Sunday 9 July 2017

பணியின்மூலம் பேரானந்தம் (5)

  


 5. புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா!


செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கிலென் காவாக்கால் என்..
                     திருக்குறள்.
தன் சினம் வெற்றி கொள்ளும் இடத்தில் அஃது உண்டாகாமல் தடுப்பவன் சினம் தடுப்பவன் ஆவான். மற்ற இடத்தில் அதைத் தடுத்தால் என்ன? தடுக்காவிட்டால்தான் என்ன?
                     ஸ்ரீசந்திரன் உரை.

அறம் என்பதிலும், கடமை என்பதிலும் படிநிலைகள் உள்ளன. வாழ்க்கையின் ஒரு படிநிலையிலும் சூழ்நிலையிலும் கடமை ,அறம் எனப்படும் ஒன்று, மற்றொரு படிநிலையில் செய்யத்தகாததாகிவிடும்.
உதாரணத்துக்கு “Resist not Evil” என்று சான்றோர் உபதேசங்கள் கேட்டிருக்கிறோம். தீமையை எதிர்க்காதே. இதை நம் வாழ்க்கையில் கடைப்பிடிப்போமானால், நாம் வீடு வாசல் சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்து ஓட்டாண்டியாய் நிற்கக்கூடிய அபாயம் இருக்கிறது. சமூக விரோதிகள் கோலோச்சுவர். நாட்டில் பலரும் இதே கொள்கையைப் பின்பற்றுவார்களே ஆனால் சமுதாயம் சீர்குலைந்து அராஜகவாதிகளின் வேட்டைக்காடாக ஆகிவிடும்.
தீமையை எதிர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. நடைமுறையில் எதிர்க்கவும் செய்கிறோம். இப்போது ஒரு சங்கடம். தீமையை எதிர்க்கக்கூடாது என்ற கொள்கையை வைத்துள்ள ’நா’னுக்கும், நடைமுறையில் தீமையை எதிர்த்து நிற்கும் ‘நா’னுக்கும் இடையே முரண்பாடு. விளைவாக நமக்குள் ஒரு குற்ற உணர்வு. மனப்போராட்டம். நம் மீதே நமக்குக் கழிவிரக்கம், ஏற்படுகிறது. தன்னம்பிக்கை குறைகிறது. நம் மீதே நமக்கு வெறுப்பு ஏற்படுகிறது. நல்ல வண்ணம் வாழ்வதற்குத் தன்னம்பிக்கையும், நம்மை நாமே நேசிப்பதும் அவசியம். தன்னைத் தானே வெறுப்பதை விடக் கொடுமை எதுவும் கிடையாது.
இந்த முரண்பாட்டைத் தீர்க்க என்ன வழி? தீமையை எதிர்க்கத்தான் வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். காண்டீபத்தைக் கீழே எறிந்துவிட்டுப் போரிடமாட்டேன் என்று வாளாயிருந்த அர்ச்சுனனைக் கண்ணபிரான் கோழை என்றும் பொய்யொழுக்கவாதி என்றும் கடிந்துகொண்டார்.
வில்லினை எடடா-கையில்
வில்லினை எடடா-அந்தப்
புல்லியர் கூட்டத்தைப்
பூழ்தி செய்திடடா!
என்று உசுப்பி எழுப்பினார்.
அர்ச்சுனன் அரச குலத்தைச் சேர்ந்தவன். அவன் கடமை நீதிக்காகப் போர் புரிவது. இதில் தவறினால் அவன் தன் மன்னருக்கும் ராஜ்யத்துக்குமான கடமையிலிருந்து வழுவியவனாவான். தீவிர ஆலோசனைக்குப்பின் எண்ணித் துணிந்து இறங்கியபின் போர்க்களத்தில் தனது மூத்தவர்களையும் உறவினர்களையும் கண்டு அவன் மனம் சஞ்சலிக்கிறது. தனது மனத் தளர்ச்சிக்கு அன்பு என்று பெயர் கொடுத்து அறநூல்களை எல்லாம் எடுத்துச் சொல்லி நியாயப்படுத்துகிறான். அவன் குழப்பத்தைப் புரிந்துகொண்ட கண்ணனின் அறிவுரையே கீதை மலராகப் பூத்தது.
இப்போது நம் முன் உள்ள கேள்வி தீமையை எதிர்க்காதே என்ற அறவுரை சரியா? அல்லது போரிடத் தூண்டிய கண்ணனின் கீதை சரியா?
 இரண்டும் சரிதான்.
எதிர் எதிர்த் துருவமாய் உள்ள உச்ச நிலைகள் இரண்டும் ஒன்று போலவே இருக்கும். நேர்மறையின் இறுதி எல்லையும் எதிர்மறையின் இறுதி எல்லையும் ஒரே இடத்தில் சங்கமிக்கும். ஒளி அலையின் அதிர்வுகள் அதிவேகமாய் இருந்தாலும், மிகக் குறைச்சலாய் இருந்தாலும் ஒளி கட்புலனுக்குப் புலப்படாது. அது போலவே, மிக ஓங்கி உயர்ந்த ஒலியும் அலவுக்குக் குறைந்த சன்ன ஒலியும் இரண்டுமே செவிப்புலனுக்கு எட்டாது. அதே போலத்தான் பேராற்றலுக்கும் பேடிமைக்கும் உள்ள உறவு. பலவீனன், கோழை,திராணியில்லாதவன்,எதிர்க்கமுடியாமல் கோழைத்தனமாக ஓடிப்போகிறான். மற்றொருவன் தான் மரண அடி கொடுக்க முடியும் என்று தெரிந்தும் கருணை காரணமாகப் பகைவனுக்கும் ஆசி கூறுகிறான். பயந்தவனொதுங்கி நிற்பதும், வல்லவன் தண்டிப்பதும் பாவம். புத்தபிரான் தன் ராஜ்யத்தை துறந்து திருவோடு ஏந்தியது தியாகம். அன்றாடக் கஞ்சிக்கே இல்லதவன் திருவோடு ஏந்துவதில் சிலாக்கியம் ஏதும் இல்லை. காந்திஜி சொல்லுவார்-எறும்பு யானையை மன்னிக்கமுடியாது!
மையக்கருத்து இதுதான்..எதிர்த்து நில்லாமை அதி உன்னத லட்சியம் என்பதைப் புரிந்து கொண்டவன் கர்மயோகி. அதே நேரத்தில் எதிர்த்து நில்லாமை ஆற்றலின் உச்சகட்ட வெளிப்பாடு என்பதையும் அந்த உயரிய லட்சியத்தை  நோக்கிய பயணத்தின் ஒரு படியே எதிர்த்துப் போரிடுவது என்பதையும் கர்மயோகி உணர வேண்டும் .பயந்து ஒதுங்குவது பேடிமை. இன்றுபோய் நாளை வா என்றது பேராண்மை.
இந்த உயரிய லட்சியத்தை அடைவதன் முன்னம் நம் கடமை தீமையை எதிர்த்து நிற்பதே. தொடர்ந்து செயலாற்றுவோம். போரிடுவோம். தீமையைப் போட்டுத் தாக்குவோம். அப்போதுதன்,எதிர்த்து நிற்கும் பேராற்றலைப் பெற்ற பின்புதான் எதிர்த்து நில்லாமை போற்றாத்தக்க பண்பாகும்.
இதனால்தான் “பகைவனுக்கருள்வாய்” என்று தன் நெஞ்சுக்குச் சொன்ன மகாகவி,
பாதகம் செபவரைக் கண்டால்-நாம்
     பயம்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா-அவர்
     முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! –என்று பாடினார்.
.
. ,



No comments:

Post a Comment