Sunday 20 August 2017

கழிவு மேலாண்மை-சற்றே வித்தியாசமானது( Waste Management-with a difference )



எங்கள் ஆயுள் காப்பீட்டுக் குடியிருப்பில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ளனர். அனைவரும் பெண்மணிகள். பொறுப்பான பதவிகளில் இருந்தவர்கள். உற்சாகமாகப் பணியாற்றுகிறார்கள்.. அவர்கள் முனைப்பாக எடுத்துக்கொண்டுள்ள செயல்பாடு கழிவு மேலாண்மை. Segregation என்ற வார்த்தையும் அடிக்கடி உச்சாடனம் ஆகிறது. அடிமூலத்திலேயே ரகவாரியாகப் பிரித்தல். இது புறப்பொருள் சம்பந்தமானது. எனக்குத் தோன்றுகிறது, அகமுகமாகவும் இந்தக் கழிவு மேலாண்மை நடைபெற வேண்டும். ரகவாரிப் பிரித்தலும் நன்மை பயக்கும்.
மனமாசுகளையும் இப்படி ரகம் வாரியாகப் பிரிப்பது நன்மை பயக்கும் என்று தோன்றுகிறது. ரகம் பிரித்து Label கொடுத்துவீட்டால் சமாளிப்பது எளிது என்று நினைக்கிறேன்.
நான் அளித்துள்ள இரண்டு Labelகள் “குப்பை” ,மற்றும் “அழுக்கு”
குப்பைகள் என்பன மனத்திரையில் அடிக்கடி வந்து போய்க்கொண்டிருக்கும் மாசுகள். உபயோகமற்ற சிந்தனைகள். நேற்று நடந்தது,நாளை நடக்கலாம் என்று நினைப்பது, அவனைப்பற்றி, இவளைப்பற்றி, ஊர்வம்புகள், பைசாவுக்கும் பயனற்ற பயங்கள், கவலைகள். இவற்றால் உடனடியாகப் பெரும் பிரச்சினைகள் இல்லையென்றாலும், அவ்வப்போது ஒழித்துக்கட்டவில்லை என்றால் மனத்தை பெரும் குப்பைத்தொட்டி ஆக்கிவ்டும். பாழ்நிலத்தைத் திருத்திப் பண்படுத்தால் பார்த்தீனியக் களைகள் வளர்ந்து கொண்டே போகும் என்பதைப் போல. இதில் ஒருசொஉகரியம் என்ன என்றால், இந்தக் குப்பைகளைக் களைவது அவ்வளவு ஒன்றும் கடினமான காரியம் இல்லை. அவ்வப்போது தோன்றும் எண்ணங்களைக் கவனித்துக்கொண்டே இருந்தால் போதும். நீங்கள் கவனிக்கும்போதே அவை அந்தர்தியானம் ஆகிவிடும்.. விட்டு விடுதலை ஆகி நிறபதற்குக் கொடுக்கவேண்டிய விலை இடையறாத கண்காணிப்பே.Eternal vigilance is the price of Liberty!
ஆனால் இந்த அழுக்குகள் இருக்கின்றனவே, ரொம்பவும் கடினமான சமாசாரம். மற்றவர் சிறப்புப் பெறும்போது, நம்மை அறியாமல் அடிமனத்திலிருந்து புகைச்சல் கிளம்புகிறது, நமக்கு வேண்டாதவனுக்கு கஷ்டம் வரும்போது”வேணும்கட்டிக்கு வேணும்” என்று நினக்கைத்ட் ஓன்றுகிறது, மனத்தில் மிருகத்தனமான இச்சைகள் தோன்றுகின்றன, ‘”நான்,நான்” எனக்கு, எனக்கே எனக்கு என்னும் அகங்கார மமகாரங்கள் –இன்னும் என்ன என்ன மனசுக்குத் தோன்றுகின்றனவோ-அல்லது மனசில் தோன்றுகின்றனவோ_ அவற்றை எல்லாம் சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றைப் போக்குவது நமது சாமர்த்தியத்தினால் மட்டும் முடிவதல்ல.
இவை தோன்றுவதன் காரணம், இவை ஏற்கெனவே பலமுறை தோன்றி ஆழப்பதிந்துள்ள பதிவுகளே. இப்பிறவியில், பல முற்பிறவிகளில் இருந்தும் இந்த அழுக்குகள் சேர்ந்து வருகின்றன.’ இதில் இன்னும் ஒரு சிக்கல் என்னவென்றால், ஒருமுறை பதியும் அழுக்கு, அடுத்தமுறை அது பதிவதைச் சுலபமாக்குகிறது. ராஜாஜி சொல்லுவார் இன்று நான் ஒரு காம எண்ணம் எண்ணுவேனானால், நாளை அந்த எண்ணம் மிகச் சுலபமாக வந்து விடும்.
இப்படிப் பதிந்திருக்கும் அழுக்குகள் ஆன்மப் ப்ரகாசத்தை மறைத்து விடும். சுரண்டி எடுப்பது  அவ்வளவு சுலபமில்லை.
“படிகம் எனும் ஆன்மாவில்
 படிந்திருக்கும் அழுக்குகளைத்
 துடைத்து முடித்தல் மிகத்
 துர்லபமாய்த் தெரிகிறது”
என்று தொடங்கி முன்பு நான் எழுதிய பாடல் நினவுக்கு வருகிறது.(”மூலப் பிரதி கைவசம் இல்லை”)
இவற்றைப் போக்கிக் கொள்ள வழி இறையருளைத் தவிர வேறு இல்லை.
பூஜை, புனஸ்காரம், ஜபம், தியானம், நாம சங்கீர்த்தனம்,, ஆலய தரிசனம், புனித நீராடல் உயிர்களிடத்தில் அன்பு, சேவை, சத்சங்கம், ஆன்மீக நூல்களைப் படித்தல், பூரண சரணாகதி என்று பல வழிகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். இது முழுநேரக் கவனம் செலுத்தவேண்டிய விஷயம்.
அத்தனை அழுக்குகளையும் உடனடியாகப் போக்க முடியுமா, மாதங்கள், ஆண்டுகள், பிறவிகள் பிடிக்குமா, என்பதெல்லாம்ம் நமது ஆற்றாமையின் அழுகுரலையும் இறைவன் சித்தத்தையும் பொறுத்தது. இந்த நிலை வரும்போது வரட்டும், நாம் பாட்டுக்கு நம் முயற்சிகளைச் செய்து கொண்டிருப்போம் என்பார் மகா பெரியவர்கள். செய்யும் முயற்சி வீண்போகாது என்பது கீதை.
 தொடர்ந்து முயலுவோம்; குப்பைகளும் அழுக்குகளும் நீங்கி ஆன்மா துலாம்பரமாய்ப் பிரகாசிக்கட்டும்!



No comments:

Post a Comment