Monday, 15 December 2025

அச்சம் தவிர்

 அச்சம் தவிர்

டி.எஸ்.வேங்கட ரமணி


அச்சம் தவிர்ப்பதன் அருமையை விளக்கி

நச்சென ஒருகதை நவின்றனன் பாரதி.


ஊரெலாம் கூடுமோர் உவகைத் திருவிழா.

காரெனக் கடுகிச்  செல்கிறாள் காலரா!

இடைமறித் தோர்முனி இவளைக் கேட்கிறான்

அடஉனக் கேனிந்த அவசரம் என்கிறான்.

“வெள்ளமாய்த் திரண்டனர்; வேணளவுக்குக்

கொள்ளை நோயினால் கொல்லச் செல்கிறேன்.”

கரங்களைக் குவித்துக் கனிவுடன், வேண்டாம்;

தரமன்று உன்செயல், தவிர்த்திடு என்கிறான்!

கடமை இதுவெனக் கடவுள் விதித்ததைத்

தடுத்தல் உமக்குத் தகவிலை என்கிறாள்!

முனிவன் இறைஞ்ச, முனகிக்கொண்டே,

உமக்காக,நான் ஒருநூறு பேரையே

கொள்வேன்;இதனில் கூட்டிட மாட்டேன்

கொள்கஎன் சத்தியம் எனச்சொலி விரைந்தனள்!

பல்லாயிரக் கணக்குயிர் பறிக்கப் பட்டன:

சொல்லொணாச் சீற்றம் கொண்டனன் முனிவன்!

திரும்பிவந்த காலராப்பெண்ணைச்

சரியா நீசெய்த காரியம் என்றான்1

மெல்ல நகைத்துச் சொல்லினள் காலரா!

சொல்லினை மீறிடல் சிறிதும் இல்லையே

 நானுயிர் கவர்ந்தது நூறுபேரையே!

ஏனையோர் மாண்டது அச்சத்தால் அரோ!

No comments:

Post a Comment