Saturday 8 July 2017

பணியின் மூலம் பேரானந்தம் (4

பணியின் மூலம் பேரானந்தம் (4)

 .இயல்புக்கு இயைந்த இலக்கு.

ஒவ்வொருவனும் தனக்கென்று ஒரு இலட்சியத்தை வகுத்துக்கொண்டு அதனை அடைவதற்கு முனைய வேண்டும். மற்றொருவனது இலட்சியத்தை எடுத்துக்கொண்டு,தொடர்வதை விட, இதுவே வெற்றிக்கு நிச்சயமான வழியாகும்.
சுவாமி விவேகானந்தர்.
ஒரு இலட்சியத்தை முன்னிறுத்திப் பணியாற்ற வேண்டும் என்கிறார் சுவாமிஜி. இலக்கு நிர்ணயம் பற்றிப் பயிற்சி வகுப்புகளில் குறிப்பிடும்போது SMART  என்ற தொடரைப் பயன்படுத்துவார்கள்.. Simple, Measurable, Attainable, Realistic,Time-bound என்பதன் சுருக்கம் இது. மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகவோ, ,மற்றவர்கள் செய்து வெற்றி கண்டுள்ளார்களே  என்பதற்காகவோ, அந்த இலக்கு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அதைக் காப்பியடித்து முட்டி மோதிக்கொள்வதில் ஒரு பயனும் இல்லை..நமது இலக்கு நம்முடையதாக இருக்க வேண்டும். நமது இயல்புக்கு இசைந்ததாக இருக்க வேண்டும்.
என் நண்பர் ஒரு பாட்டுக் கச்சேரிக்குப் போய்விட்டு வந்து சொன்னார். “ அந்த வித்வான் மூன்று மணி நேரக் கச்சேரிக்கு ஒரு லட்சம் வாங்குகிறாராமே? நானும் பாட்டுக் கற்றுக்கொண்டு கச்சேரி செய்யலாமென்று நினைக்கிறேன்.” நண்பர் இதை நகைச்சுவையாகத்தான் சொல்லியிருக்கவேண்டும். ஏனென்றால் அவர் குரல் கர்த்தபக்குரல். இத்தகைய “இலக்கு”  சிறுபிள்ளைத்தனமானது.. “நான் கண்டக்டராவேன், டிரைவராவேன், பலூன் விற்பவராவேன்” என்று சின்னக் குழந்தைகள் அவ்வப்போது சொல்லுமே அது போல. வயது முதிர்ந்த நமக்கு இலக்கு நிர்ணயத்திலும் ஒரு முதிர்ச்சி  வேண்டும்.
குடும்பத் தொழில் நமக்கு இயல்பாக வரும். சிலபேருக்கு குடும்ப நிறுவனங்கள் இருக்கும். அவற்றை நிர்வகித்து முன்னுக்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு அவர்களுக்கு அமையும். இயல்பாக அதில் நாட்டம் இருந்தால்,குடும்ப சூழ்நிலையில் அதை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு இருந்தால்,அதிலேயே ஒரு லட்சியத்தை மேற்கொள்ளலாம்.. இல்லையெனில் எந்தத் துறையில் நமக்கு இயல்பான ஈடுபாடு இருக்கிறதோ அந்தத் துறையில் இலட்சியத்தை மேற்கொள்ளலாம். நமக்கு இயல்பாகக் கைவரும் தொழில்/கலை,சூழ்நிலை காரணமாக நமக்கு அமைந்த பணி இவை தொடர்பாகவே நமது இலட்சியத்தை அமைத்துக்கொள்வது சிறப்பு. இயல்பாக நமக்கு ஆர்வமுள்ள துறையே, நமது இயல்பான துறை என்று கொள்ளலாம் .இதற்கு ஒரு விதி சொல்வர்கள். எந்தப் பணி செய்யும்போது நீங்கள், காலத்தையும் சூழ்நிலையையும் மறந்து விடுகிறீர்களோ, அதுவே உங்களுக்கு இயல்பாகக் கைவரும் பணி. இது நாம் அனைவரும் அறிந்தது. அனுபவத்தில் உணர்வதுதான்.
இதில் இன்னொரு விஷயம் பார்க்கவேண்டும். மற்றவர்கள் அவரவர் சுபாவத்துக்கு ஏற்பத் தேர்ந்தெடுக்கும் எந்தத் தொழிலையும் இழிவாகக் கருதக்கூடாது. ஏளனமாகப் பார்க்கக்க்கூடாது. பல்வேறுபட்ட தன்மைகளிடையே ஒற்றுமை என்பதுதான் படைப்பின் நியதி. மனிதர்கள் ஒருவர் ஒருவருக்கிடையே, குணங்கள், தன்மைகளில் வேறுபாடு இருந்தாலும், அத்தனை வேறுபாடுகளும் படைப்பின் இயல்பில் அமைந்த வேறுபாடுகளே. எல்லாரையும், எல்லாப் பணிகளையும் ஒரே தராசைக்கொண்டு எடைபோடுவது, இயற்கைக்கு மாறான போராட்டங்களையும் ,பிணக்குகளையும் பேத உணர்வுகளையுமே வளர்க்கும். இப்படிச் செய்யும்போது பலருக்கும் தாங்கள் செய்யும் பணியின் மீது வெறுப்பு உண்டாகச் செய்யும் அபாயம் இருக்கிறது. விவேகம் நிரம்பிய  நமது கடமை,அவரவர்களைத் தங்கள் இலட்சியத்தில் முன்னேறும்படி ஊக்குவிப்பதும்,  இலட்சியங்கள் நேர்மையானவையாக அமைய வழிகாட்டுவதுமே ஆகும். 

No comments:

Post a Comment