Friday 7 July 2017

பணியின் மூலம் பேரானந்தம் (3)


எனக்கு வாய்த்த வேலை…
வையகம் காப்பவரேனும்-சிறு
     வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்
பொய்யக லத்தொழில் செய்தே-பிறர்
     போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.
                                பாரதியார். 

 சூழ்நிலைகளால் எனக்கு வாய்த்த வேலை அவ்வளவு முக்கியமானதில்லை, மிகவும் சலிப்பூட்டும் வேலை. இதில் ஆனந்தம், அதுவும் பேரானந்தம் கொள்வதாவது என்று அங்கலாய்ப்பவர்கள் இல்லாமல் இல்லை. சங்கிலியில் ஒவ்வொரு கணுவும் இணைப்பும் முக்கியம். பந்தைக் கூடையில் போட்டு கைதட்டு வாங்குபவனைப் போலவே, பந்தை அவனுக்கு வாகாகச் செலுத்திக்கொண்டு  செல்பவனும் முக்கியம். ஏன் ? பந்தை பொறுக்கியெடுத்துக் கொடுப்பவனது பணியும் முக்கியமானதே. எவ்வளவு சிறிய பணியாக இருந்தாலும் சலிப்பூட்டும் என்று நினைக்கத் தூண்டும் பணியாக இருந்தாலும், ஒட்டுமொத்த இலட்சிய ஈடேற்றத்தில் நாம் ஆற்றும் பணி எவ்வாறு பொருந்துகிறது என்று எண்ணிப் பார்க்கும்போது உற்சாகம் குறைவதற்கு இடமில்லை. இது ஒரு பக்கம்.
எந்தப் பணி செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்பதில் கருத்தாகச் செயல்பட்டால் பணியே பரமசுகம் அளிக்கும். பத்தடிக்குப் பத்தடி பரப்புள்ள ஓர் அறையைச் சுத்தம் செய்வது நமது பணியாக இருந்தால், அதைத் துடைத்துத் துடைத்துப் பளிச்சென்று வைத்துக்கொள்ளும்போது கிடைக்கும் பணிநிறைவுதான் இன்பம்..
இப்போதுள்ள பணியை நாம் பொறுப்போடு லயித்துச் செய்தால் பெரிய பொறுப்புகள் தாமாகவே நம்மைத் தேடி வரும். ஜேம்ஸ் ஆலன் சொல்லுவார்::;ஒரு தொட்டியில் ரோஜாச்செடி வைக்கப்பட்டிருக்கிறது. தொட்டி காணாத அளவு அது வளர்ந்ததும், உரிமையாளன் அதைப் பெரிய தொட்டிக்கு மாற்றி விடுவான்.
எவரையும் அவர் செய்யும் வேலையைக்கொண்டு மதிப்பிடக்கூடாது. அதை அவர் எவ்வளவு நேர்மையாக, ஈடுபாட்டுடன், சிறப்பாகச் செய்கிறார் என்பதே அவரது தகுதியை நிர்ணயிக்கும் உரைகல். உள்ளபடியே :வறட்டுத்தனமாகப் பாடம் சொல்லும் பேராசிரியரை விடப்,,பளிச்சென்று காலணிகளைத் துடைக்கும் செருப்புத் தொழிலாளியே மேலானவன்.

4 .இயல்பு

No comments:

Post a Comment