Monday, 9 October 2017

ஒரு சாமான்யனின் கீதை-18

ஒரு சாமான்யனின் கீதை—18
 A few takeaways from the Gita
(ராஜாஜிக்குப் பணிவான நமஸ்காரங்கள்)
கீதையில் சொல்லப்பட்ட யோகத்தின் அங்கங்களாவன:
(1)  இந்திரியங்களைக் காத்தல், சுத்தமான வாழ்க்கை ,தினசரி ஆசாரம்; அதாவது உபாஸனை, வேலை, ஆகாரம், ஓய்வு தூக்கம் முதலியவைகளில் திட்டப்படி நடந்துகொள்வது.
(2)  சுபாவத்தாலோ ,சமுதாயத்தில் தான் அடைந்த ஸ்தானத்தினாலோ, சந்தர்ப்பத்தாலோ, தனக்கு ஏற்பட்ட கடமைகளைச் சுயநலப் பற்றின்றி, ஆனால், கண்ணுங்கருத்துமாய்ச் செய்து முடித்தல்.
(3)  ஜயாபஜயங்களை சமபுத்தியுடன் அனுபவித்தல், கஷ்டங்களைக் கண்டு மனங்கலங்காமல்,துயரமோ மகிழ்ச்சியோ எதுவரினும் தைரியமும் அமைதியும் இழக்காமலிருக்க மனதைப் பழக்கிக் கொள்ளுதல்
(4)  மனதை இடைவிடாமல்  காத்து, காமம், குரோதம், ஆசை என்ற வேகங்களுக்கு இடங்கொடாமல் இருத்தல்
(5)  இப்படி உள்ளும் புறமும் சுத்தமாய் வைத்து மனதை ஸ்திரப்படுத்திக் கொண்டு, அவ்வப்போது அத்யாத்ம தியானம் செய்தல்
(6)  பகவானிடம் பூரணமாய்ச் சரணாகதி புகுதல்.


Saturday, 7 October 2017

ஒரு சாமான்யனின் கீதை--17

ஒரு சாமான்யனின் கீதை-17
சக்கனி ராஜமார்கமு!.
ஒவ்வொருவருக்கும் அவரவர் சேர்த்து வைத்த பழவினைகளுக்கேற்பவே குணங்கள் அமைகின்றன. சத்வம், ரஜஸ், தமஸ். இந்த குணங்களை ஒட்டியே அவரவர் சிரத்தை அமைகிறது. அதற்கிசையவே அவர்தம் செயல்பாடுகளும் அமைகின்றன.  நாம் விரும்பி உண்ணும் உணவு, , நமது உள்ளத்து உணர்ச்சிகள், வாழ்க்கையைப் பற்றிய நமது கண்ணோட்டம் இவற்றைக் கொண்டு நம்மை நாமே பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளலாம் .இந்தப் பரிசோதனை நமது குணமேம்பாட்டுக்கு உதவும் உளவியல்காரர்கள், “Egogram” என்றொரு கோட்பாட்டைச் சொல்வார்கள். நாமும் நமது குணங்கள் பற்றிய ஒரு வரைபடத்தை வரைந்து பார்த்துக் கொள்ளலாம்.(Character-o-gram). இதுவே ஆன்மிக முன்னேற்றத்துக்கான “சக்கனி ராஜ:மார்கமு”
வழிபாடு:
இறை வழிபாட்டில், சத்வ குணம் படைத்தவர்கள் இறைவனை நற்குண நாயகனாகவும் வாலறிவனாகவும் வழிபடுகிறார்கள். ரஜோகுணத்தவர்கள் தங்கள் ஆசைகள் நிறைவேறுவதற்காக,ம்அததற்கு உண்டான தேவதைகளை வழிபடுகிறார்கள். (குபேர யக்ஞம் போல!) தமோகுணம் படைத்தவர்கள், தங்கள் முறையற்ற ஆசைகள் நிறைவேறுவதற்காகவும், பிறரை அழிப்பதற்காகவும் பூத பிரேத பைசாசங்களை வழிபடுகிறார்கள் சாத்திர விதிகளிலிருந்து மாறுபட்டு வழிபடுபவர்கள் தங்கள் உடலை வருத்திக்கொள்கிறார்கள். காமமும் அகங்காரமும் நிறைந்த வழிமுறைகளில் ஈடுபடுகிறார்கள்.
உணவு:
ஆயுள், தூய்மை, வலிமை, ஆரோக்யம், உற்சாகம் இவற்றை வளர்க்கக்கூடிய ரஸமுடைய, பிசினுள்ள, கெட்டியான  உணவுகள் சத்வ குணத்தவர்க்குப் ப்ரீதியானவை.
வேதனை, துன்பம், நோய் இவற்றை விளைவிக்கக்கூடிய கசப்பு, புளிப்பு, உப்பு, அதிக உறைப்பு, அதிகச் சூடு கொண்டவை, உலர்ந்துபோனவை, எரிச்சல் உண்டாக்குபவை ஆகிய உணவுகளை ரஜோ குணத்தினர் விரும்புவர்.
பழையது, ரஸம் போனது, அழுகியது, கெட்டுப்போனது, பிறர் உண்டு மிஞ்சிய எச்சில்,அசுத்தமானது ஆகிய உணவுகளை ரஜோ குணத்தவர் நாடுவர்.
தவம்
:தவம் என்பது வாக்காலும், மனத்தாலும் உடலாலும் செய்யக்கூடியது. நேர்மை, தூய்மை, பெரியோரிடம் வணக்கம், புலனடக்கம், உயிர்களிடத்தில் அன்பு –இவை உடல் தவம்.
சத்தியமானதும் அன்பானதும் இதமானதுமான பேச்சு, நல்ல அறநூல்கள் படித்தல் ஆகியன வாக்கினால் செய்யும் தவம்..
மனதை அமைதியாக வைத்திருப்பதும், ,தூய எண்ணங்கள் கொண்டிருப்பதும், போக எண்ணங்களை விலக்குவதும் மனத்தினால் செய்யும் தவமாகும்.
இவை சத்வ குணத்தினருக்கு உரியன.
பிறருடைய நன்மதிப்புக்காகவும், லாபம் கருதியும்   இவற்றைச் செய்வது ரஜோ குணத்தினரின் இயல்பு.
பிறருக்குத் துன்பம் விளைவிப்பதற்காகவோ, பிடிவாத புத்தியாலோ நோற்பது-தமோகுணத்தினரின் செயல்.
தானம்:
கொடுப்பது கடமை என்றறிந்து கைம்மாறு கருதாமல்,தகுந்த காலமும்,இடமும் பாத்திரமும் அறிந்து செய்யப்படும் தானம் சாத்விக தானமாகும்.
கைம்மாறு கருதியோ பயனை எதிர்பார்த்தோ மனத்தில் வருத்தத்துடனோ கொடுக்கப்படும் தானம் ராஜசமாகும்.
தகாத இடத்தில், தகாத காலத்தில்,தகாதவருக்குச் செய்யப்படுவதும் இகழ்ச்சியுடனும் செய்யப்படும் தனம் தாமச தானமாகும்.
சாத்விக குணத்தை வளர்த்துக் கொள்வதும் செய்கிற செயல்கள் அத்தனையையும் இறைவனை மனத்தில் நினைந்தவாறு செய்வதுமே உயர் நெறி என்று உணர்ந்து செயல்படுவோமாக!


Thursday, 5 October 2017

ஒரு சாமான்யனின் கீதை--16

ஒரு சாமான்யனின் கீதை—16

கடையனுக்கும் கடைத்தேற்றம்!

‘கயமை’ என்கிறார் திருவள்ளுவர். அதைத்தான் அசுர ஸம்பத் என்கிறான் கீதாசார்யன். அதைப்பற்றிக் கொஞ்சம் நாமெல்லாம் புரிந்து கொள்கிற மாதிரி விஸ்தாரமாகவே சொல்கிறான்.
கயவர்களுக்கு எது தர்மம், எது அதர்மம் என்கிற விவஸ்தையே கிடையாது. அவர்கள் மனத்தில் எழுவதெல்லாம் அழுக்கு எண்ணங்களே. இவர்கள் பழக்கவழக்கங்கள் ,காரியங்கள் எல்லாமே அசுத்தமானவை. வாயிலிருந்து வரும் வார்த்தைகளோ, பொய், புனைசுருட்டு, குதர்க்கம்! இறைவன் ஒருவன் இருக்கிறான், ஒரு நியதிக்கு உட்பட்டுத்தான் இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது என்பதில் இவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. உலகத்தில் நடைபெறும் அத்தனைக்கும் அடிப்படைக் காரணம் காம இச்சைதான் என்ற அசையாத நம்பிக்கை உடையவர்கள் இவர்கள்.
இப்படிப்பட்ட சின்னபுத்திக்காரர்கள் எந்தக் கொடிய செயல்களுக்கும் அஞ்சுவதில்லை. இவர்கள் சமூக விரோதிகள்.,
ஒன்று கிடைத்தால் இன்னொன்று என்று இவர்கள் ஆசைக்கு முடிவே இல்லை. நல்லவர்கள் போல் நடிக்கும் பொய்யொழுக்கக்காரர்களான இவர்கள் செய்யும் எந்தக் காரியமும் நல்ல நோக்கத்துடன் அல்ல. தானம் தர்மம், ஹோமம் என்றெல்லாம் செய்தாலும் அத்தனையும் வெளி வேஷம் ,” பார்த்தாயா? எனக்கு எவ்வளவு செல்வம் இருக்கிறது? என்னைப்போல தர்மிஷ்டர்கள் யாருண்டு?” என்று பெருமை பீற்றிக் கொள்ளத்தான்!
காமத்தாலும்  விரோதத்தாலும் பேராசையாலும் இவர்கள் பண்ணாத அக்கிரமங்கள் இல்லை. அதர்ம வழியில் சொத்து சேர்த்துக் குவிக்கிறார்கள். தினம் தினம் இவர்களது தியானம், இன்றையக் கணக்குக்கு எனது செல்வம் இவ்வளவு, நாளைக்கு இவ்வளவு சேர்த்து விட வேண்டும்; இத்தனை விரோதிகளை அழித்துத் தரைமட்டம் ஆக்கி விட்டேன்; இன்னும் அழிக்க வேண்டியவர்கள் இன்னின்னார் பாக்கி இருக்கிறார்கள். அவர்களை அழிக்க என்ன சூழ்ச்சி செய்யலாம் என்பதுதான்! இதில் எதுவுமே சாஸ்வதம் இல்லை என்பதை அவர்கள் துளிக்கூடச் சிந்தித்துப் பார்க்காததுதான் வேடிக்கை.
இவர்கள் வேலை கடவுளை நிந்திப்பதே! அகங்காரம், அதிகாரம், அலட்சியம் ஆசைகள், ஆத்திரம் இவற்றின் வரிவடிவங்கள் இவர்கள்! இவர்களைத்தான்,”பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர்” என்று அபிராமிபட்டர் சொன்னார் போலும்!
இத்தகைய மனோபாவத்துடன் இவர்கள் பிறந்து பிறந்து இளைக்கிறார்கள். பிறவிக்குப் பிறவி இவர்கள் கீழ்நிலையை அடைகிறார்கள்!
இத்தனைக்கும் அடிப்படைக்காரணங்கள் என்ன?
காமம், குரோதம், பேராசை. இவைதான் ”கெடுநீரார் காமக்கலன்.”
இதற்கும் மூல காரணம் அறியாமையே. இதை நீக்கி விட்டால் இவர்களுக்கும் வெளிச்சம் கிட்டும். மிக விரைவாகவே கிட்டும்.
முரண்பாடாக இருக்கிறதே என்கிறீர்களா? இறைவனின் விளையாட்டு நமக்குப் புரியாதது. காரணம் புரியாத சில நிகழ்ச்சிகள் நடக்கத்தான் செய்கின்றன. எப்போதோ செய்த ஒரு சின்ன நல்ல காரியமாக இருக்குமோ? திடீரென்று ஏதோ ஒரு நிகழ்ச்சி, ஒரு வார்த்தை, மழைக்கு ஒதுங்கி இருந்த நேரத்தில் உபன்யாசகர் சொன்ன ஒரு தத்துவம், இப்படி ஏதாவது காதில்பட்டு வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறாற்போல் நடப்பது உண்டு.. இறைவனின் அவ்யாஜ கருணை (காரணமற்ற-அல்லது காரணம் நமக்குப் புரியாத-) கருணை என்பது இதுதான். . இத்தகைய நிலையைத்தான் தன்மேல் ஏற்றுக்கொண்டு அபிராமி பட்டர் பாடியிருக்கிறார்:
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன்கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்ட
நேசத்தை என்சொல்வேன் ஈசர்பாகத்து நேரிழையே
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இப்படி மனம் திரும்பி வருபவர்களுக்கு சீக்கிரமே உய்வு கிடைத்து விடுகிறது! சமர்த்தாக இருக்கிற பிள்ளையைவிட மனம் திருந்தி வருகிற Prodigal Sonக்குத்தான் விருந்துபசாரம்!
அறநூல்களை நமது வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்கிறது கீதை. அறநூல்கள் அத்தனையின் சாரமே கீதை. வையத்துள் வாழ்வாங்கு வாழ விரும்பும் ஒவ்வொருவரும் கீதையைப் படிக்க வேண்டும்; சிந்திக்க வேண்டும். அதன்படி நிற்க இடைவிடாது முயற்சி செய்ய வேண்டும்.
நம்மிடமுள்ள அசுர குணங்கள் நீங்கவும், தெய்வ குணங்கள் ஓங்கவும்- .
எத்தனை முறை விழுந்தாலும், மீண்டும் மீண்டும் எழுந்து, இறைவனை நோக்கிய பாதையில் நடை போடவுமான-ஒரே வழி-
அவனிடம் பிரார்த்தித்துக் கொள்வதுதான்!


Tuesday, 3 October 2017

ஒரு சாமான்யனின் கீதை--15

ஒரு சாமான்யனின் கீதை-15
ஏற்கவேண்டிய இருபத்தாறு
பண்பட்ட மனிதன். உலகத்தோடு ஒட்ட வாழ்கிறான். ஆன்மிகப்பாதையிலே நடைபோடுகிறான். அவன் ஏற்றுக்கொண்டு கடைப்பிடிக்கும் விழுமியங்கள் என்னென்ன? சொல்கிறான் கீதாசிரியன்.
அச்சமின்மை:
மனத்தூய்மை
ஞானத் தேடல்:
தானம்:
 புலனடக்கம்:
வேள்வி
அறநூல்களைக் கற்றல்
தவம்
நேர்மை
அகிம்சை
சத்தியம்
சினமின்மை
துறவு
அமைதி
புறங்கூறாமை
உயிர்களிடத்துக் கருணை
பிறன்பொருள் நயவாமை.
மென்மை
பழியஞ்சாமை
மன உறுதி
தைரியம்
பொறை
தளர்வின்மை
தூய்மை
வஞ்சகம் இன்மை
செருக்கின்மை
நல்லவண்ணம் வாழவேண்டும் என்று முனைபவன் ஒவ்வொருவனுக்கும் இந்தப்  பண்புகள் வழிகாட்டு நெறிமுறையாக அமையும்.
நம்மை நாமே சோதித்துப் பார்த்துக்கொண்டு நம் பாதையைச் சீரமைத்துக்
கொள்வதற்கு இந்த நெறிமுறைகள் உதவும்.

எப்படி வாழக்கூடாது என்பதற்கான எதிர்மறைப் பண்புகளையும் குணங்களையும்  கண்ணபிரான் விரித்துரைக்கிறான். அவற்றை அடுத்த இயலில் காண்போம்.



.



Monday, 2 October 2017

ஒரு சாமான்யனின் கீதை--14


ஒரு சாமான்யனின் கீதை—14
அறிந்தவனே அறிந்தவன்!
விசித்திரமானதோர் அரசமரத்தைக் கற்பனை செய்து கொள்வோம். தலைகீழான அரசமரம். வேர் எங்கோ மேலிருந்து வருகிறது. ஆரம்பம் அறியக்கூடவில்லை. கிளைகளும் இலைகளும் கீழ்நோக்கிப் படர்ந்துள்ளன. இந்த மரம் ஆழமாக வேரூன்றி உள்ளது. அழிவே இல்லாதது போலத் தோன்றுகிறது.
இந்த மரம் போன்றதுதான் நம் உலகியல் வாழ்க்கை. கிளைகளும் இலைகளும்,நமது குணங்கள், அவற்றின் மூலம் ஏற்படும் நமது வினைகள், புறப்பொருள்கள், புலன்கள் மனம், புத்தி, நான் என்று நினைத்துக்கொள்ளும் அந்தப் பொருள் அனைத்தும். இவை அனைத்துக்கும் ஆதாரமாக, புலன்களுக்கும் அறிவுக்கும் புலப்படாமல் இருப்பவனே பரமாத்மன். உடலின் உள்ளுறைந்து அதனை இயக்கும் ஜீவனுக்கும், ஜீவ சாக்ஷியாய் இருதயத்துக்குள் இருக்கும் ஈஸ்வரனுக்கும் மேற்பட்டவன் அவனே
பரம்பொருளின் மாய சக்தியால் ஜீவன் இயங்குகிறது. வினைகளும் அனுபவங்களுமாகிய வாஸனைகளைச் சேர்த்துக்கொள்கிறது. காற்றில் கலந்த வாசம், காற்றோடு கூடவே செல்வது போல, நமது சம்ஸ்காரமாகிய வாஸனைகள், ஜீவனோடு சேர்ந்து அடுத்தடுத்த பிறவிகளில் சேர்ந்து கொள்கின்றன. வாஸனைகளைத் தீர்க்க மற்றுமொரு பிறவி. அதனில் சேரும் வாஸனைகள். புனரபி ஜனனம் புனரபி மரணம். இதிலிருந்து எப்போது எப்படித்தான் விடுபடுவது?. ஸம்ஸாரமாகிய விருட்சத்தை வலுவான கோடரி கொண்டு வேரோடு வெட்டி வீழ்த்த வேண்டும். அப்போதுதான் இறைவனுக்கும் இறைவனான அந்த ஆதிமூலத்தை, பேரிறைவனை, புருஷோத்தமனை உணர்ந்து கொள்ள முடியும்.
வெட்டி வீழ்த்தக்கூடிய அந்த வலுவான கோடரி என்பது என்ன? ஞானமென்னும் கோடரி அது.செருக்கும் மோகமும் இல்லாமை..பற்றுகள் நீங்கப் பெறுதல். ஆத்ம விசாரம். இன்பதுன்பம் வேண்டுதல் வேண்டாமை என்ற இருமைகளிலிருந்து விடுபட்ட நிலை.

ஞானக்கோடரியால் ஸம்ஸார பந்தங்களை நீக்கியவனே புருஷோத்தமனை அறிகிறான். அவனை அறிந்தவனே “அறிந்தவன்” 

Friday, 29 September 2017

ஒரு சாமான்யனின் கீதை--13

ஒரு சாமான்யனின் கீதை—13
குணங்களை என் சொல்வது?
அனைத்துமே அறுதியில் பரமாத்மன்தான் என்கிறோம். அப்படியிருக்க எத்தனை விதமான மனிதர்களைப் பார்க்கிறோம்?  ஏன் இத்தனை வேறுபாடுகள் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
இதற்குக் கீதையில் விடை இருக்கிறது. அதற்கும் மேலாக, நாம் இப்போது பார்க்கப்போகும் பகுதி, முழுமையான ஒரு சுய முன்னேற்ற இயல் என்று சொல்ல வேண்டும்.
வேறுபாடுகள் குணங்களின் அடிப்படையில் எழுகின்றன. ஸத்வம், ரஜஸ்,தமஸ் என்று மூன்று வகையான குணங்கள். செயல் அடங்கிய நிலை; செயல்துடிப்பு நிறைந்த நிலை; செயலற்ற நிலை. இந்த குணங்கள் நம் ஒவ்வொருவரிடமுமே வேறுவேறு பட்ட அளவில் உள்ளன. ஒருவரிடமே ஒவ்வொரு சமயத்தில் வித்தியாசமான கலவை அமைகிறது.
ஸத்வம் ரஜஸ்,- தமஸையும், ரஜஸ்,தமஸ்-ஸத்வத்தையும், தமஸ்,ஸத்வம் ,ரஜஸையும் மிஞ்சி மேலெழும்ப முயலும் தன்மை படைத்தன. எந்தக் குணம் மேலோங்கியிருக்கிறதோ, அதுவே அந்த மனிதனுக்கு, அல்லது அந்த சந்தர்ப்பத்தில் அவனுடைய குணமாகக் கொள்ளலாம்.
இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொன்னால், ஸத்வ குணம், அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம் என்னும் நிலையாகும். ரஜஸ் பரபரப்பு, குழப்ப சிந்தனைகள்,தெளிவான நோக்கம் இல்லாமல் எதையோ இழுத்துப்போட்டுக்கொண்டு அலமந்து கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கும். தமஸ்-அறியாமை, அலட்சியப்போக்கு, இவை என்று சொல்லலாம்.
ஏன் இப்படி குணங்கள் வேறுபடுகின்றன?
 மரணத் தறுவாயில் எந்த குணம் மேலோங்கியிருந்ததோ அதற்கேற்ப பிறவி வாய்க்கும் என்பார்கள்.  தவிரவும் முன் ஜன்ம எண்ணங்கள், அனுபவங்கள், வினைகளின் பதிவுகளும், அடுத்தடுத்த பிறவிகளில் இழுத்துக்கொண்டு வரப்படுகின்றன என்பதும் கூட. நாம் செய்ய வேண்டியது, நமது குணங்களைக் கவனித்து ஆராய்ந்து, தமஸை ரஜஸாகவும், ரஜஸை ஸத்வமாகவும் உயர்த்திக் கொள்ள வேண்டியது.

இப்போது நம் முன் உள்ள கேள்வி, நமக்கு இந்த குணங்கள் இயல்பாக அமைந்தவை என்றால், நாம் எப்படி மாற்றிக்கொள்ள முடியும்?
திருவள்ளுவரே இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கிறார்.” ஊழிற் பெருவலி யாவுள?” என்றார். மறுமொழியையும் அவரே சொல்லி விட்டார்
“ஊழையும் உப்பக்கம் காண்பர்-உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.
கடந்தகாலப் பதிவுகள் நம் குணங்களை நிர்ணயிக்கின்றன. குணங்களே நமது சூழ்நிலையை வகுக்கின்றன. இந்தக் கருத்து நமக்கு ஒரு வெள்ளிக்கீற்றைத் தருகிறது. நமது கடந்தகாலச் செயல்பாடுகள் நமது இன்றைய விதியை அமைக்கின்றன என்றால், நமது இன்றைய செயல்பாடுகளைச் சீரமைத்துக்கொள்வதன் மூலம் நமது எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம். நமது விதியைச் செதுக்கும் சிற்பி நாமே.
குணங்களை நேரடியாக மாற்ற முடியாது. எனினும் மன உறுதியுடன் நமது செயல்களை அமைத்துக்கொள்ளலாம். பிறருக்கு உதவுவது, நல்ல காரியங்களைச் செய்வது போன்ற நற்செயல்களைச் செய்து வரும்போது குணங்களில் முன்னேற்றம் ஏற்படும். இது ஒரு சக்கரச் சுழற்சி.
செயல்கள்-> பழக்கம்-> குணம்;> எண்ணம்-> செயல்கள்->பழக்கம்->குணம்->……..
சுவாமி சின்மயானந்தர் இதை ஒட்டி இன்னுமொரு நல்ல கருத்தைச் சொல்லியுள்ளார்கள்.
நமது குழந்தைகளுக்கு, ஆரம்ப முதலே,பெரியவர்களுக்கு மரியாதை-தலைமையிடம் பணிவு-பொய் கூறாமை-.நல்ல புத்தகங்களைப் படித்தல்-போன்ற செயல்பாடுகளைப் போதித்து  நல்ல குணங்களை உருவாக்கினால் எதிர்காலத் தலைமுறை சிறக்குமே?
தமஸை ரஜஸாகவும், ரஜஸை ஸத்வமாகவும் உயர்த்திக் கொள்ளலாம். எனினும் ஸத்வகுணமும் ஒரு தளையே. அதினின்றும் கூட விடுபட்டால்தான், ஆன்மிக நிறைவை எய்த முடியும்.
அஸதோமா ஸத்கமய,
தமஸோமா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோமா அம்ருதம்கமய
என்று அந்த ஆதிப் பரம்பொருளையே பிரார்த்திப்போமாக!

,

Thursday, 28 September 2017

ஒரு சாமான்யனின் கீதை--12

ஒரு சாமான்யனின் கீதை—12
இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்?
பருப்பொருள்களும் ,மனிதனின் புலன்களும்,  மனமும், புத்தியும், நான் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய entity யும் களம் எனலாம். கீதா வாசகப்படி க்ஷேத்ரம்.
உடலுள் உறைந்து அசைவற்ற களத்தை அறிந்து, இயக்கி ஆட்சி செலுத்தும்  ஜீவ சக்தியே கள நாயகன்; க்ஷேத்ரக்ஞன்.
வேறுவிதமாகச் சொல்வதானால், அறியப்படும் அனைத்தும் க்ஷேத்ரம். அறிகின்ற தத்துவம் க்ஷேத்ரக்ஞன்.
க்ஷேத்ரக்ஞன் இல்லாத க்ஷேத்ரம் வெறும் ஜடமே. அதே போல, க்ஷேத்ரம் என்ற கருவிகள் இல்லாமல் க்ஷேத்ரக்ஞனுக்கு இயக்கம் இல்லை.
ஜீவாத்மா என்னும் க்ஷேத்ரத்தின் மூலம் இன்பம் ,துன்பம், கோபம், மோகம், பொறாமை, அமைதி, படபடப்பு அச்சம் , இன்னும் ஆயிரமாயிரம் புயல்களை அகவெளியிலும் புற வெளியிலும்  மனிதன் அனுபவிக்கிறான்.
தனித்தனி ஜீவாத்மாக்களாகி அவற்றின் மூலம் செயல்படுவது வாலறிவன் என்னும் சுத்த சைதன்யமே. இந்தக் குறி குணமற்ற பரம்பொருள் ஜீவனை நமக்குள்ளே உறைந்து பற்பல அனுபவங்களையும் அனுபவிக்கச் செய்யும் பரமதத்துவம்..
ஜீவாத்மா உலகாயதத்தில் தன்னை ஒன்றுபடுத்திக்கொண்டு, தனது பரமாத்ம நிலையை மறந்து விடுகிறது.
ஜீவன் தன் தெய்வத்தன்மையை உணர்ந்து கொள்வதுதான் அறுதிக் குறிக்கோள்.
தன்னில் தான் லயித்து ஒருமைப்படும்போது இந்த ஞான வெளிச்சம் சித்திக்கும்.
இந்த நிலையை அடைய சாதகம் புரிய வேண்டும். இந்த சாதகம்-பயிற்சிக்கான அடிப்படைத் தகுதிகள் என்ன?
கண்ணபிரான் பல  பல பண்புகளை அடுக்கிக் கொண்டே போகிறான்.. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால்- மனத்துக்கண் மாசிலன் ஆதல். நல்லவனாய் இருத்தல்; நல்லதே செய்தல். பகவான் பிரியத்துக்கு ஏற்றவர்களாக நடந்து கொள்ளுதல்!
இந்த அடிப்படைத் தகுதியை வளர்த்துக்கொண்டு ஆன்ம ஞானம் பெற- இறை நிலையை நோக்கி முன்னேறுவதற்கான- வழிமுறைகள் என்ன?
·         புறப்பொருள்களிலிருந்து , அனுபவங்களிலிருந்து விலகி நின்று தனித்திருந்து பார்க்கும் தன்மை. இதற்கான மன ஒருமைப்பாட்டுக்கு வழி-தியானம்.
·          ஆத்ம விசாரம். சான்றோர் தொடர்பு, ஆன்மிக நூல்கள் படித்தல், சிந்தித்தல்.
·         ஊருக்கு உபகாரமான காரியங்களை, பலனில் பற்று வைக்காமல் ஆற்றும் கடமை வேள்வி.
·         நம்பிக்கையோடு கூடிய பிரார்த்தனை.
இந்த வழிமுறைகள் ஒன்றோ, பலவோ அனைத்துமோ ஏற்ற வழிமுறைகள். இன்னும் சொல்லப்போனால், இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. பல வழிகளி.ல் ஒன்றின் மீது ஒன்று மீதூர்பவை.
இவ்வழிகளில் கிடைக்கக்கூடிய ஆனந்தம் விண்டுரைக்க முடியாதது. .”ஒன்று பரம்பொருள்; நாமதன் மக்கள்; உலகின்பக்கேணி” என்ற அனுபூதியினால் வரும் பரமானந்தம்.

இந்த நிலை வரும்போது-பந்தமில்லை,பந்தமில்லை,பந்தமில்லை, பயமே இல்லை. இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்?