Sunday 30 July 2017

பணியின் மூலம் பேரானந்தம் (11)

பணியின் மூலம் பேரானந்தம் (11)
மனம் குவிந்து செயல் புரிக!
கடமையில் திறமை என்பதைப் பற்றிச் சிந்தித்து வருகிறோம்.. சுவாமிஜி செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் என்று பேசுபவர் அல்லர், அன்றாட வாழ்வில் செய்ய வேண்டியது எது செய்யக்கூடாதது எது, செயலாற்றுவது எப்படி என்பது பற்றிய செய்திகள் அவர்கள் வாக்கில்: நிறையவே உள்ளன.
குறிக்கோளைப் பற்றியும் அடைய வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் சென்ற இயலில் பார்த்தோம்.
சிறப்பாகப் பணி ஆற்றுவதற்கு முக்கியத் தேவை மனம் குவிந்து செயலில் ஈடுபடுவது.( Concentration) இப்படி மனம் ஒன்றிச் செயல்படும்போது தன்னைப்பற்றிய உணர்வே இருக்காது. பலருக்கு ,தன்னைப் பற்றிய உணர்வே இல்லாதபோது  எப்படி வேலை செய்ய முடியும் என்ற சந்தேகம் எழலாம் .நம்மை முற்றிலும் மறந்து வேலை செய்யும்போது  அந்தப்பணி சிறப்பாக அமைகிறது. ஓவியக்கலைஞனோ சமையற்கலைஞனோ கவிஞனோ, யாராக இருக்கட்டும்,மெய்ம்மறந்து மனம் குவிந்து தங்கள் பணியில் ஈடுபடும்போது அவர்கள் கைவண்ணம்,கற்பனை வளம்,பல மடங்கு மெருகுடன் மிளிர்கிறது.
கலை ,கற்பனை எல்லாம் இருக்கட்டும்,நம்மைப்போல “சாதாரணர்கள்” கூட “சாதாரணமான” காரியங்களில் ஈடுபடும்போது, இந்த நிலையை அனுபவித்திருப்போம். சிக்கலான அக்கவுண்ட்ஸ் பிரச்சினை. நேரம் போவது தெரிய மாட்டேன் என்கிறது. குளிக்க, சாப்பிட, வீட்டில் கத்திக் கத்தி அழைத்துக் கொண்டிருந்தாலும் காதில் கூட விழ மாட்டேன் என்கிறது. கணக்கு சரியாக வந்தவுடன் வருவது நிம்மதிப் பெருமூச்சு மட்டுமல்ல. அந்த நிமிஷத்துப் பேரானந்தம்!

யோகம் என்பதெல்லாம் மிகப் பெரிய சமாச்சாரம் இல்லை. மனம் குவிந்து பணி புரிவதே யோகம்தான்!

No comments:

Post a Comment