ராமச்சந்திரன்
என் இனிய சிநேகிதன்.
தப்பான அபிப்பிராயங்கள்
நிறைய வைத்திருக்கிறான்.
அவனை நல்வழிப்படுத்தியாக
வேண்டும்
எனெனில் அவன் என்
இனிய சிநேகிதன்.
விஷயத்தைத் தெளிவாக
எடுத்துச் சொன்னால்
உள்வாங்கிக்கொள்ள
மாட்டேன் என்கிறான்.
தன் கருத்தையே
உரக்கச் சொல்கிறான்.
நான் தெளிவாகப்
பேசும்போது
புன்னகைத்து
பேசாமல் இருந்து
விடுகிறான்.
இவனுக்கென்ன தெரியும்
என்ற
அலட்சியம்.
இப்போதெல்லாம்
நான் பேசினால்
வேறுபக்கம் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
எங்கேயோ எண்ணெய்மழை
என்பது போல.
காதில் பஞ்சை அடைத்துக்
கொண்டிருப்பானோ?
அவனைத் திருத்த
முயன்றேன்
ஏனெனில் அவன் சிநேகிதன்.
முடியவில்லை.
தோற்றுப்போய் விட்டேன்.
அவன் சாதி
அவன் மாவட்டம்
அப்படி.
திமிர் பிடித்தவர்கள்.
அவனுக்குக்
கன்னத்தில்
ஒரு சின்ன மச்சம் இருக்கிறது..
இப்ப்போதெல்லாம்
கன்னத்தில்
மச்சம் இருப்பவர்களைப்
பார்த்தால்
எனக்குப் பற்றி
எரிகிறது.
கோவில் யாழி சிலை
வாயின்
உருண்டைப்பந்து
போல
வயிற்றில் புரள்கிறது.
ராமச்சந்திரன்
என் இனிய சிநேகிதன்
முன்பொரு காலத்தில்.
No comments:
Post a Comment