Friday, 2 January 2026

விரஜா நதி

  விரஜா நதி.


உடற்கூட்டை விட்டெனது

உள்ளிருந்து ஏதொன்றோ

தடைகடந்து செல்கிறது!

சஞ்சாரம் தொடர்கிறது,

காரிருளின் உள்ளுக்குள்

காற்றிலொரு தூசியென.

வாரியெனை எடுத்து

வழி செலுத்தும் புதிரொன்று!

இருள்கண்டு அஞ்சுகையில்

இரு; கொஞ்சம் பொறு என்னும்.

இல்லாத கரம்கொண்டு

இங்கிதமாய் அணைத்தேகும்!

சற்றே தொடர்ந்தவுடன்

ஜாஜ்வல்யப் பெரு வெளிச்சம்!

கற்றைகளாய் வந்தென்னைக்

களிகூரச் சூழ்கிறது!


கரைகண்ணில் தெரியாத

கடல்போன்ற நதி முன்னே

என்னை நிறுத்தி வைத்து

இனிமையெனத் தான்பேசும்.

விரஜா நதியிதுதான்;

விரைந்ததனுள் மூழ்கிக்கொள்!

சிரஞ்சீவி என்றும் நீ!

சிறு மாற்றம் அவ்வளவே!

புதியதொரு நகர் ஏகிப்

புது வாழ்வு அமைத்துக்கொள்!

புன்மையெலாம் தீர்த்துக்கொள்!

புண்ணியங்கள் சேர்த்துக்கொள்!

“வாழி!” எனச் சொல்லி 

வந்தவிதம் தான் மறையும்!

***************************************************

நதிச் சுழிப்பில் மூழ்கிவிட

ஞாபகங்கள் தான் கரையும்!


No comments:

Post a Comment