நரேந்திரனின் வீர உரை
நாட்டினைக்காக்க நமக்கிறைஅளித்த
நரேந்திரனின் வீரவுரை
பாட்டினில் விரிக்கும் பாங்கறியேன் எனின்
பரிசோதித்துப் பார்க்கின்றேன்!
பதினோராயிரம் அடி உயரத்தில்
பாரதம் காக்கப் புறப்பட்டீர்!
இதயத்துறுதி இமயத்தினும் மிக
இன்னும் மிகமிக மேலதிகம்!
நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் பாரத
நேசம் உரிய வீரர்களே!
பஞ்சின் மெல்லடிப் பாவையர் அல்லாப்
பாரதம் காக்கும் படை மகளீர்!
தீக்கனல் தெறிக்கும் காய்சினம் கண்டு
தீயவர் அஞ்சித் துடிக்கின்றார்!
பார்க்கெலாம் நீர் ஓர் சேதியைச் சொன்னீர்,
பாரதபூமி விலைக்கில்லை!
சின்னக்கண்ணன் வேய்ங்குழல் கீதம்
சிலிர்ப்பை அளிக்கும் சாந்தி தரும்!
அன்னைக்கே ஒரு தீங்கு நேர்ந்திடில்
அவன்கைச் சக்கரம் சுழன்றுவரும்!
சிந்தனைத்தெளிவுவீரமும் மானமும்
செறுகளத் திறமை இவை சொன்ன
செந்தமிழ்ப்புலவன் திருவள்ளுவனின்
சீரியமொழியின் திருவுரு நீர்!
இந்தியம் காக்க இன்னுயிர் ஈந்த
இனிய நம் வீர்ர் போர்க்களத்தில்
சிந்திய ரத்தம் வீண்போகாது
சிரத்தினைத் தாழ்த்திச் சூளுரைப்போம்!
புண்ணியபாரத பூமியைக்காக்கப்
புரிந்திடும் உங்கள் சாகசங்கள்
விண்ணினும் உயர்ந்த; உங்கள் புகழ்
வீடுகள் தோறும் கதை சொல்லும்!
நாடுபிடிக்க நினைந்து முனைந்தவர்
நாசமடைந்தது வரலாறு!
பீடு நடையிடும் வீர்ர்களே!யாம்
பெருமிதம் கொண்டோம் உமைக்கண்டு!
அச்சம் இன்றி அனைவரும் வாழவும்
அன்னைபூமி நலம்பெறவும்
துச்சம் என்றுயிரைத் துணிந்தவர் உமது
தூயகதை ஓர் இதிகாசம்!
No comments:
Post a Comment