்து விவேகானந்தர்..
விவேகானந்தர் அமெரிக்கா போய்ச் சேர்ந்தார். சர்வ சமய மாமன்றத்தில் கலந்துகொள்ளப்போனவர் ஊருக்கு முன்னால் போய்ச் சேர்ந்து விட்டார். கையில் இருக்கிற காசு அற்பம். அமெரிக்கா விலைவாசி அவருக்குத் தெரியாது. தெரிந்த முகம் ஒன்று கூட இல்லை. அறிமுகக் கடிதம் என்று யாரிடமும் வாங்கிக்கொண்டு வரவில்லை. இந்த லட்சணத்தில் போக வேண்டிய விலாசத்தையும் தொலைத்து விட்டார். யாரைக் கேட்டாலும், முகத்தைத் திருப்பிக்கொண்டு பதில் சொல்லாமல் போகிறார்கள். இவரையும் இவரது உடையையும் வினோதமாகப் பார்க்கிறார்கள். இருக்க இடமில்லை. வயிற்றுக்கு ஆகாரமில்லை. அலமந்து போன அவர் மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டார், ”மேரி மாதாவின் பிள்ளைகளிடம் வந்திருக்கிறேன்; இயேசுநாதர் என்னக் காப்பாற்றுவார்”
காப்பாற்றியே விட்டார். சரக்கு ரயில் பெட்டியில் குளிரில் விரைத்துப்போய் படுத்துத் தூங்கி விட்ட அவர் விழித்து எழுகையில், எதிர்வீட்டுப் பெண்மணி,” நீங்கள் சர்வசமய மாமன்றத்துக்குத்தானே வந்திருக்கிறீர்கள்? என்று கேட்டு வீட்டுக்கு அழைத்து, உபசரித்து உணவு தந்து, மாமன்றத் தலைவர் அவரது நண்பராய் இருந்ததால் அவரிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். அதற்குப் பிறகு ஒரே நாளில் அவர் உலகப்புகழ் பெற்ற கதை நாமறிவோம்.
ராமன் என்றால் என்ன? இயேசு என்றால் என்ன? கடவுள் ஒருவரே. நம்பிக்கை வைத்து விட்டால் அற்புதங்கள் நிகழவே செய்யும்!!.


No comments:

Post a Comment