Monday 3 July 2017

பணியின் மூலம் பேரானந்தம்

பணியின் மூலம் பேரானந்தம்
(Work as a source of joy.)
(சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது.)
1.   பணி பணிக்காகவே!
கடமையாவன: தன்னைக் கட்டுதல்
பிறர்துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல்..
                     பாரதியார்.
இன்பம் விழையான் வினைவிழை2வான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
                     திருக்குறள்
தனக்கு வரும் இன்பத்தை விரும்பாதவனாகி, செயல் முடித்தலையே விரும்புபவன் ,தன் உறவினர், நண்பர் சான்றோர் ஆகியோரின் துன்பத்தை அகற்றி அவர்களைத் தாங்கும் தூண் ஆவான்.
      ஒரு நொடி கூட யாரும் வேலை செய்யாமல் இருப்பதில்லை. பேசுவது, கேட்பது, மூச்சு விடுவது, நடப்பது எல்லாமே வேலைதான். மனத்தாலோ உடலாலோ நாம் செய்யும் எல்லாமே வேலைதான்.
நாம் இப்போது பேசுவது, சுபாவத்தாலோ, சமுதாயத்தில் நமக்கு அமைந்த இடத்தினாலோ, ஏற்பட்டுள்ள கடமைகளைப்பற்றி..
சான்றோர்கள் நாம் மேற்கொள்கிற வேலையை புத்திசாலித்தனமாகச் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதுவே ஒரு அறிவியலாம்..எப்படி வேலை செய்வது என்று கற்றுக்கொள்வதன் மூலம் மேலதிகப் பலன்களைப் பெறலாம் என்கிறார்கள் .நாம் நினவில் கொள்ள வேண்டியது, எல்லாப் பணிகளும் நமக்குள் இருக்கிற ஆற்றலை மேலும் வளர்த்துக்கொள்ள  உதவுகின்றன என்பதுதான்..
உழைப்பதன் நோக்கம் என்ன? மக்கள் பலரும் பலவிதமான லாபம் கருதி உழைக்கிறார்கள். பணம், புகழ், பதவி, இந்த உலகில் தங்கள் பெயரை நிலைநாட்டிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற பலன் கருதி உழைப்பவர்கள் இருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது பணிக்காகவே பணி. விசித்திரமாக இல்லை?
இப்படிப் பணியாற்றுபவர்கள் இல்லாமல் இல்லை. தன் நலத்துக்காகவே இல்லாமல், பிறர் நலத்தையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் மேலானவர்களே. சொந்த நலமே கருதாமல் பணியாற்றுவது என்பது ஆரம்பத்தில் கஷ்டமான காரியம்தான். முயன்று பழகிக் கொள்ள வேண்டும். இதற்கு மிகுந்த சுய கட்டுப்பாடு தேவை.. தன்னலம் கருதிப் பணியாற்றும்போது ஆற்றல் விரயமாகிறது. பணியையே முன்னிறுத்திப் பணி புரியும்போது, சுய கட்டுப்பாட்டினால், மாபெரும் ஆற்றல்கள் வெளியாகின்றன. தீவிர சுய கட்டுப்பாடு என்பது மாபெரும் ஆற்றலின் வெளிப்பாடு ஆகும். நமது புறச் செயல்கள் அத்தனையையும் விட அதிகமான ஆற்றலை வெளிப்படுத்துவது சுய கட்டுப்பாடுதான். நான்கு குதிரைகள் பூட்டிய ஒரு வண்டி மலைச்சரிவில் கட்டுப்பாடின்றி வேகமாக வருகிறது. அல்லது வண்டியோட்டி குதிரைகளை அடக்குகிறான். இவற்றில் எது அதிக சக்தியின் வெளிப்பாடு? தறிகெட்டு ஓடுவதா? அடக்கி நிறுத்துவதா? ஒரு பீரங்கிக்குண்டு வான்வழியே நெடுந்தூரம் விரைந்து சென்று கீழே விழுகிறது. மற்றொன்று வழியில் சுவரில் மோதி அதன் விளைவாக அபரிமிதமான வெப்பத்தை உருவாக்குகிறது.
கட்டுப்பாடின்றி வெளியாகும் ஒவ்வொரு சக்தியும் விரயமாகிறது.    அது உங்களுக்கு ஆற்றலைத் தந்து பயன்படாது. ஆனால் அதையே அடக்கி ஆண்டால் அது ஆற்றலை வளர்க்கும். இத்தகைய சுய கட்டுப்பாடுதான் ஒரு மகத்தான, மனத்திட்பத்தை, சங்கல்பத்தை உருவாக்கும். இந்தப் பண்புதான் ஓர் இயேசுநாதரையோ புத்தரையோ உருவாக்க வல்லது.
தன்னலமின்றிப் பணி புரிவதனால் என்ன பயன் என்ற கேள்விக்குச்
சுருக்கமான பதில், சிறப்பாகப் பணி புரிய முடியும். நமது ஆற்றல் அபரிமிதமாக அதிகரிக்கும். நாடாவிட்டாலும், அத்தகைய பணிகளின் விளைவுகள் இயல்பாகவே நம்மை வந்தடையும் .நாள் பிடிக்கலாம். பலரும் இதைப் புரிந்து கொள்வதில்லை. பரபரக்கிறார்கள்.
தன்னலமின்றிப் பணியாற்றுவது சிறந்தது என்று புரிந்து கொண்டு விட்டோம் ஆனால், அது இலகுவாகக் கை கூடுவதில்லை. தன்னைக் கட்டுதல் அவ்வளவு எளிதில்லை..என்ன செய்வது? ஆரம்பித்து விடுவோம். அவ்வளவுதான். அவ்வப்போது வருகிற வேலையைச் செய்வோம் .ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னலமின்றி இருக்கப் பயில்வோம் .நம்மை வேலை செய்யத் தூண்டும் உந்து சக்தி எது என்று அவ்வப்போது சிந்தித்துப் பார்ப்போம். ஆரம்ப வருஷங்களில் ,விதிவிலக்கில்லாமல் நமது நோக்கங்கள் எல்லமே தன்னலமாக இருப்பதைக் காண்போம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக, விடாமுயற்சியினால், இந்தத் தன்னலம் கரைந்து போகும். நிறைவாக உண்மையில் தன்னலக் கலப்பே இல்லாமல் நாம் பணிபுரியக்கூடிய அந்த நாள் வரும். ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் வாழ்க்கைப்பாதையில் முட்டி மோதிக்கொண்டு செல்கையில் நாம் துளிக்கூட சுயநலக் கலப்பு இல்லாதவர்களாக மாறும் வேளை வரும் என்று நம்புவோம். அந்த நிலை வரும் தருணம் நமது அத்தனை ஆற்றல்களும் ஒருமுகப்படும். நமக்கே உரிய ஞானமும் வெளிப்படும்.




No comments:

Post a Comment