Saturday 15 July 2017

பணியின் மூலம் பேரானந்தம்(6)


செய்க பொருளை !
ஊருணி நீர்நிறைந் தற்றே-உலகுஅவாம்
பேரறி வாளன் திரு.
                     திருக்குறள்.
உலகமெல்லாம் வழ வேண்டும் என்ற ஒப்புரவு மிக்க பேரறிவாளனின் செல்வம் ஊரில் உள்ளார் நீர் உண்ணும் குளம் ,நீரால் நிறைந்து அனைவருக்கும் பயன்படும் தன்மைத்து.
                     ஸ்ரீசந்திரன் உரை.

பலருக்கும் ஒரு சந்தேகம். இலக்கு பற்றிச் சொல்கிறீர்கள். பணம் சம்பாதிப்பதை இலக்காக வைத்துக்கொள்ளலாமா,கூடாதா? பனம் சேர்ப்பது பாவச்செயல் என்றுகூட ஒரு கருத்து சொல்லப்படுகிறதே?
இது சம்பந்தமாக சுவாமி விவேகானந்தரின் கருத்தைத் தெரிந்து கொள்வோம்.
இல்லறத்தில் உள்ளவன் சமுதாயத்தைத் தாங்கிப் பிடிக்கும் கடமை படைத்தவன். .ஏழை எளியவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பொருளீட்டாத பெண்கள் எல்லாரும் அவனை நம்பித்தான் இருக்கிறார்கள். தனது இத்தகைய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அவனுக்கென்று ஒரு கடமை இருக்கிறது. இதற்காக அவன் பொருள் ஈட்ட வேண்டும். அதுமட்டுமில்லாமல், பொருள் ஈட்டுவது ஏதோ பாவம் என்பது போலத் தவறான எண்ணங்கள் காரணமாக, , கடமைகளை நிறைவேற்றுவதன் நிமித்தம் பொருளீட்டாவிட்டால் அவன் வாழ்வதில் பொருளே இல்லை. சுருங்கச் சொல்லப்போனால், சுற்றத்தார், தான் சார்ந்துள்ள சமுதாயம் இவர்களின் நலனுக்காகப் பணம் சம்பாதிக்கப் பாடுபடாதவன் கடமையிலிருந்து வழுவியவனே ஆவான்.
ஆயிரக்கணக்கானவர்கள் பொருள் சேர்க்காவிட்டால் நமது சமுதாயம் எப்படி இருக்கும் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கலாம். ஆதரவற்றவர் இல்லங்கள், அறச்சாலைகள், இவை எல்லாம் எப்படி உருவாகியிருக்கும்? எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாகாமல் போயிருக்கும்?
தக்காருக்கு உதவுவதற்காக, பிறர் நலம் பேண, சிரமப்பட்டு பணம் ஈட்டுவது ஒரு தவம் என்றே சொல்ல வேண்டும்.
செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்; நச்சப்படாதவன் செல்வம் நடுவூருள் நச்சுமரம் பழுத்தற்று என்ற மூதுரைகள் நினைவில் கொள்ளத்தக்கன.

இலக்கு நிர்ணயம் பற்றிப் பேசினோம். இந்த ஆண்டு இவ்வளவு பொருள் ஈட்டவேண்டும் என்று இலக்கு வைத்துக்கொள்ளலாமா?  கொள்ளலாம்.
இதற்கான உத்தியை ஒரு அறச் சிந்தனையாளர் கடைப்பிடிப்பதாக  ஒரு சொற்பொழிவாளர் சொல்லக்கேட்டேன். அவரது இலக்கு இந்த ஆண்டு எவ்வளவு தொகை தர்மத்துக்காக செலவிடவேண்டும் என்பது. மொத்த வருமானத்தில் 10% அறத்துக்காக செலவிட வேண்டும் என்று அவர் ஒரு கொள்கை வகுத்துக்கொண்டுள்ளார் .தர்ம காரியத்துக்காக 10% என்பதை வைத்து அவர் ஆண்டு வருமான இலக்கை வைத்துக் கொள்கிறாராம். ஆண்டுக்கு ஆண்டு, அறச்செயலுக்கான இலக்குத் தொகையும், வருமான இலக்குத்தொகையும் அதிகரித்துக்கொண்டே போகும் என்பதைச் சொல்லத்தேவையில்லை.

நல்ல வழியில் பணம் சேர்ப்பதும், அதை நல்ல வகையில் செலவிடுவதும் நமது கடமையின்பாற்படுவதே. 

No comments:

Post a Comment