Friday, 8 June 2018

ஜகத்தை உலுக்கிய ஜாலியன்வாலாபாக் படுகொலை



ஜகத்தை உலுக்கிய ஜாலியன்வாலாபாக் படுகொலை.
1919 ஆண்டு. பிரிட்டிஷ் அரசாங்கம் ரௌலட் சட்டம் என்ற ஓர் ஆள் தூக்கிச் சட்டத்தைக் கொண்டு வந்தது.  மேலும் பல கொடுமைகளும் நிகழ்ந்த வண்ண.ம் இருந்தன. இவற்றை எதிர்த்து ஒரு போராட்டம் தொடங்க வேண்டும். என்ன செய்வது என்று ஒரு முடிவுக்கும் வராமல் காந்திஜி குழம்பிக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் சென்னையில் கஸ்தூரிரங்க ஐயங்கார் இல்லத்தில் தங்கியிருந்தபோது, புலர்ந்து, புலராப்பொழுதில், அவரது உட்குரல் ஒரு திட்டத்தை நவின்றது. ஹர்த்தால். அவர் மனத்தில் உதித்த ஹர்த்தால் வன்முறையற்றது. நாடு முழுதும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் விரதமும் பிரார்த்தனையுமாக முழுநாளையும் கழிக்க வேண்டும், ராஜாஜி இந்த யோசனையை வரவேற்றார். மார்ச் 30 என்று நாள் குறிக்கப்பட்டு அனைத்து மாகாணங்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டது. சில மாகாணங்களுக்கு உரிய காலத்தில் செய்தி போய்ச் சேர இயலாது என்ற காரணத்தால் தேதியை ஏப்ரல் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சேதி அனுப்பப்பட்டது, பஞ்சாப் மாநிலத்தவர்கள் இரண்டு தினங்களுமே ஹர்த்தாலை ஒழுங்கமைதியுடன் அனுசரித்தார்கள்.
மக்களின் ஒற்றுமையைத் தாங்கிக்கொள்ள முடியாத பஞ்சாப் அரசாங்கம்,  ஏப்ரல் 9ஆம் தேதி அன்று இரண்டு காங்கிரஸ் தலைவர்களை, மாகாணத்தை விட்டுக் கடத்தியது. ஒருவர் கிச்லூ என்ற இஸ்லாமியர். மற்றவர் சத்யபால் என்ற ஹிந்து. இது மாநிலம் முழுதும் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது ஹிந்துக்களும், இஸ்லாமியரும் தோளோடு தோளிணைந்து போராடினார்கள். “மகாத்மா காந்திக்கு ஜே!” ”ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை ஓங்குகஎன்ற குரல்கள் வானைப் பிளந்தன. மத ஒற்றுமையின் அடையாளமாக, ஹிந்துக்களும் இஸ்லாமியரும் ஒரே பாத்திரத்தில் நீர் பருகினார்கள். இந்தப் போராட்டத்தில் வன்முறை சேர்ந்தது. நெறிப்படுத்தி வழி நடத்தக்கூடிய இரண்டு தலைவர்களும் இல்லாத நிலையில், ஆத்திரமூட்டியதன் காரணமாக, இரண்டு வங்கி அதிகாரிகள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
இரண்டு தினங்களில் ஜெனரல் டயர் என்ற ராணுவ அதிகாரியை, அமைதியை நிலை நாட்டும் பொருட்டு பஞ்சாபுக்கு அனுப்பி வைத்தது பிரிட்டிஷ் அரசாங்கம்..  ஏப்ரல் 11ம் தேதி இந்த அதிகாரி பொறுப்பேற்றுக்கொண்டான்.. 12ம் தேதி இந்த அதிகாரி பஞ்சாபில் ஊர்வலங்கள், கூட்டங்கள் நடத்தத் தடை விதித்து உத்தரவில் கையெழுத்துப்போட்டு போலீஸ் அதிகாரிகளிடம் கொடுத்து விட்டான். போலீசார் இதைப் பிரகடனப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
ஏப்ரல் 13ஆம் தேதி ராமநவமி தினம். அன்று ஜாலியன்வாலாபாக் என்ற மைதானத்தில் மக்கள் பிரார்த்தனைக்காகக் கூடியிருந்தார்கள். தடை உத்தரவு பற்றிப் பெரும் அளவில் மக்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஜெனரல் டயர் குதிரை மேல் ஏறிக்கொண்டு அன்று தெருத்தெருவாக அந்த உத்தரவை உரக்க வாசித்துக்கொண்டே சென்றிருக்கிறான்.. நகரின் பல பகுதிகளுக்கு இந்த வழியிலும் செய்தி சென்றடையவில்லை.
பகல் ஒரு மணி சுமாருக்கு ,ஜெனரல் டயருக்கு, மாலை 4.30க்கு மைதானத்தில் மக்கள் ஒரு பொதுக்கூட்டம் நடத்த உத்தேசித்திருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.
ஜாலியன்வாலாபாக் என்பது, அதிகப் புழக்கத்திலில்லாத நீள்சதுர வடிவமான ஒரு நிலப்பரப்பு.. நான்கு புறங்களிலும், சுற்றியுள்ள மாளிகைகளின் நெடுஞ்சுவர்கள். உள்ளே போவதற்கும் வெளியே வருவதற்கும் குறுகலான ஒரே வழி.. இதன் வழியே ஜெனரல் டயர் உள்ளே பிரவேசிக்கிறான். அவன் வரும் வழியில் இரு புறமும்  நிற்பதற்கு வாகான மேட்டுப்பகுதி இருக்கிறது, வாகனங்கள் உள்ளே வர வழியில்லை. காரை அவன் வெளியே நிறுத்தி விட்டான். அவனுக்கு நேர் எதிர்ப்புறத்தில் 150 கஜ தூரத்தில் ஒரு பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கிறார். 10000த்திலிருந்து 20000 வரை மதிப்பிடக்கூடிய அளவிலான கூட்டம் மைதானத்தில் இருக்கிறது. டயர் 25 கூர்க்காக்கள், 25 பலுச்சி வீரட்கள்,, தவிர துப்பாக்கிகளும் கத்திகளும் ஏந்திய வீர்ர்கள், ஆயுதம் தாங்கிய இரண்டு வாகனங்களை அழைத்து வந்திருந்தான். குறுகிய வழியில் உட்புறமாக 25 வீர்ர்களும், வெளிப்புறத்தில் 25 வீர்ர்களும்.. எந்த வித எச்சரிக்கையும் இல்லாமல் அந்தக்கூட்டத்தை நோக்கி 10 நிமிஷங்கள் சரமாரியாகச் சுட்டிருக்கிறான். 1650 ரண்டுகள். அரசாங்கக் கணக்குப்படி 379 பேர் மரணம். 1140 பேர் படுகாயம்.  இறந்த சவங்களை அப்புறப்படுத்தவோ, காயமுற்றவர்களைச் சிகிச்சைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனையோ இல்லாமல் அவன் புறப்பட்டுச் சென்று விட்டான்
 பிரிட்டிஷ் அரசாங்கம் 4 ஆங்கிலேயர்களும் 3 இந்தியர்களும் அடங்கிய ஹண்டர் குழுவை அமைத்து விசாரணை த்தியது. டயர், கமிட்டியில் சொன்ன பதில்கள் திமிரானவை. என் நோக்கம் கூட்டத்தைக் கலைக்க வேண்டும் என்பதில்லை. அத்தனை பேரையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என்பதே. நான் ஏன் முன்னெச்சரிக்கை தர வேண்டும்? அது சட்ட விரோதமாகக் கூடிய கூட்டமாயிற்றே/ என்  கண்டிப்பான நடவடிக்கை மூலம் இந்தியர்கள் அனைவரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்..  குண்டுகள் தீர்ந்திராவிட்டால் அத்தனை பேரையும் காலியாக்கியிருப்பேன்!
இதை விடக் கொடுமை. போராட்டத்தின் போது ஓர் ஆங்கில மாதை அவமானப்படுத்தியதற்காக, அவள் வசித்த வீதியில் செல்லும் அனைவரும் தவழ்ந்து செல்ல வேண்டும் என்று ஓர் ஆணை. பெரியவர்கள் சிறுவர்கள் யாராயினும் சரி. எதிரில் ஆங்கிலேயர்கள் யாரும் வந்தால் இந்தியர்கள் தாங்கள் வரும் வாகனம் அல்லது குதிரையிலிருந்து இறங்கி நின்று சல்யூட் பண்ண வேண்டும், இல்லாவிட்டால் சவுக்கடி.
 இந்த அவமானங்கள் ஜாலியன்வாலாபாக் படுகொலையைவிடக் கொடுமையானவை என்றார் காந்திஜி. ஹண்டர் கமிஷனும், பிரிட்டிஷ் அமைச்சரும் டயருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துப் பதவியை ராஜிநாமாச் செய்ய வைத்தனர்..
என்றாலும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் அவரைப் பாராட்டித் தீர்மானம் போட்டது, அவருக்கு வெகுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கொடுங்கோலன் பிரிஸ்டல் என்ற இடத்தில் 1927 ஜூலை 23 மரணம் அடைந்தான்
இதையெல்லாம் இப்போது எதற்கு நினைவு கூர்கிறேன்?/.
தூத்துக்குடித் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் அஞ்சலிக்கு உரியவர்கள். துப்பாக்கிச் சூடு ஓர் துன்பியல் நிகழ்ச்சி. என்றாலும், இதை ஜாலியன்வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிடுகையில் நாம் தவறான வரலாற்றைப் பதிவு செய்கிறோம்.. விவரம் அறியாதவர்கள், “ஜாலியவாலாபாக் அப்படி என்ன பயங்கரம்? நம்ம தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு போலத்தானே? ஜெனரல் டயர் அப்படி என்ன பயங்கரக் கொடியவன்? நம்ம எடப்பாடி போலத்தானே?  (கல்கியார் கவனத்துக்கு.) என்று சொல்லும் நிலை வந்து விடக்கூடாது.
காதுள்ளவர்கள் கேட்கட்டும்!

Tuesday, 5 June 2018

அருள் வாக்கு


அருள் வாக்கு
(திலகம்-1960)
பாரதப் புண்ணியப் போர்க்களத்தே-விறல்
     பார்த்தனை ஒத்தனர் இன்று மக்கள்!
சாரதியாய் வழி காட்டுகின்றார்-அறம்
     சாற்றிடும் வாசகம் தென்பு தரும்.
தெய்வ சுதந்திரம் கண்டிடுமுன்- நாம்
     தோளொடு தோளெனக் கூடியவர்.
உய்வதுண்டோ அவர் தம்மைச் செற்று?-சொந்த
     உடன்பிறந்தோர் நம் சுற்றமன்றோ?
தர்மம் உரைப்பவர் இராஜாஜி-அருள்
     தெய்விகக் கீதையின் வார்த்தை சொல்வார்
கர்மமியற்றுதல் நம் கடமை-அதில்
     காணும் விளைவினில் எண்ணமின்றி!

Sunday, 27 May 2018

அறப்போரில் அராஜகம் புகுந்தபோது...


அறவழிப்போராட்டத்தில் அராஜகம் புகுந்தபோது…
.
 ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தொடர்ந்து நாட்டில் எதேச்சாதிகாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. போராட்ட வீர்ர்கள், கும்பல் கும்பலாய்ச் சிறைக்குத் தள்ளப்பட்டார்கள். திட்டமிட்டு அவமானப்படுத்துவது, சாட்டையடி, கடின வேலைகள் என்று துன்புறுத்தப்பட்டார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவை அரதப்பழசான, ரத்தக்கறையும், ஈரும் பேனும் நிறைந்த,  வேறு கைதிகள் உடுத்திக் களைந்த பழைய ஆடைகள். சட்டத்தை மீறி தண்டனை என்று ஏற்றுக்கொள்ள முன்வந்து விட்டபோது இவற்றைப் பற்றியெல்லாம் குறை கூறிக் கொண்டிருப்பதில் பொருள் இல்லை என்பது காந்திஜியின் கருத்து. என்றாலும், இத்தகைய கொடுமைகள், நாலு சுவர்களுக்குள் நடத்தப்படுபவை, அதேபோல உள்ளடங்கிய கிராமங்களில் நடக்கும் கொடுமைகள்  ஜாலியன்வாலாபாகை விடப் பயங்கரமானவை  என்கிறார் காந்திஜி. பின்னது வெளிப்படையாக, உலகறியச் செய்தவை. அதிர்ச்சி அடையச் செய்தவை. மக்களின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பியவை. இப்போது நடக்கும் வன்முறைகள் கமுக்கமாக  ஜனசமூகத்தை சென்றடையாமல் நடப்பவை.
காந்திஜி சுதந்திரத்துக்காகப் போராடுவதை விட முக்கியம் என்று பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், சுதந்திரமாகக் கூடும் உரிமை ஆகியவற்றைக் கூறினார். இவை போனால் எல்லாம் போச்சு! எனவே இவற்றை மீட்டெடுப்பது என்ற குறிப்பிட்ட, திட்டவட்டமான, குறிக்கோளை மட்டுமே முன்வைத்துப் போராட்டம் நடத்த வேண்டும். அந்தப் போராட்டத்தில் வன்முறை சிறிதும் இருக்கக்கூடாது.  எதிரியின்பால் காழ்ப்புணர்ச்சி இருக்கக்கூடாது. துப்பாக்கிக் குண்டுக்கு எதிர் நின்றாலும் மார்பைத் திறந்து காட்டும் தைரியம் இருக்க வேண்டும். அடிப்படை சுதந்திரங்களை இழந்து உயிர்வாழ்வதில் பொருளில்லை,
இப்படிப்பட்ட போருக்குத் தயாராக உள்ள தொண்டர்கள் எளிதில் கிடைப்பார்களா?  பம்பாய் ராஜதானியில் சூரத் பகுதியைச் சேர்ந்த பர்தோலி என்ற சிற்றூரின் மக்கள், ”நாங்கள் தயார்!” என்று கரம் உயர்த்தினார்கள். கதர் உடுத்திய 4000 தொண்டர்கள்- அவர்களில் 500 பெண்கள்- உறுதி ஏற்றார்கள். சிறைக்குச் செல்லத் தயார்! மரணத்தையும் எதிர்கொள்ளத் தயார்! எங்கள் போரில் வன்முறைக்கோ காழ்ப்புணர்ச்சிக்கோ இடம் கொடுக்க மாட்டோம்!
பர்தோலி என்ற குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே முதல் கட்டமாக இந்த அறப்போரைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது..
காங்கிரசின் இந்த முடிவினால் நாடே எழுச்சி பெற்றது. உற்சாகம் கரை புரண்டது.
இந்த நேரத்தில் வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்தது, என்பது போல ஒரு பத்திரிகைச் செய்தி.
ஐக்கிய மாகாணத்தில் (இன்றைய உத்தரப்பிரதேஷ்) கோரக்பூர் மாவட்டத்தில் சௌரி சௌரா என்ற கிராமத்தில் நடந்தது அது. ஊர்வலம் ஒன்று நடந்து முடிந்த பிறகு, பின்னால் சென்று கொண்டிருந்த சிலரை போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்திக் கண்டபடி ஏசினார்கள். பிரச்சினை முற்றியது. போலீஸ்காரர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். ரவை எல்லாம் தீர்ந்து போனதும் அவர்கள் காவல் நிலையத்துக்குத் திரும்பி விட்டார்கள். ஓர் அராஜகக் கும்பல் காவல் நிலையத்துக்குத் தீ வைத்து விட்டது.. 22 போலீஸ்காரர்கள் கூண்டோடு கைலாசம்.
காந்திஜிக்குப் பயங்கர அதிர்ச்சி. உடனடியாக  போராட்டத்தை நிறுத்தி விட்டேன் என்று அறிவித்து விட்டார். சற்று முன்தான் வைஸ்ராய்க்கு அவர் வீராவேசமாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். இப்போது போராட்டத்தை நிறுத்தி விட்டால் என்ன மானக்கேடு! கூடாது என்ற சாத்தானின் குரலை உதறித் தள்ளி விட்டு அத்தகையதொரு முடிவை எடுத்தேன் என்கிறார் காந்திஜி.
காரியக்கமிட்டி உறுப்பினர்கள் அவரை வறுத்தெடுத்து விட்டார்கள். காலம் கனிந்து வருகிற நேரத்தில் காலை வாரி விட்டாரே காந்திஜி என்பது அவர்கள் ஆதங்கம். அதுவும் பர்தோலிக்கு சம்பந்தமே இல்லாத எங்கோ ஓர் ஊரில் நடந்த வன்முறைக்காக நன்கு தயாராக இருந்த போராட்டத்தைக் கைவிடுவது சாதுர்யமாக இல்லையே!
நாடு அறப்போருக்குத் தயராகவில்லை என்பது அவரது கருத்து. தமது இமாலயத் தவற்றுக்காக அவர் வருத்தப்பட்டு  5 நாட்கள் உபவாசமிருந்தார்.. ”அகிம்சையின்” நெடி என் நாசித்துவாரத்தைத் துளைக்கிறது” என்றார் அவர்.
அவரது அறிக்கையிலிருந்து சில பகுதிகள்:
‘சௌரி சௌரா மூலம் கடவுள் என்னிடம் தெளிவாகப் பேசி விட்டார். வதைத்துக் கொல்லப்பட்ட அந்த போலீஸ்காரர்கள், ரொம்பவுமே  ஆத்திரம் ஊட்டியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. .ஏற்கெனவே இன்ஸ்பெக்டர்,  தொந்தரவுபடுத்த மாட்டோம் என்று ஊர்வலக்காரர்களிடம் சொல்லியிருக்கிறார். அதையும் மீறி, ஊர்வலம் கடந்து சென்றவுடன் பின்னால் நடந்து சென்றவர்களை ஆத்திரமூட்டி இம்சைப் படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் ஐயோ ஐயோ என்று அலறியதும்  கும்பல் திரும்பி வந்திருக்கிறது.. போலீஸ்காரர்கள் துப்பாக்கிச் சூடு நட்த்தியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்த ரவை தீர்ந்துபோய் விட்டது. காவல் நிலையத்துக்குள் புகுந்து விட்டார்கள்.  கும்பல் காவல் நிலையத்துக்குத் தீ வைத்து விட்டது.. போலீஸ்காரர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்த்தும் அவர்களைக் கண்டதுண்டமாக வெட்டித் தீக்குள் எறிந்துவிட்டார்கள். இதுவே எனக்குக் கிடைத்த தகவல். இதை செய்தது தொண்டர்கள் இல்லை என்கிறார்கள். கும்பலுக்கு போலீசார் ஆத்திரமூட்டியது வாஸ்தவம்தான், என்றும் அந்த போலீஸ்காரர்கள் அடாவடிக்குப் பேர் போனவர்கள் என்றும் சொல்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் இப்படிப்பட்ட கொடூர வன்முறைக்கு நியாயமே கிடையாது. ஒரு வேளை இது நடக்காமல் பர்தோலி சத்தியாக்கிரகம்  வெற்றி பெற்றிருந்தால், தலைதூக்கும் வன்முறையாளர்களை யாரால் கட்டுப்படுத்த முடியும்? போக்கிரிகளையும் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டால்தான் அறவழிப் போராளிகள் வெற்றி பெறுகிறார்கள் என்று அர்த்தம்.
.பிரிட்டிஷ் அரசு கொக்கரித்தது. காந்தி ஆட்டம் குளோஸ் என்று கணக்குப் போட்டது. கொஞ்ச நாளில் காந்திஜியைக் கைது செய்தது.
(1922 நிகழ்வு- ஆதாரம்  D.G.Tendulkar எழுதிய  Mahatma-Vol.II)

Monday, 5 February 2018

தெரிய வந்தது

தெரிய வந்தது
அடுக்ககத்தில்
அடுத்த இருப்பில்
சிவராம் என்பவர்
தவறிப் போனார்.
இருந்தார் என்பது

தெரிய வந்தது.

Wednesday, 31 January 2018

மனத்துக்கண் மாசு

மனத்துக்கண் மாசு.
மனதுக் குள்ளே கடகட சப்தம்;
மௌனம் காப்பேன்  வாயைப் பூட்டி.
கனவுக் கன்னியர் நர்த்தனம் நெஞ்சில்
காமம் காப்பேன் ஊருக் கஞ்சி!
சினமும் வெறுப்பும் சிந்தை நிறைய;
சிரிப்பாய் மலரும் முகத்துப் பூச்சு!
அனைத்துக் கும்பேர் அறிவோ மாகில்

அதுதான் பொய்ம்மை ஒழுக்கம் என்பது!

Thursday, 11 January 2018

எல்லாரும் சமமென்பதுறுதியாச்சு!

எல்லாரும் சமமென்பதுறுதியாச்சு!
பதவி உயர்வு கொடுத்து அந்த அலுவலகத்துக்கு தலைமைப் பொறுப்பேற்க என்னைப் பணித்த போதே எல்லாரும் என்னை எச்சரித்தார்கள். ‘ரவுசு பிடித்தஆபீசாயிற்றே! நிறைய க்ரூப்! எல்லாரும் தலைவர்கள்! எல்லாரும் புத்திசாலிகள்!” என்று. என் நேர்மையின் மேல் எனக்கு நல்ல நம்பிக்கை. “ Do the right thing! Be fair to all!”அப்புறம் என்ன பிரச்சினை வரப்போகிறது?
நான் பதவி ஏற்றுக்கொண்ட அன்றைய தினமே, மனமகிழ் மன்றக் காரியதரிசி என்று ஓர் இளைஞன் வந்தான். அறிமுகம் செய்து கொண்டு,”சார்! மன்ற ஆண்டு விழா (பத்து நாட்கள் கழித்து ஒரு நாளைக் குறிப்பிட்டு) அன்று வருகிறது. Ex-officio தலைவர் என்ற முறையில் நீங்கள் தலைமை வகித்து நடத்தித் தரவேண்டும்” என்று வினயமாகக் கேட்டுக்கொண்டான். .முகத்தில் தொலைக்காட்சிப் புன்னகையை வரவழைத்துக்கொண்டு, “ஆஹா! ரொம்ப சந்தோஷம்!~ எனக்கும் கலை இலக்கியம் எல்லாவற்றிலும் ரொம்ப ஆர்வம். இன்னும் நிறைய நிகழ்ச்சிகள் நடத்துவோம்” என்று உற்சாகமாகச் சொன்னேன். ‘” அன்று நான் ஜாய்னிங் டைம் முடிந்து வந்து சேர்ந்து விடுவேன்” பாத்ரூம் போகும் அவசரம். எழுந்திருந்தேன். “ இல்லை சார்! நீங்களும் ஏற்பாடுகளின் போது கூட இருந்தால் நல்லது” என்றான்.  “அதெல்லாம் வேண்டாம். உன்னால் முடியும் தம்பி! நீ சிறப்பாகச் செய்வாய்” என்று விட்டு அவசரத்தின் நிமித்தம் எழுந்தேன். “இல்லை சார்! போன வருஷம் ஒரு சிக்கல் வந்து விட்டது” என்றவனை அடக்கி, மன்மோகன்சிங் ராஜாவைத் தட்டிக்கொடுத்தது போல் தட்டிக்கொடுத்து, ‘ஜமாய் ராஜா!’(Not intended usage!) என்று நகர்ந்தேன். அப்போதுதான்   Management Training centreல் பயிற்சி பெற்று வந்திருந்தேன், ( Leadership, delegation, authority and responsibility, A leader is one who develops leaders  என்றெல்லாம் சொல்லிக்கொடுத்திருந்தார்கள். தவிர கொஞ்சம் உதயமூர்த்தியையும் படித்து வைத்திருந்தேன்!)  அவனை மேற்கொண்டு பேச விடவில்லை.  முட்டிக்கொண்டு வந்த அவசரத்தில் உள்ளே பாய்ந்துவிட்டேன்.
நிகழ்ச்சி தினத்தன்று வந்து சேர்ந்து விட்டேன். தலைமைப் பீடம். அருகில் காரியதரிசி இளைஞன்.
முதலில் ஒரு பெண் வந்து ‘கஜவதனா கஜானனா” என்று ஒரு பஜனைப்பாட்டை மெள்ள, நிதானமாக, துரிதகதி என்று மூன்று முறையும் ஒவ்வொரு அடியையும் பாடி முடித்தார். மரியாதைக்கோசரம் கைதட்டி வைத்தேன் .”நிகழ்ச்சி ஆரம்பிக்கலாமா?” என்று காரியதரிசியைக் கேட்க அவன் சமிக்ஞையாகக் கை காட்டினான். அடுத்து ஒரு பெண் “வெள்ளைத்தாமரை” என்ற பாரதியார் பாடலை ,80 வரிகளையும் ஆலாபனையோடு பாடி முடித்தாள். பரிதாபமாக காரியதரிசியைப் பார்த்தேன். அவர் ”பொறுமை” என்று எச்சரித்தார். பிறகு சிவன், விஷ்ணு ,லக்ஷ்மி, முருகன், இப்படி சைவ-வஷ்ணவ பேதமில்லாமல் எல்லாக்கடவுளர்களின் மீதும் பாடல்கள் பாடப்பட்டன. நான் அத்தனை கடவுளர்களின் மேலும் பாரத்தைப் போட்டு விட்டு உட்கார்ந்திருந்தேன். கூட்ட நேரத்தில் பாதிக்குமேல் ஆகி விட்டது. எல்லாம் ஓய்ந்தது என்று நான் நினத்த நேரத்தில் ஒரு கோஷ்டி ‘சாமியேய் ஐயப்பா!” என்று குரல் எழுப்பியபடி மேடையை நிறைத்தது. “  தொடர்ந்து,”இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை” என்ற நாகூர் ஹனீஃபா பாடலும் (நம்ம விட்டல்தாஸ் கூடப் பாடியிருக்கார்!) “இயேசுராஜன் வருவான் இன்னும் கொஞ்சம் நேரத்தில்” என்ற கிறிஸ்தவப் பாடலும் ஒலித்தன. “ஏன்ப்பா! இந்த ஆஃபீசில்,”புத்தமதம்,சமணமதம்,பார்ஸிமார்க்கம்,யூதம்,சீனத்துத் தாவு மார்க்கம் கண்பூசி மதம் எல்லாம் இல்லையே?” என்று  கேட்டு நிச்சயப்படுத்திக்கொண்டு , பிரதான நிகழ்ச்சிக்காக ஆவலுடன் காத்திருந்த போதுதான் அது நிகழ்ந்தது. கஞ்சி மடிப்புக் கலையாத கறுப்புச்சட்டையுடன் நாலு பேர் மேடையில் வந்து நின்று, ‘கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை; கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி” என்று முழக்கம் எழுப்பி விட்டுக் கீழிறங்கினார்கள்.
தொடர்ந்து சில நிமிஷங்கள் ஆண்டுவிழா பிரதான நிகழ்ச்சி இனிதே நடந் முடிந்தது.. இவ்வாறாக யாருக்கும் மனக்கசப்பில்லாமல் நிகழ்ச்சியை நடத்தி முடித்து விட்டோம்.. “ The Most secular Branch office of the country” என்று எங்கள் ஆஃபீசுக்கு ஏதோ விருது தரப்போவதாகப் பேசிக்கொள்கிறார்கள்.