நெருடல்
நெஞ்சுக்குள் ஏதொன்றோ
நெருடிக்கொண்டிருக்கிறது.
என்னவென்றே தெரியாமல்
எனக்குள்ளே பரிதவிப்பு!
நுட்பமனச் சிக்கெடுத்து
நுனிகாண முயல்கின்றேன்!
சிக்கல் மிகச் சிக்குண்டு
சித்தமிகச் சோர்கிறது!
முன் ஜென்ம நித்திரையில்
முடியாத கனவொன்று
அடிமனத்தின் ஆழத்தை
அசக்கிவரப் பார்க்கிறதா?
என்னுள்ளே மூண்டு எழும்
இன்கவிதைக் கனல் ஒன்று
நெஞ்சைப் பிளந்தெழும்பி
நர்த்தமிடத் துடிக்கிறதா?
இனி நிகழ இருக்கின்ற
இன்னலுக்கு முன் நிழலாய்ச்
சோகம் ததும்புமொரு
சேதிசொல்ல வருகிறதா?
நெஞ்சுக்குள் ஏதொன்றோ
நெருடிக்கொண்டிருக்கிறது!
No comments:
Post a Comment