Tuesday, 30 December 2025

பாரதி ஆக்கிய கவிதை

 பாரதி ஆக்கிய கவிதை

1951 செப்டம்பர் 11ம்தேதி சிவாஜி இதழில் வெளியான என் முதல் பிரசுரம்

நான்காம் படிவம் (9ம் வகுப்பு) படித்துக்கொண்டிருந்தபோது எழுதியது .சொற்குற்றம் பொருட்குற்றம் பொறுத்தருள்க!)

அடிமை வாழ்வில் திளைத்த மாந்தர் ஆண்மை பெற்று எழுந்திட,

துடித்து நின்று வீறுகொண்டு தூய்மை பெற்றெதிர்த்திட

கொடுமை செய்த வெள்ளையர்கள் கதிகலங்கி நடுங்கிட

விடுதலையின் வேட்கை பொங்கும் வீரக்கவிதை ஆக்கினாய்!

நெஞ்சகத்தில் ஈரமற்ற வஞ்சகர்கள் வீழவும்

பஞ்சமின்றி வாழமக்கள் பாடு பட்டுழைக்கவும்

தொழில்களோங்கி நாட்டில்மக்கள் திறமைபெற்று வாழவும்

எழில்மிகுந்த கவிதைகூறி இன்பமூட்டி விட்டனை!

தமிழகத்தின் பண்டைவீர உணர்வுதன்னை மீண்டுமே

நமக்களித்துப் புகழ்பெறவும் நலமுறவும் ஊக்கிய

இன்பக்கவிஞன் பாரதியின் இலக்கியங்கள் போற்றியே

அன்புகொண்டு யாவரும் அகமகிழ்ந்து வாழ்குவோம்!

No comments:

Post a Comment