புத்தகச் சுருக்கம்.
அறநெறிச் சமயம்
மோ.க.காந்தி
4.எது நற்செயல்?
நாம் செய்யும் காரியங்களை மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ளலாம் .நற்செயல்கள், தீச்செயல்கள், நற்செயல்கள் அல்லாதவை.
எப்படி என்று பார்ப்போம். நம் அன்றாடம் பல காரியங்களைச் செய்கிறோம். அன்றாடக் கடமைகள். செய்தே தீர வேண்டும். செய்யாவிட்டால் சூழ்நிலை குழப்பமாகும். இவற்றை நற்செயல்கள் என்றும் சொல்ல முடியாது; தீச்செயல்கள் என்றும் சொல்ல முடியாது. நற்செயல்கள் அல்லாதவை என்று சொல்லலாம்.
நாம் செய்யும் காரியங்கள் நல்லதென்று உணர்ந்து முடிவெடுத்துச் செய்பவை நற்செயல்கள். நல்ல விளைவுகளை ஏற்படுத்தினாலும், நம் விருப்பத்தின் காரணமாக இல்லாமல் கடமை காரணமாகச் செய்யும் காரியங்கள் நற்செயல்கள் அல்லாதவை. குற்றம் சாட்டப்பட்டவனை, அரசன் மனம் கனிந்து மன்னித்து விடுதலை செய்ய முடிவெடுக்கிறான்.. நல்ல காரியம். மன்னிப்பு அளிக்கும் கடிதத்தைச் சேவகன் குற்றவாளியிடம் சேர்ப்பிக்கிறான். நல்ல விளைவுதான். ஆனால் அதை நற்செயல் என்று சொல்ல முடியாது.
பணியாளர் ஒருவர் எஜமானர் கோபிப்பார், வேலை போய்விடும் என்பதற்காக நேரத்துக்கு வந்து ஒழுங்காக வேலை செய்கிறார்.. நற்செயலின்பாற் படாது. சம்பளம் தரும் எஜமானருக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும், நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டுமென்று அதே பணியைச் செய்தால் அது நல்ல காரியம். முதலாளி ஒருவர், பணியாளர் வேலையை விட்டுப் போய் விடுவார், யூனியன்கள் அழுத்தம் தருகின்றன என்பதற்காக நல்ல சம்பளம், வசதிகள் செய்து தந்தால் அது நற்செயல் ஆகாது. அதே நல்ல சம்பளம், வசதிகளை, நம் ஊழியர்கள், மகிழ்வாக இருக்க வேண்டும், வசதியோடு வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு செய்தால் அது நல்ல காரியம் ஆகும்.
கிரேக்க மன்னன் மாவீரன் அலெக்ஸாண்டர் நாடுகளை வென்றான். அதனால் கிரேக்கக் கலைகள் கலாசாரம்,மொழி இவை பரவின. என்றாலும் அலெக்ஸாண்டரின் நோக்கம் அதுவல்ல. அவன் நோக்கங்கள் மண்ணாசையும் புகழாசையும். எனவே அது நற்செயலின் பாற்படாது.
இறைபக்தியை எடுத்துக்கொள்ளுவோம். அன்றாடக் கடமையாக இயந்திரம் பொலச் செய்கிறோம். அல்லது ’செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம்’ என்பதற்காகச் செய்கிறோம் அது நற்செயல் ஆகாது. இறைவனிடம் தன்னலம் கருதாத அன்பு, மனம் தூய்மைப்பட வேண்டும், பிரார்த்தனை என்பது புனிதக் கடமை என்பதற்காகச் செய்யப்படும் பிரார்த்தனை நற்செயல் ஆகும்,
எனவே, நற்செயல் தன்விருப்பத்துடன் நல்ல நோக்கத்துடன் தன்னலம் கருதாமல் செய்யும் காரியம் எனலாம்..
No comments:
Post a Comment