Wednesday, 20 March 2019

எப்படி நான் மறந்தேன்?


எப்படி நான் மறந்தேன்?

பாதை ஒன்றில் பரபரப்பாகப் பயணம் புறப்பட்டேன்!
பாதி வழியில் திடுமெனநின்றேன்; எங்கே போகின்றேன்?
ஏதோ ஒன்றை நோக்கித்தானே  இவ்வழி நடக்கின்றேன்?
ஏதது என்பது ஞாபகம்இல்லை; எப்படி நான்மறந்தேன்?

வழியில் பலபல கோலகலங்கள்! வாண வெடிச்சப்தம்!
குழப்பக் குரல்கள் கூச்சல்நெரிசல் ஆங்காங் கிருக்கின்ற!!
விழவில் தவறிய குழந்தையைப்போலே அழுது தவிக்கின்றேன்!
“அழுகையை நிறுத்து; கையைப்பிடி”என ஆரிங் கழைப்பார்கள்?

வந்த வழியைத் திரும்பிப்பார்த்தால் கலக்கம் மலிகிறது!
எந்த இடத்தில் துவங்கியபயணம் என்பதும் மறந்தாச்சு!
சொந்த இடமென் றொன்றுஇருக்கணும்; அதுதான் தெரியவிலை!
நொந்து தவிக்கும் மனதுக்கமைதி எப்படிக் கிடைத்திடுமோ?



Sunday, 3 February 2019

எனது தேசம், எனது தர்மம்-2.


 நமது தேசம்,நமது சமயம்!
பல தெய்வ வழிபாடு இந்தியாவில் இல்லை என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். ஆலயங்களில் வழிபடுபவர்கள், அங்கிருக்கின்ற திருவுருவங்களை, தெய்வத்தின் எல்லா குணங்களும்-எங்கும் நிறைந்த தன்மை உட்படத்தான் இருப்பதாகக் கூறி வழிபடுவதை அருகிலிருந்து கவனித்தால் அறியலாம். அது பல தெய்வ வழிபாடு ஆகாது (.polytheism) பல தெய்வங்களுள் ஒருவரை ஆற்றல் மிக்கவராகக் கருதி,அவரை வழிபடுகின்ற கோட்பாடு(Henotheism) என்றும் இதனை விளக்க முடியாது. ‘ரோஜா மலரை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதே நறுமணம்தான் கமழும்’. பெயர்கள் விளக்கங்கள் ஆக மாட்டா.
நான் சிறுவனாயிருந்தபோது, கிறிஸ்தவப் பாதிரி ஒருவர்,ஒரு கூட்டத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. பல சுவையான செய்திகளைச் சொல்லிக்கொண்டே வந்த அவர் இடையில்,”நான் உங்கள் விக்கிரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்துவிடும்?” என்று கேட்டார். அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல்,”உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்?” என்று கேட்டார். “இறந்ததும் நீ தண்டிக்கப்படுவாய்” என்று பதிலளித்தார் பாதிரி. “அப்படியே எங்கள் விக்கிரகமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்.” என்று திருப்பிச் சொன்னார் அந்த இந்து.
பழத்தைக்கொண்டு மரம் அறியப்படுகிறது. உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுபவர்களுள், ஒழுக்கத்திலும் பக்தியிலும் ஈடிணையற்று விளங்குபவர்களை நான் காணும்போது, ”பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா?” என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.
மூட நம்பிக்கை மனிதனின் பெரும் பகைவன்தான்.  அனால் மதவெறி அதைவிட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சுக்குப் போகிறான்? சிலுவை ஏன் புனிதமானது? பிரார்த்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும்? கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன? பிராட்டஸ்டன்டினர் பிரார்த்தனை செய்யும்போது அவர்கள் உள்ளங்களில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன?
என் சகோதரர்களே! சுவாசிக்காமல் உயிர் வாழ முடியாதது போல், உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி நாம் எதையும் நினைத்துப் பார்க்க முடியாது .தொடர்பு விதியின் படி, (Law of Association) புற உருவம் அகக் கருத்தையும், அகக்கருத்து புற உருவத்தையும் நினைவுபடுத்துகிறது. அதனால்தான் இந்து வழிபடும்போது, ஒரு புறச்சின்னத்தைப் பயன்படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின்மீது சிந்தையைப் பதியச் செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான். அந்த உருவம் கடவுள் அல்ல, அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப்போல் அவனுக்கும் தெரியும். ”எங்கும் நிறைந்தது” என்று சொல்லும்போது பெரிதாக என்னதான் புரிந்துகொள்ள முடியும்? அது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்கமுடியுமா என்ன? ”எங்கும் நிறைந்தவர்” என்று நாம் திரும்பத் திரும்பச் சொல்லும்போது,மிஞ்சிப்போனால்,விரிந்த வானையும்,பரந்த வெளியையும் நினைக்கலாம். அவ்வளவுதான்.
“விவேகானந்தர் பார்வையில் இந்து மதம்”(-ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்)
(தொடர்ந்து கற்போம்.)

Sunday, 6 January 2019

எனது தேசம்,எனது தர்மம்-1..


எனது தேசம்,எனது தர்மம்.
இந்து மதம் என்று இப்போது வழங்கி வருவது இந்தியாவின் புனிதமான சனாதன தர்மம்.  இது என்று பிறந்தது என்றுணராத இயல்பினது. உலகெங்கிலும் நமது தர்மம் பரவியிருந்ததற்கான சான்றுகள் விரவிக் கிடக்கின்றன. வேதங்களே இந்த தர்மத்தின் அடிப்படை. எழுத்து வடிவமே தோன்றியிராத காலத்தில் வாய்மொழியாகவே வழி வழியாக ஓதப்பட்டு வந்து உச்சரிப்பும் சுருதிகளின் ஏற்ற இறக்கமும் மாறாமல் இன்று வரை நிலைத்திருப்பவை, சடங்குகளை மட்டும் செய்தால் போதும், கடவுள் வழிபாடே வேண்டாம் என்ற கொள்கை முதல்,எங்கும் நிறைந்தது இறைவனே என்னும் உயரிய தத்துவம் வரை நமது தர்மத்தில் அடங்கியது. எந்த நிலையில் எவர் இருந்தாலும் அவரவர் நிலையிலிருந்து படிப்படியாக ஆன்மிக முன்னேற்றத்துக்கு வழிகாட்டுவது நம் சமயம். கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்,காளிதாசன் கவிதை புனைந்ததும் ,உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் ஓர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும், நம்பரும் திறலோடொரு பாணினி ஞாலமீதில் இலக்கணம் கண்டதும்,இம்பர் வாழ்வின் இறுதி கண்டுண்மையின் இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும்” மேலும் பாரதி சொல்வன எல்லாமும் நமது மரபணுவில் வந்தவைதான். புராணங்கள், இதிகாசங்கள், பாகவதம், பகவத்கீதை இவை எல்லாமே வேதக் கருத்துகளை விளக்க வந்தவைதாம்.. ஆழங்காண முடியாத சமுத்திரம் நமது சமயம்.
எந்த சமயத்திலும் தத்துவங்களும் உண்டு. நடைமுறை சம்பிரதாயங்களும் உண்டு..சமூக சூழ்நிலைகள் மாறும்போது நடைமுறைப்படி அவ்வப்போது ஸ்ம்ருதிகள் வரையப்பட்டுள்ளன. சமயத்தில் சேர்ந்துள்ள அழுக்குகளைக் களைந்து சமயத்துக்குள்ளிருந்தே நமது சீர்திருத்தவாதிகள் தோன்றிப் புத்துயிர் ஊட்டியிருக்கிறார்கள். ராஜாராம் மோகன் ராயிலிருந்து, விவேகானந்தர், நாராயண குரு ஈறாகப் பலர் தோன்றியிருக்கிறார்கள். அரும்பணி ஆற்றியிருக்கிறார்கள். நமது சமயத்தில் நாம் என்ன சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று நம் மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களோ, புறச் சமயத்துக்கு மாறியவர்களோ, சொல்ல வேண்டாம்.  அவர்கள் பேசுவது துவேஷத்தினாலேயே என்பதை புரிந்துகொள்கிறோம்.
  இதில் பரிதாபத்துக்குரிய  விஷயம் என்னவென்றால், தொலைக்காட்சி விவாதத்தில் நம்ம ஆள் ஒருத்தனை வைத்துக்கொண்டு நாலு- மதம் மாறியவர்கள், நம்பிக்கையற்றவர்கள் கும்மி அடிப்பார்கள். பதிலளிக்க வாயைத் திறக்கும்போது தீநெறியாளர் குறுக்கே குறுக்கே வந்து வாயை அடைத்து விடுவார். தத்துவ சர்ச்சைக்கேற்ற இடமா? நேரமா? மக்களா?
இதைத்தவிர ஒரு வீராங்கனை,”பக்தி என்றால் என்ன, சொல்லுங்கள்!” என்று சவால் விடுவார். அவருக்கு நாம் தெய்வத்தின் குரலை வைத்துக்கொண்டு பாடம் எடுக்க வேண்டும். இன்னொருவர் ஆண்டாள் தாசி என்பார். அவருக்கு நாம் அப்படி இல்லை என்று வாதங்களை வைக்க வேண்டும்.. மகாபாரதம் காம நூல் என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போகிற ஒருவருக்கு நாம் பிரவசனம் ஏற்பாடு செய்யவேண்டும் கோவில்கள் எல்லாம் சாத்தானின் கூடாரம் என்பவருக்கு பதில் சொல்ல வேண்டும். பருவப்பெண்கள் வந்தால் ஐயப்பன் எந்திருச்சி ஓடிடுவாரா என்று எகத்தாளம் பேசுபவர்களுக்கு,அவர்கள் பாஷையிலேயே பதில் அடி கொடுக்க வேண்டும்!.. இதெல்லாம் தேவையா? உங்கள் வேலையை, உங்கள் மதத்தை,. நீங்கள் பார்த்துக்கொண்டு போங்கள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
மாற்று மதத்தாரும், அம்மதத்துக்குப் புதிதாகத் தாவியவர்களும் பேசும் இத்தகைய கொச்சைப் பேச்சுகள் இந்துக்களை ஆத்திரம் ஊட்டும் என்பதில் வியப்பில்லை. இதோடுகூட இந்து சமய ஆலய விஷயம் என்றால் ஒரு வன்மத்தோடு உடனடியாக இரவோடு இரவாக எவ்வாற்றானும்  நிறைவேற்றி விடத் துடிப்பவர்கள், மாற்று சமயம் ஒன்று இதே சூழ்நிலையில் இருக்கும்போது, உண்ர்ச்சிபூர்வமான விஷயம் என்றொரு நியாயத்தைச் சொல்லி நீக்குப்போக்காக நடந்து கொள்வது எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் ஆகும். இதெல்லாமே முன் கூட்டித் திட்டமிட்ட ஒரு செயல்பாடாகவே படுகிறது.  எதிர்வினை என்ன ஆகிறது? “எங்களைச் சொல்ல வந்துட்டியே? கிறிஸ்தவத்தைக் கேட்டியா? இஸ்லாமைக் கேட்டியா?” என்கிறார்கள். மாற்று மதத்தையும் அவர்களது பழக்க வழக்கங்களையும் பழிக்கிறார்கள், அவர்கள் வணங்கும் கடவுள்களை இகழ்கிறார்கள். இது காரணமாக நெருங்கிப் பழகிக்கொண்டிருந்த இரு சமயத்தவரிடம் மன வருத்தம், கசப்பு, இறுதியில் துவேஷம் வருகிறது. சமூக நல்லுறவு கெடுகிறது. சமுதாயம் சீர்குலைகிறது. இதுதான் நோக்கமே.
இந்து சமயம் எப்போதும் சர்மதர்ம சமபாவம் கொண்டதே. நானறிந்த எல்லா இடங்களிலும் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் சகோதர பாவத்துடனே பழகி வந்திருக்கிறார்கள். இது கூடாது. இதைக் குலைக்க வேண்டும் என்பதே உள் நோக்கம்.  துவேஷப் பிரசாரம் செய்பவர்களை நிறுத்தி ஒவ்வொருவர் முகமாக டார்ச் அடித்துப் பாருங்கள். தமிழ் நாடு என் நாடு. இந்தியா என்பது இடைக்கால ஏற்பாடு என்பவர்கள்.  இவர்களை ஒத்த மற்ற பிரிவினைவாதிகள்,மற்றும் இவர்களோடு கூடா நட்புக் கொண்டிருப்பவர்கள் பத்வியில் இருக்கும்போது தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் நிறையச் சேர்த்து வைத்துக்கொண்டு, எத்தைத் தின்றால் பித்தம் தீரும், இந்த ஆட்சி போனால்தான் தப்பிக்கலாம் என்ற அவஸ்தையில் இருப்பவர்கள். எப்படியாவது தங்கள் குடும்ப ஆட்சியைக் கொண்டு வந்து விட வேண்டும் என்று துடியாய்த் துடித்துக்கொண்டிருப்பவர்கள். இல்லா விட்டால் இந்திராபேரனும் இம்ரான் கானும் ஒரே குரலில் பேச வேண்டுவதன் காரணம் என்ன?
எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் போகட்டும்..
நம்மைப் பொறுத்தவரை பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்து துவேஷக்கட்சிகளோ, அரசியல்வாதிகளோ, அவர்களுக்குத் துணை நிற்பவர்களோ ஆட்சிக்கு வந்துவிடாமல் இருக்க முழு முயற்சி முன்னெடுக்க வேண்டும்.
நமது தேசம், நமது சமயம் சம்பந்தமான விஷயங்களைத் தொய்வில்லாமல் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதித்திட வேண்டும் .பாஸிட்டிவ் ஆக காழ்ப்பின்றி உள்ளதை வெளியிட்டால் போதும். விவேகானந்தரிலும், தெய்வத்தின் குரலிலும் நமக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன. தொடர்ந்து  நானும்  நமது தேசம், நமது தர்மம் என்ற தலைப்பில் பதிவிட்டு வர உத்தேசித்திருக்கிறேன்..என்னால் ஆன அணில்பணி.

Tuesday, 18 December 2018

வீர சுதந்திரம்


வீர சுதந்திரம்
நூற்றாண் டிருபதில் ஆண்டு முப்பதில்
      நேசப் புரட்சி துவங்கியது!
காற்றின் திசையிங்கு மாறியது
      ககனமும் புவனமும் குலுங்கியது1
நோற்றுப் பாரத அன்னை பயந்த
      நிர்மலப் புதல்வன் தலைமையிலே
சாற்றிடும் சத்தியச் சூளூரை பூண்ட
      தொண்டர்கள் படையின் பீடு நடை!
சபர்மதியிருந்து தண்டியங் கரைவரை
      சத்திய சேனையின் அணிவகுப்பு!
உவரியிலிருந்து ஒரு பிடி உப்பில்
      உவகையின் கடலில் அலைபொங்கும்!
கவிக்குயில் ஆங்கே ரட்சகரே எனக்
      களிப்பில் மிஞ்சிக் கூவலுறும்!
தவச்சிறை எனும்எர வாடாவுக்குத்
      தலைவனைத் தள்ளிச் செல்கின்றார்!
முட்டி உடைந்தது;மண்டை பிளந்தது;
      மூர்க்கத்தனத்தின் உச்சநிலை!
விட்டுவிடாமல் கைப்பிடி உப்பை
      வீரப்படையினர் இறுக்குகிறார்!
கட்டிய தலைஉடை கையிலெடுத்துக்
      கவிழ்ந்தவர் நெஞ்சு நிமிர்ந்தார்கள்!
எட்டையபுரத்தான் வீரசுதந்திரம்
      எழுதிய கவிதை விதைத்தாச்சு!    

     



 ;
.

Saturday, 1 December 2018

வாழ்க்கையில் எனக்கிது இசைகிறது....


வாழ்க்கையில் எனக்கிது இசைகிறது!

அஹம் ப்ரம்மாஸ்மி என்றார்கள்!
அதுதான் மோட்சம் என்றார்கள்!
வார்த்தை எனக்குப் புரிகிறது!
வாழ்க்கையில் அதுதான் கூடவில்லை!

தாமரை இலையின் தண்ணீராய்த்
தனித்திரு என்று சொன்னார்கள்!
வார்த்தை புரிந்து என்ன பயன்?
வழிதான் எதுவெனத் தெரியவில்லை!

ஆரவாரம் புறத்தெனினும்
அகத்துள் சாந்தி என்றார்கள்!
இதுவும் நன்கு புரிந்தாலும்
இயல்பில் நடைமுறைக்காகவிலை!

சரணாகதி என விட்டுவிடு!
சஞ்சலம் உனக்கிலை என்றார்கள்!
சத்தியம் இதுவெனப் புரிகிறது!
சாத்தியம் ஏனோ ஆகவிலை!

நல்லவனாக இருந்துவிடு!
நல்லது செய்திடு என்றார்கள்!
வாய்மை விளக்கம் புரிகிறது!
வாழ்க்கையில் எனக்கிது இசைகிறது!

Wednesday, 18 July 2018

மற்றொரு பிறவி


மற்றொரு பிறவி..
சின்னச்செப்பு வாய்முலை கவ்வும்;
இன்னொருமுலையை ஒருகரம்வருடும்;
கன்னம்இழைக்கும் கரங்களின் நேசம்
அன்னையின்மடியில் அதிசுகவாசம்!

பிள்ளைப்பருவம் பிரிவினைஎன்பதும்
கள்ளமும்துரோகமும் அறியாக்காலம்;
துள்ளி ஆடிடும் தோழமையோகம்
பள்ளிப்பருவம் பரவசகாலம்!

காலம்தனது கடமையைச்செய்யும்
மேலுதட்டின்மேல் குறுமயிர் அரும்பும்;
சேலையைக்கண்டால் சிலிர்ப்புத்தோணும்
நாலுபேரிடம் சொல்லிடநாணும்!

பதவியும்பணமும் பவிசும்சேர்ந்தபின்
அதிகாரத்தின் ஆணவம்ஓங்கும்
அதற்கும்மேலே அதற்கும்மேலே
அதிகமதிகம் குவிக்கத்தோன்றும்!

சொற்கள் குழறும்;சொள்ளுகளொழுகும்
லொக்கெனுமிருமல்;கட்புலன்மங்கும்
பக்கத்திருந்தவர் பதறிவிலகுவார்!
அக்கணம் நமக்கு யார்துணைவருவார்?

பற்றும்பாசமும் விட்டேவிலகப்
பற்றிக்கொள்ளெனும் பஜகோவிந்தம்
கற்றிருந்தாலும் கருத்துறவில்லை!
சற்றொருகணம்தான்-மற்றொருபிறவி!  



Friday, 8 June 2018

ஜகத்தை உலுக்கிய ஜாலியன்வாலாபாக் படுகொலை



ஜகத்தை உலுக்கிய ஜாலியன்வாலாபாக் படுகொலை.
1919 ஆண்டு. பிரிட்டிஷ் அரசாங்கம் ரௌலட் சட்டம் என்ற ஓர் ஆள் தூக்கிச் சட்டத்தைக் கொண்டு வந்தது.  மேலும் பல கொடுமைகளும் நிகழ்ந்த வண்ண.ம் இருந்தன. இவற்றை எதிர்த்து ஒரு போராட்டம் தொடங்க வேண்டும். என்ன செய்வது என்று ஒரு முடிவுக்கும் வராமல் காந்திஜி குழம்பிக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் சென்னையில் கஸ்தூரிரங்க ஐயங்கார் இல்லத்தில் தங்கியிருந்தபோது, புலர்ந்து, புலராப்பொழுதில், அவரது உட்குரல் ஒரு திட்டத்தை நவின்றது. ஹர்த்தால். அவர் மனத்தில் உதித்த ஹர்த்தால் வன்முறையற்றது. நாடு முழுதும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் விரதமும் பிரார்த்தனையுமாக முழுநாளையும் கழிக்க வேண்டும், ராஜாஜி இந்த யோசனையை வரவேற்றார். மார்ச் 30 என்று நாள் குறிக்கப்பட்டு அனைத்து மாகாணங்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டது. சில மாகாணங்களுக்கு உரிய காலத்தில் செய்தி போய்ச் சேர இயலாது என்ற காரணத்தால் தேதியை ஏப்ரல் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சேதி அனுப்பப்பட்டது, பஞ்சாப் மாநிலத்தவர்கள் இரண்டு தினங்களுமே ஹர்த்தாலை ஒழுங்கமைதியுடன் அனுசரித்தார்கள்.
மக்களின் ஒற்றுமையைத் தாங்கிக்கொள்ள முடியாத பஞ்சாப் அரசாங்கம்,  ஏப்ரல் 9ஆம் தேதி அன்று இரண்டு காங்கிரஸ் தலைவர்களை, மாகாணத்தை விட்டுக் கடத்தியது. ஒருவர் கிச்லூ என்ற இஸ்லாமியர். மற்றவர் சத்யபால் என்ற ஹிந்து. இது மாநிலம் முழுதும் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது ஹிந்துக்களும், இஸ்லாமியரும் தோளோடு தோளிணைந்து போராடினார்கள். “மகாத்மா காந்திக்கு ஜே!” ”ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை ஓங்குகஎன்ற குரல்கள் வானைப் பிளந்தன. மத ஒற்றுமையின் அடையாளமாக, ஹிந்துக்களும் இஸ்லாமியரும் ஒரே பாத்திரத்தில் நீர் பருகினார்கள். இந்தப் போராட்டத்தில் வன்முறை சேர்ந்தது. நெறிப்படுத்தி வழி நடத்தக்கூடிய இரண்டு தலைவர்களும் இல்லாத நிலையில், ஆத்திரமூட்டியதன் காரணமாக, இரண்டு வங்கி அதிகாரிகள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
இரண்டு தினங்களில் ஜெனரல் டயர் என்ற ராணுவ அதிகாரியை, அமைதியை நிலை நாட்டும் பொருட்டு பஞ்சாபுக்கு அனுப்பி வைத்தது பிரிட்டிஷ் அரசாங்கம்..  ஏப்ரல் 11ம் தேதி இந்த அதிகாரி பொறுப்பேற்றுக்கொண்டான்.. 12ம் தேதி இந்த அதிகாரி பஞ்சாபில் ஊர்வலங்கள், கூட்டங்கள் நடத்தத் தடை விதித்து உத்தரவில் கையெழுத்துப்போட்டு போலீஸ் அதிகாரிகளிடம் கொடுத்து விட்டான். போலீசார் இதைப் பிரகடனப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
ஏப்ரல் 13ஆம் தேதி ராமநவமி தினம். அன்று ஜாலியன்வாலாபாக் என்ற மைதானத்தில் மக்கள் பிரார்த்தனைக்காகக் கூடியிருந்தார்கள். தடை உத்தரவு பற்றிப் பெரும் அளவில் மக்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஜெனரல் டயர் குதிரை மேல் ஏறிக்கொண்டு அன்று தெருத்தெருவாக அந்த உத்தரவை உரக்க வாசித்துக்கொண்டே சென்றிருக்கிறான்.. நகரின் பல பகுதிகளுக்கு இந்த வழியிலும் செய்தி சென்றடையவில்லை.
பகல் ஒரு மணி சுமாருக்கு ,ஜெனரல் டயருக்கு, மாலை 4.30க்கு மைதானத்தில் மக்கள் ஒரு பொதுக்கூட்டம் நடத்த உத்தேசித்திருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.
ஜாலியன்வாலாபாக் என்பது, அதிகப் புழக்கத்திலில்லாத நீள்சதுர வடிவமான ஒரு நிலப்பரப்பு.. நான்கு புறங்களிலும், சுற்றியுள்ள மாளிகைகளின் நெடுஞ்சுவர்கள். உள்ளே போவதற்கும் வெளியே வருவதற்கும் குறுகலான ஒரே வழி.. இதன் வழியே ஜெனரல் டயர் உள்ளே பிரவேசிக்கிறான். அவன் வரும் வழியில் இரு புறமும்  நிற்பதற்கு வாகான மேட்டுப்பகுதி இருக்கிறது, வாகனங்கள் உள்ளே வர வழியில்லை. காரை அவன் வெளியே நிறுத்தி விட்டான். அவனுக்கு நேர் எதிர்ப்புறத்தில் 150 கஜ தூரத்தில் ஒரு பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கிறார். 10000த்திலிருந்து 20000 வரை மதிப்பிடக்கூடிய அளவிலான கூட்டம் மைதானத்தில் இருக்கிறது. டயர் 25 கூர்க்காக்கள், 25 பலுச்சி வீரட்கள்,, தவிர துப்பாக்கிகளும் கத்திகளும் ஏந்திய வீர்ர்கள், ஆயுதம் தாங்கிய இரண்டு வாகனங்களை அழைத்து வந்திருந்தான். குறுகிய வழியில் உட்புறமாக 25 வீர்ர்களும், வெளிப்புறத்தில் 25 வீர்ர்களும்.. எந்த வித எச்சரிக்கையும் இல்லாமல் அந்தக்கூட்டத்தை நோக்கி 10 நிமிஷங்கள் சரமாரியாகச் சுட்டிருக்கிறான். 1650 ரண்டுகள். அரசாங்கக் கணக்குப்படி 379 பேர் மரணம். 1140 பேர் படுகாயம்.  இறந்த சவங்களை அப்புறப்படுத்தவோ, காயமுற்றவர்களைச் சிகிச்சைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனையோ இல்லாமல் அவன் புறப்பட்டுச் சென்று விட்டான்
 பிரிட்டிஷ் அரசாங்கம் 4 ஆங்கிலேயர்களும் 3 இந்தியர்களும் அடங்கிய ஹண்டர் குழுவை அமைத்து விசாரணை த்தியது. டயர், கமிட்டியில் சொன்ன பதில்கள் திமிரானவை. என் நோக்கம் கூட்டத்தைக் கலைக்க வேண்டும் என்பதில்லை. அத்தனை பேரையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என்பதே. நான் ஏன் முன்னெச்சரிக்கை தர வேண்டும்? அது சட்ட விரோதமாகக் கூடிய கூட்டமாயிற்றே/ என்  கண்டிப்பான நடவடிக்கை மூலம் இந்தியர்கள் அனைவரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்..  குண்டுகள் தீர்ந்திராவிட்டால் அத்தனை பேரையும் காலியாக்கியிருப்பேன்!
இதை விடக் கொடுமை. போராட்டத்தின் போது ஓர் ஆங்கில மாதை அவமானப்படுத்தியதற்காக, அவள் வசித்த வீதியில் செல்லும் அனைவரும் தவழ்ந்து செல்ல வேண்டும் என்று ஓர் ஆணை. பெரியவர்கள் சிறுவர்கள் யாராயினும் சரி. எதிரில் ஆங்கிலேயர்கள் யாரும் வந்தால் இந்தியர்கள் தாங்கள் வரும் வாகனம் அல்லது குதிரையிலிருந்து இறங்கி நின்று சல்யூட் பண்ண வேண்டும், இல்லாவிட்டால் சவுக்கடி.
 இந்த அவமானங்கள் ஜாலியன்வாலாபாக் படுகொலையைவிடக் கொடுமையானவை என்றார் காந்திஜி. ஹண்டர் கமிஷனும், பிரிட்டிஷ் அமைச்சரும் டயருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துப் பதவியை ராஜிநாமாச் செய்ய வைத்தனர்..
என்றாலும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் அவரைப் பாராட்டித் தீர்மானம் போட்டது, அவருக்கு வெகுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கொடுங்கோலன் பிரிஸ்டல் என்ற இடத்தில் 1927 ஜூலை 23 மரணம் அடைந்தான்
இதையெல்லாம் இப்போது எதற்கு நினைவு கூர்கிறேன்?/.
தூத்துக்குடித் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் அஞ்சலிக்கு உரியவர்கள். துப்பாக்கிச் சூடு ஓர் துன்பியல் நிகழ்ச்சி. என்றாலும், இதை ஜாலியன்வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிடுகையில் நாம் தவறான வரலாற்றைப் பதிவு செய்கிறோம்.. விவரம் அறியாதவர்கள், “ஜாலியவாலாபாக் அப்படி என்ன பயங்கரம்? நம்ம தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு போலத்தானே? ஜெனரல் டயர் அப்படி என்ன பயங்கரக் கொடியவன்? நம்ம எடப்பாடி போலத்தானே?  (கல்கியார் கவனத்துக்கு.) என்று சொல்லும் நிலை வந்து விடக்கூடாது.
காதுள்ளவர்கள் கேட்கட்டும்!