Sunday, 30 July 2017

பணியின் மூலம் பேரானந்தம் (11)

பணியின் மூலம் பேரானந்தம் (11)
மனம் குவிந்து செயல் புரிக!
கடமையில் திறமை என்பதைப் பற்றிச் சிந்தித்து வருகிறோம்.. சுவாமிஜி செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் என்று பேசுபவர் அல்லர், அன்றாட வாழ்வில் செய்ய வேண்டியது எது செய்யக்கூடாதது எது, செயலாற்றுவது எப்படி என்பது பற்றிய செய்திகள் அவர்கள் வாக்கில்: நிறையவே உள்ளன.
குறிக்கோளைப் பற்றியும் அடைய வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் சென்ற இயலில் பார்த்தோம்.
சிறப்பாகப் பணி ஆற்றுவதற்கு முக்கியத் தேவை மனம் குவிந்து செயலில் ஈடுபடுவது.( Concentration) இப்படி மனம் ஒன்றிச் செயல்படும்போது தன்னைப்பற்றிய உணர்வே இருக்காது. பலருக்கு ,தன்னைப் பற்றிய உணர்வே இல்லாதபோது  எப்படி வேலை செய்ய முடியும் என்ற சந்தேகம் எழலாம் .நம்மை முற்றிலும் மறந்து வேலை செய்யும்போது  அந்தப்பணி சிறப்பாக அமைகிறது. ஓவியக்கலைஞனோ சமையற்கலைஞனோ கவிஞனோ, யாராக இருக்கட்டும்,மெய்ம்மறந்து மனம் குவிந்து தங்கள் பணியில் ஈடுபடும்போது அவர்கள் கைவண்ணம்,கற்பனை வளம்,பல மடங்கு மெருகுடன் மிளிர்கிறது.
கலை ,கற்பனை எல்லாம் இருக்கட்டும்,நம்மைப்போல “சாதாரணர்கள்” கூட “சாதாரணமான” காரியங்களில் ஈடுபடும்போது, இந்த நிலையை அனுபவித்திருப்போம். சிக்கலான அக்கவுண்ட்ஸ் பிரச்சினை. நேரம் போவது தெரிய மாட்டேன் என்கிறது. குளிக்க, சாப்பிட, வீட்டில் கத்திக் கத்தி அழைத்துக் கொண்டிருந்தாலும் காதில் கூட விழ மாட்டேன் என்கிறது. கணக்கு சரியாக வந்தவுடன் வருவது நிம்மதிப் பெருமூச்சு மட்டுமல்ல. அந்த நிமிஷத்துப் பேரானந்தம்!

யோகம் என்பதெல்லாம் மிகப் பெரிய சமாச்சாரம் இல்லை. மனம் குவிந்து பணி புரிவதே யோகம்தான்!

Friday, 28 July 2017

பணியின் மூலம் பேரானந்தம்- (10).


திறமைதான் நமக்குச் செல்வம்!

. சோர்வின்றிச் செயல் புரிய வேண்டும்.இயல்பாய் அமைந்த கடமைகளைச் செய்ய வேண்டும் .தன்னலம் இன்றிச் செயல் புரிய வேண்டும். எல்லாம் சரி. நாம் சிந்திக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உண்டு..திறம்படச் செயல் புரிவது..எவ்வளவுதான் நல்ல நோக்கங்கள் இருந்தாலும்,செயலாற்றும் திறமை  இல்லையென்றால் நமது அத்தனை பிரயத்தனங்களும் வீணாவது மட்டுமல்லாமல் ,வேண்டாத விளைவுகளும்  ஏற்படக்கூடும். செயலில் திறமையையே ஓர் அறிவியலாக கீதை சொல்கிறது. அதனால்தான் தெருப் பெருக்குவதைக்கூட ஒரு சாத்திரமாக பாரதியார் கூறினார்.
திறமையாகச் செயல் படுவது எப்படி என்பதை விவேகானந்தப் பலகணியின் மூலம் காண முயல்வோம்.
இலக்கு நிர்ணயம் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். நவீன நிர்வாக இயல் கண்ணோட்டத்தில் சுவாமிஜியின் சிந்தனையைப் பொருத்திப் பார்த்தோம். இலக்கை நிர்ணயித்த பிறகு அதை அடையும் வழிகளையும் பற்றி சுவாமிஜி சொல்கிறார்.
இலக்கு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனை அடையும் வழிகள் சின்ன சின்ன அடிகளாகவே அமைகின்றன.. அந்த சின்ன சின்ன அடிகளை கவனத்துடனும் கருத்துடனும் எடுத்து வைக்க வேண்டும். ஒரு குதிரைக்கு லாடம் அடிக்காததால் ஒரு ராஜ்யமே பறிபோனதாகச் சொல்லும் வழக்கு உண்டு.
நம்மில் பெரும்பாலோரிடம் இருக்கும் கோளாறு, மகத்தான இலட்சியக் கனவின் பரவசத்தில் ஆழ்ந்து போய் அதை அடைவதற்கான சின்ன சின்ன வழிமுறைகளில் கவனம் செலுத்தத் தவறி விடுகிறோம். 99 விழுக்காடு  இலட்சியத் தோல்விகளுக்கான காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் வழிகளைக் கோடை விட்டிருப்பது தெரிய வரும். இலக்கை நிர்ணயித்தவுடன் அதை அடைவதற்கான படிக்கட்டுகளையும் நடவடிக்கைகளையும் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அவ்வப்போது அவை சரியாக நடைபெறுகின்றனவா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும். சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி, அனுபவத்தின் அடிப்படையில் மாற்றங்களைச் செய்து கொள்ளத் தயங்கக் கூடாது. செயல்தான் விளைவை உருவாக்குகிறது  என்பதை மறந்து விடக்கூடாது. விளைவு எங்கிருந்தோ தானாக வந்து குதிப்பதில்லை. செய்யும் காரியம் ஒழுங்காகவும் ஆற்றலுடனும் அமைந்தாலொழிய ஏற்ற முடிவை அடைய முடியாது .சின்ன சின்ன அடிகளை எடுத்து வைக்கும் நேரத்தில் அவற்றில் கவனமாக இருக்க வேண்டும். இறுதி இலக்கைப் பற்றி-வெற்றி தோல்வியைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. பந்தை எதிர்கொள்ளும்போது கண் ஸ்கோர்போர்டுக்குப் போகக்கூடாது.
பகவத்கீதை இதைதான் சொல்கிறது. செய்யும் காரியத்தில் மனம் முழுமையையும் ஈடுபடுத்திச் செய்ய வேண்டும் முழுத் திறமையையும் பயன்படுத்திச் செய்ய வேண்டும். வேறு எந்த விஷயமும் நாம் கையில் எடுத்துக்கொண்டுள்ள வேலையில் இருந்து திசை திருப்பக்கூடாது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இருக்கிறது. . ஒட்டுமொத்தக் குறிக்கோளையும் அதற்கு இந்த அடிகளின் முக்கியத்தின் அளவையும்  சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அடிக்கடி சரிபார்த்துக் கொள்ள வேண்டும். குறிக்கோளை மறந்து விடக்கூடாது.
 அதே நேரம்  Process என்பது நமக்கு ஒரு obsession ஆகிவிடக்கூடாது.
 “உலகை அளக்கப் புறப்பட்ட பூதம்
 அடிக்குச்சியைச் செப்பனிட்டுச் செப்பனிட்டு
 ஓய்ந்தது”
என்பார் கவிஞர் விக்கிரமாதித்யன்.
இதைவிட விசித்திரமாக ஒன்றைச் சொல்வார் சுவாமிஜி. அவர் சொல்கிறார், நாம் ஒரு காரியத்தை எடுத்துச் செய்கிறோம். முழுத்திறமையையும் பயன்படுத்தியே செய்கிறோம். என்றாலும் ஒரு சிக்கல் ஏற்பட்டு அந்தக் காரியம் துன்பத்தையே விளைவிக்கிறது. ஆனால், நம்மால் அதை விட முடிவதில்லை. காரணம் அந்த வேலையில் நாம் சிக்கிக்கொண்டு விட்டோம்.தேன்குடிக்க மலருக்குச் செல்லும் தேனீ பிசுக்கு ஒட்டிக்கொண்டு வெளியேற முடியாமல் இருப்பது போன்ற ஒரு நிலை.  சுவாமிஜி சொல்ல வருவது, ஈடுபாட்டுடன் வேலை செய்ய வேண்டும்தான். ஆனால் அந்த வேலையே நம்மை அடிமைப்படுத்தி விடக்கூடாது.

இதைச் சரியாகப் புரிந்து கொள்வோம்.வேலையில் சின்னப் பிரச்சினை ஏற்படும்போது சுவாமிஜி சொன்னதை  வைத்துக்கொண்டு ”ஒரு தொப்பி கீழே விழுந்த சாக்கில்” வேலையை விட்டு ஓட்டம் பிடிக்கக்கூடாது! “பொய்மையும் வாய்மை இடத்த” என்பது தவறாகப் பயன்படுத்தப் படுவது போல ஆகிவிடும் அது..

Wednesday, 26 July 2017

மென்மலரே! தூது சொல்! (உமா-அறுபதுகள் ஆரம்பத்தில்)

மென்மலரே! தூது சொல்!
(உமா-அறுபதுகள் ஆரம்பத்தில்)
மாலை இருளினில் மாய்கிறது-வட்ட
     வெண்ணில வின்னமும் தோன்றவிலை!
பாலைவன மனம் காய்கிறது!-அவள்
     பார்வையின் வெம்மையும் மாறவிலை!

மொட்டவிழ்ந்தே இதழ் வாசம் பரப்பியோர்
     மோகமெழுப்பிடும் மென்மலர் நீ!
கட்டவிழ்ந்தே மனம் காதல்வெறி கொளும்
     காவனச் சூழலில் தோன்றியவள்!

ஆவியொடே உடல் ஊடலுற்றே அந்த
     ஆவியை வாட்டிச் சுவைக்கிறதாம்!
பாவம்,அவன் உன்னில் பாதி என்றே அந்தப்
     பாவையிடம் சென்று தூது சொலு!

சுற்றிச் சுழல்கின்ற வட்டவிழிகளின்
     தண்மையை மாற்றிடும் சீற்றம் விட்டுச்
சற்றெனைக் கண்டிடும் ஓரத்து நோக்கினில்
     தெய்விகக் காதல் கனியவிடு!

அன்பெனும் ஓர் அமுதூற்றெடுத்தே வரும்
     ஆசை இதயத்தில் வற்றியதால்
தென்றலொடே சென்று தேனைப் பொழிந்தந்தத்

     தோகையைக் காதல் பேச விடு!

Monday, 24 July 2017

பணியின் மூலம் பேரானந்தம் (9)


கோடீஸ்வரருக்கு ஒரு குட்டு.

ஜான் ராக்ஃபெல்லர் என்பவர் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம். சுவாமிஜி சிக்காகோவில் இருந்தபோது பரஸ்பர நண்பர் ஒருவர் சுவாமிஜியைச் சந்திக்க வருமாறு ராக்ஃபெல்லரை வற்புறுத்திக் கொண்டிருந்தார். ராக்ஃபெல்லருக்கு அந்த ஹிந்து சன்னியாசியைச் சந்திக்க வேண்டுமென்று அப்படி ஒன்றும் பெரிய நாட்டமில்லை. நண்பர் விடுத்த அழைப்புகளை எல்லாம் புறக்கணித்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் அவர் செல்வச் சிகரத்தில் இல்லை என்றாலும் செல்வாக்கு மிக்கவர். தீர்மானமான கருத்துகள் உள்ளவர். அவரை இணங்க வைப்பது என்பது சுலபமில்லை.
ஒரு நாள், ஏதோ ஒரு வேகத்தில் அவர் சுவாமிஜி இருந்த இல்லத்துக்குள் கிடுகிடுவென நுழைந்தார்.. அங்கிருந்த பணியாளரை உரசித் தள்ளி விட்டு உள் அறைக்குள் நேரே பிரவேசித்து விட்டார். சுவாமிஜி ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். ராக்ஃபெல்லரை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை.
சிறிது நேரத்துக்குப்பின் அவருடன் உரையாடத் தொடங்கிய சுவாமிஜி அவருக்குச் சில அறிவுரைகள் சொன்னார் .சேமித்து வைத்துள்ள அத்தனை சொத்தும் ராக்ஃபெல்லருக்கே சொந்தமானதில்லை. அவர் ஒரு கருவி மாத்திரமே. இறைவன் அவருக்கு அத்தனை செல்வமும் கொடுத்திருப்பது பிறருக்கு உதவுவதற்காகவே. அவருக்கு அது ஒரு வாய்ப்பு.
“எனக்கு ஒருவர் புத்தி சொல்வதா? நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு இவர் யார்?”” என்றெல்லாம் குமுறியவாறே போனார் ராக்ஃபெல்லர். ”போய் வருகிறேன்” என்று சொல்லிக் கொள்ளக்கூட இல்லை.
என்றாலும் ஒரு வாரம் கழித்து மீண்டும் அவர்  சுவாமிஜியின் அறைக்குள் திடும்பிரவேசம் செய்தர். சுவாமிஜி அப்பொழுதும் தலை நிமிராமல் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். ராக்ஃபெல்லர் அவரது மேசை மீது ஓர் ஆவணத்தை விசிறி எறிந்தார். மிகப் பெரிய தொகை ஒன்றை ஓர் அற நிறுவனத்துக்கு நன்கொடையாகக் கொடுப்பதைப் பற்றிய விரிவான திட்டம் அது. “பார்த்துக் கொள்ளுங்கள்! இப்போது திருப்திதானே? நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்.” என்று முழங்கினார் அவர்.
சுவாமிஜி விழிகளை உயர்த்தக்கூட இல்லை. அந்த ஆவணத்தை எடுத்துப் படித்தார். நிதானமாகச் சொன்னார்,” நீங்கள் அல்லவா எனக்கு நன்றி சொல்ல வேண்டும்?”

பொது நலத்துக்காக அவர் வழங்கிய முதல் நன்கொடை அது. அதற்குப் பிறகு அவர் மாபெரும் கொடை வள்ளலாகப் பெயர் பெற்றது  நமக்கெல்லாம் தெரிந்ததே.

Saturday, 22 July 2017

பணியின் மூலம் பேரானந்தம் (8)


நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு!

கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட்டு
என்னாற்றும் கொல்லோ உலகு.
                     திருக்குறள்.
கடமை,கைம்மாறு (பிரதி உதவி) விரும்பாது. மழைக்கு உலகம் என்ன பிரதி உதவி செய்ய முடியும்?
பிறர்க்கு உதவி செய்தல் தம் கடமை என்று கருதுவோர் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்ப்பதில்லை .உலகைக் காக்கும் மழைக்கு உலகத்தார் என்ன கைம்மாறு செய்ய முடியும்?
எடுத்துக்காட்டு:
ஆரியன் அவனை நோக்கி ஆருயிர் உதவி யாதும்
காரியம் இல்லான் போனான் கருணையோர் கடன்மை யீதால்
பேரிய லாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்னார்
மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ வையம் என்றான்
(கம்ப ராமாயணம்-8403)
                     ஸ்ரீசந்திரன் உரை.

,நாம் ஏன் பிறருக்கு நல்லது செய்ய வேண்டும்?-இது ஒரு கோடிரூபாய்க் கேள்வி..
அறம் செய்ய விரும்புவது நல்லது. செய்ய விழைவது ,நமக்குள்ள சிறந்த ஊக்க சக்தி. எப்போது? பிறருக்கு உதவுவது நமக்குக் கிடைத்த பிரத்யேக சிறப்புரிமை என்பதை உணரும்போது. தந்தக் கோபுரத்தில் ஏறி நின்று கொண்டு, ”ஏய்! பரதேசி! இந்தா, எடுத்துக்கொள் பிச்சை!” என்று காசை வீசி எறிவது அல்ல அறம். வறுமை இல்லையேல் வண்மை இல்லாததாகி விடும் .இரப்பார் இல்லாவிட்டால் ஈவதற்கு எங்கே வாய்ப்பு? நம்மிடம் உதவி பெறுவதற்கு அந்த வறியவன் இருக்கிறானே என்று நன்றி செலுத்துவோம். நம்மை உயர்த்திக் கொள்வதற்கு அவன் ஒரு வாய்ப்பு தருகிறான் என்பதே உண்மை. ஆசீர்வதிக்கப்பட்டவன் ஏற்பவன் அல்லன். இடுபவனே! நம்மிடம் உள்ள தயாள குணத்தை-கருணையை- வெளிப்படுத்துவதற்கு, அவன் மூலம் தூய்மையும் செம்மையும் அடைவதற்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறதே என்று நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்.. நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியமும் நம்மைத் தூய்மைப் படுத்துகிறது; செம்மைப் படுத்துகிறது.
நாம் இடைவிடாது நல்ல காரியங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும் .ஏனெனில், நன்மை செய்வது ஓர் ஆன்மிகப் பயிற்சி.
நாம் உதவி புரிந்த எந்தப் பிச்சைக்காரனும் ,நமக்கு ஒரு பைசா கூடக் கடன்பட்டவனே இல்லை. நாம்தான் அவனுக்குக் கடன் பட்டிருக்கிறோம். நமது தயாளகுணத்தைப் பயன்படுத்த அவன் வாய்ப்பளித்தான் என்ற வகையில். நாம் உலகுக்கு நன்மை செய்திருக்கிறோம் என்றோ,அல்லது நம்மால் செய்ய முடியும் என்றோ, நாம் இன்னின்னாருக்கு உதவி செய்திருக்கிறோம் என்றோ எண்ணிப் பார்த்துக் கொள்வது தவறான சிந்தனையாகும். அப்படி நினைப்பது மூடத்தனம். மூடத்தனமான சிந்தனைகள் நமக்குத் துன்பமே விளைவிக்கும். ஒருவருக்கு உதவி செய்து விட்டு அவர் நன்றி சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர் நன்றி சொல்லவில்லை என்றால் மன வருத்தம் ஏற்படுகிறது.  நாம் செய்யும் காரியத்துக்குப் பிரதியாக ஏன் ஒன்றை எதிர்பார்க்க வேண்டும்? நாம் உதவி செய்யும் மனிதனுக்கு நாம் நன்றி செலுத்துவோம். அவனைக் கடவுளாகப் பாவிப்போம். சக மனிதனுக்கு உதவுவதன் மூலம் கடவுளை வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருப்பது எவ்வளவு பெரிய சிறப்புரிமை! உண்மையிலேயே பற்றற்று இருந்தோமானால், வீண் எதிர்பார்ப்புகள் வேதனைகள் அத்தனையிலிருந்தும் நாம் தப்பிவிடுவோம். உற்சாகமாக நல்ல காரியங்கள் செய்து கொண்டே போகலாம். எதிர்பார்ப்பின்றிப் பணி புரிபவனைத் துன்பமோ வேதனையோ அணுகாது.

சுவாமிஜியின் இந்த சிந்தனையை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி அவரது வரலாற்றில் வருகிறது. அதை அடுத்த இயலில் பார்ப்போம். 

Wednesday, 19 July 2017

பணியின்மூலம் பேரானந்தம் (7)


அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்!

……அன்ன யாவினும் புண்ணியம் கோடி
     ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்.
                     பாரதியார்.
    
பிறர் துயர் தீர்த்தலைக் கடமையாகச் சொல்வார் பாரதியார். பணத்தினால் மட்டும்தான் இந்தக் கடமையை ஆற்ற முடியும் என்பதில்லை. வாய்ச்சொல்லாலும் உபகாரம் செய்யலாம். வார்த்தையின் மகிமை பற்றி சுவாமி விவேகானந்தர் நிறையவே பேசுவார். சிந்தனைக்கும் சொல்லுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொண்டால் அரும்பெரும் சாதனைகள் புரியலாம் என்பார்.. அன்றாட வாழ்க்கையில் நாம் வார்த்தையின் சக்தியைப் பார்க்கிறோம். சுவாமிஜி சொல்லுவார்:” என் சொல்லின் அலைகள் காற்றின் வழியே உங்கள் செவிகளில் புகுந்து உங்கள் நாடி நரம்புகளைத் தொட்டு உங்கள் மனங்களில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. முட்டாள் என்று ஒருவனிடம் சென்று சொல்லிப்பாருங்கள்! அவன் முஷ்டியை ஓங்கி ஒரு குத்து விடுவது நிச்சயம். இதோ ஒரு காட்சி. துன்பவசப்பட்டு ஒரு பெண்மணி அழுது கொண்டிருக்கிறாள். மற்றொரு மாது அவள் அருகில் வந்து கனிவாகச் சில வார்த்தைகள் பேசுகிறாள். முதல் பெண்ணின் அழுகை நிற்கிறது. துக்கம் சந்தோஷமாக மாறுகிறது.”
இது சுவாமிஜி பேச்சுக்காகச் சொன்னதில்லை.
 நெருங்கிய உறவினரின் மரணத்தால் தாங்க முடியாத துக்கத்துடன் ஒரு பெண்மணி, சுவாமிஜியிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தபின் ஏதோ மந்திர சக்தி போல உற்சாகம் பெற்றுத் திரும்பிய நிகழ்ச்சி பதிவாகியிருக்கிறது.
அமெரிக்காவில் பயங்கரப் பொருளாதார நெருக்கடி. வங்கிகள் வீழ்ந்துவிட்டன. பங்குகள் சரிந்துவிட்டன. அத்தனையையும் இழந்து துன்பத்தின் எல்லை கண்ட ஒருவன், சுவாமிஜியின் உரையைக் கேட்டதும்,’”போனால் போகட்டும் போடா! நான் போய் உற்சாகமாக ஆக வேண்டிய காரியங்களைப் பார்ப்பேன்!” என்று கூறிப் புதுத் தென்புடன் சென்ற வரலாறும் உண்டு.
இதுதான் சொல்லின் ஆற்றல். வில்லின் ஆற்றலுக்கும் மேலானது!
இந்த ஆற்றலைப் புரிந்துகொண்டு, அதனை ஊருக்கு உதவியாக நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது சுவாமிஜியின் கருத்து.
இந்த ஆற்றலைக் கல்விப்பணிக்கு,”ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்த”லுக்குப் பயன்படுத்தலாமே?
அவ்வப்போதைய தேவைக்கு உதவுவது நல்லதே. நீடித்து நிற்கிறாற்போல் உதவுவது அதைவிடச் சாலச் சிறந்தது. ஒருமணி நேரத் தேவையைப் பூர்த்தி செய்வதை விட ஓராண்டுத் தேவையைப் பூர்த்தி செய்வது நல்லது. துன்பத்தை அடியோடு நீக்குவது அதனினும் உயரிய செயல். வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்..சரி. பசி மீண்டும் திரும்புமே? அதனால்தான் சொன்னார்கள் பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட மீன்பிடிக்கக் கற்றுக்கொடுப்பது சிறந்தது. .சுவாமிஜியும் கல்வி புகட்டுவதையே  அனைத்தினும் மிக உயர்ந்த பணியாகச் சொல்கிறார்.
சுவாமிஜியின் வாழ்க்கையையும் பாரதத்தின் வரலாற்றையும் புரட்டிப்போட்ட கன்யாகுமரித் தவத்தை ஒட்டி சுவாமிஜி வெளியிட்ட சில கருத்துகள்:
”பிறருக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் படைத்த பற்றற்ற துறவிகள் கிராமம் கிராமமாகச் சென்று கல்வியைப் பரப்ப வேண்டும். வாய்மொழிக் கல்வி மூலம் மிகவும் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைவரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வேண்டும்.. .ஏழைகள் பள்ளிக்கூடம் செல்லக்கூட வசதியில்லாத பரம ஏழைகளாக இருக்கிறார்கள். முகமது மலையை நோக்கி வராதபோது மலைதான் முகமதை நோக்கி வரவேண்டும்..”
முக்கியமாக தரமான கல்வியை ஏழை எளியவர்களுக்கு இலவசமாக வழங்கும் தலையாய பணியில் சேவாலயா தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.


Saturday, 15 July 2017

பணியின் மூலம் பேரானந்தம்(6)


செய்க பொருளை !
ஊருணி நீர்நிறைந் தற்றே-உலகுஅவாம்
பேரறி வாளன் திரு.
                     திருக்குறள்.
உலகமெல்லாம் வழ வேண்டும் என்ற ஒப்புரவு மிக்க பேரறிவாளனின் செல்வம் ஊரில் உள்ளார் நீர் உண்ணும் குளம் ,நீரால் நிறைந்து அனைவருக்கும் பயன்படும் தன்மைத்து.
                     ஸ்ரீசந்திரன் உரை.

பலருக்கும் ஒரு சந்தேகம். இலக்கு பற்றிச் சொல்கிறீர்கள். பணம் சம்பாதிப்பதை இலக்காக வைத்துக்கொள்ளலாமா,கூடாதா? பனம் சேர்ப்பது பாவச்செயல் என்றுகூட ஒரு கருத்து சொல்லப்படுகிறதே?
இது சம்பந்தமாக சுவாமி விவேகானந்தரின் கருத்தைத் தெரிந்து கொள்வோம்.
இல்லறத்தில் உள்ளவன் சமுதாயத்தைத் தாங்கிப் பிடிக்கும் கடமை படைத்தவன். .ஏழை எளியவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பொருளீட்டாத பெண்கள் எல்லாரும் அவனை நம்பித்தான் இருக்கிறார்கள். தனது இத்தகைய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அவனுக்கென்று ஒரு கடமை இருக்கிறது. இதற்காக அவன் பொருள் ஈட்ட வேண்டும். அதுமட்டுமில்லாமல், பொருள் ஈட்டுவது ஏதோ பாவம் என்பது போலத் தவறான எண்ணங்கள் காரணமாக, , கடமைகளை நிறைவேற்றுவதன் நிமித்தம் பொருளீட்டாவிட்டால் அவன் வாழ்வதில் பொருளே இல்லை. சுருங்கச் சொல்லப்போனால், சுற்றத்தார், தான் சார்ந்துள்ள சமுதாயம் இவர்களின் நலனுக்காகப் பணம் சம்பாதிக்கப் பாடுபடாதவன் கடமையிலிருந்து வழுவியவனே ஆவான்.
ஆயிரக்கணக்கானவர்கள் பொருள் சேர்க்காவிட்டால் நமது சமுதாயம் எப்படி இருக்கும் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கலாம். ஆதரவற்றவர் இல்லங்கள், அறச்சாலைகள், இவை எல்லாம் எப்படி உருவாகியிருக்கும்? எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாகாமல் போயிருக்கும்?
தக்காருக்கு உதவுவதற்காக, பிறர் நலம் பேண, சிரமப்பட்டு பணம் ஈட்டுவது ஒரு தவம் என்றே சொல்ல வேண்டும்.
செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்; நச்சப்படாதவன் செல்வம் நடுவூருள் நச்சுமரம் பழுத்தற்று என்ற மூதுரைகள் நினைவில் கொள்ளத்தக்கன.

இலக்கு நிர்ணயம் பற்றிப் பேசினோம். இந்த ஆண்டு இவ்வளவு பொருள் ஈட்டவேண்டும் என்று இலக்கு வைத்துக்கொள்ளலாமா?  கொள்ளலாம்.
இதற்கான உத்தியை ஒரு அறச் சிந்தனையாளர் கடைப்பிடிப்பதாக  ஒரு சொற்பொழிவாளர் சொல்லக்கேட்டேன். அவரது இலக்கு இந்த ஆண்டு எவ்வளவு தொகை தர்மத்துக்காக செலவிடவேண்டும் என்பது. மொத்த வருமானத்தில் 10% அறத்துக்காக செலவிட வேண்டும் என்று அவர் ஒரு கொள்கை வகுத்துக்கொண்டுள்ளார் .தர்ம காரியத்துக்காக 10% என்பதை வைத்து அவர் ஆண்டு வருமான இலக்கை வைத்துக் கொள்கிறாராம். ஆண்டுக்கு ஆண்டு, அறச்செயலுக்கான இலக்குத் தொகையும், வருமான இலக்குத்தொகையும் அதிகரித்துக்கொண்டே போகும் என்பதைச் சொல்லத்தேவையில்லை.

நல்ல வழியில் பணம் சேர்ப்பதும், அதை நல்ல வகையில் செலவிடுவதும் நமது கடமையின்பாற்படுவதே.